பாமக, அதிமுகவின் இனத் துரோகங்கள்!
தமிழர்களுக்காக போராடி சிறை சென்று தியாகத் தழும்புகளை ஏற்ற இரண்டு தலைவர்கள் தமிழ்நாட்டைக் காப்பாற்ற இப்போது களம் இறங்கி இருக்கிறார்கள்.
அந்த இரண்டு தலைவர்களுக்கும் நீங்கள் வந்துதான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று பச்சைக்கொடி காட்டிக் கொண்டு நிற்கின்றன சில அரசியல் கட்சிகள்.
அந்த இரண்டு தலைவர்கள் யார் தெரியுமா? ஒருவர் அமித்ஷா; மற்றொருவர் ஆடிட்டர் குருமூர்த்தி. உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை மறதி மனநோய்க்காரர் “செலக்ட்டிவ் அம்னீசியா” என்று துணிச்சலாகக் கூறினார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா
அந்த ஜெயலலிதாவின் தொண்டர்களை நீங்கள்தான் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா-விடம் மன்றாடி மனு போட்டுக் கொண்டிருக்கிறார் தினகரன்.
ஜெயலலிதாவின் படத்தை அவர் உயிருடன் இருக்கின்ற வரை சட்டையிலும், பேனாவிலும் சொருகிக்கொண்டு இருந்தவர்கள் இவர்கள்தான். தமிழ்நாட்டில் அமையப்போவது பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அடித்துச் சொல்லி எடப்பாடியை வாய் மூட வைத்து விட்டார் அமித் ஷா.
அதிமுக ஆட்சிதான் அமையப்போகிறது என்று அவ்வப்போது உச்ச கட்டையில் பேசிக்கொண்டிருக்கும் எடப்பாடிக்கு, இனிமேல் அப்படிப் பேசினால் என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள் என்று மதுரை கூட்டத்தில் எச்சரிக்கை செய்துவிட்டு போயிருக்கிறார் அமித்ஷா.
பார்ப்பனர்களைக் கட்சியிலே சேர்க்க மாட்டோம் என்று சொன்ன மருத்துவர் ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி இடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
பத்திரிகையாளர்களிடம் துப்பறியும் நாவலைப் போல் விறுவிறுப்பான கதைகளைப் பேட்டியாக அளித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு அரசியலைப் பார்ப்பனர்களிடமும், பனியாக்களிடமும் ஒப்படைத்துவிட்டு வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக தமிழர் உரிமைகளைப் பலிக்கடாவாக்கத் துடிக்கின்றன இனத் துரோக சக்திகள்.
தமிழ்நாட்டு மக்கள் இந்த துரோகங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியார் முழக்கம் 12062025இதழ்
