சடலங்களைை இடுகாடு வளைை சுமந்து செசல்கிறாார்கள் “மரபுகளைைத் தகர்க்கும் திவிக பெெண்கள்‌

தமிழ்நாட்டில் பெரியாரியப் பெண்கள் பண்பாட்டு புரட்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இந்து ஆங்கில நாளேடு இதை சுட்டிக்காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் சடலங்களை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த பெண்கள் இடுகாடு வரை சுமந்து சென்று எந்த வித சடங்கு சம்பிரதாயம் இன்றி உடலை அடக்கம் செய்து வருகிறார்கள். பெண்கள் சுடுகாட்டுக்கு போவதே சமூகம் தடைச் செய்து உள்ளது.

தடையை தகர்த்து சேலம் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 100-க்கு மேற்பட்ட சடலங்களை பெண்களே சுமந்து சென்று இறுதி நிகழ்வுகளை செய்துள்ளனர் என்று இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளிட்டுள்ளது. (மார்ச் 10, 2025).

பெரும்பாலான மதங்கள் பெண்களை சுடுகாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணத்தில் கூட இடுகாடு செல்ல முடியாது. ஆனால் சேலம் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெண்கள் சடலங்களை சுடுகாடு சுமந்து சென்று மத மரபுகளை உடைத்து இருக்கிறார்கள்.

இந்த தடையை உடைப்பது எங்களுடைய இயக்கம் தான் வெளிக்காட்டி செயல்பட்டு வருகிறது, என்று திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறினார். 2004 ஆண்டு என்னுடைய உறவினர் இறந்த போது இறந்தவரின்‌ மகளை சுடுகாடு சென்று தீ மூட்டுவதற்கு நாங்கள் ஊக்குவித்தோம்.

பின்னர் 2013 -ல் என்னுடைய தாயார் மறைந்த போது எனது தங்கையை சிதைக்கு தீ மூட்ட செய்தோம். இடுகாட்டில் எவ்வித மூடச் சடங்குகள் இன்றி சடலங்கள் எரியூட்டப்பட்டன என்று கொளத்தூர்‌மணி கூறினார்.

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மகளிரணி அமைப்பாளர் ஓ.சுதா இது பற்றி கூறுகையில் “ 2013 ஆண்டில் இருந்து நான் இதைச் செய்து வருகிறேன் என்னுடைய கணவரும் திவிக உறுப்பினர் இதற்கு உறுதுணையாக இருக்கிறார். ”கழக தோழர்கள் இல்லங்களில் இறப்பு நிகழும் போது எல்லாம் பெண்கள் தான் சடலங்களை சுமந்து செல்வோம் இதை பார்த்த இயக்கத்தை சாராத பெண்களும் எங்களுடன் இடுகாடு வரை வருவதுண்டு” என்றார்.

கழகத்தின் மகளிரணியை சேர்ந்த சி.சரஸ்வதி 2010 -ம் ஆண்டு முதல் இந்த பண்பாட்டுப் புரட்சியை செய்து வருகிறோம். எங்கள் அமைப்பை சார்ந்த காயத்திரி, கோமதி ,அழகேஸ்வரி, இந்திராணி ஆகியோருடன் இணைந்த இதைச் செய்கிறோம். கடந்த 15 ஆண்டுகளாக எங்களது பெண்கள் குழு கொளத்தூர், கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சடலங்களை அடக்கம் செய்துள்ளது.

மற்றொரு பெண் தோழர் சுதா கூறுகையில் இதற்காக குடும்பத்தில் கடும் எதிர்ப்புக்களை சந்திக்க நேர்ந்தது என்கிறார் என்னைடைய தந்தை எங்கள் வீட்டிற்கு வந்தால் சில நிமிடங்கள் மட்டும் பார்த்துவிட்டு திரும்பி விடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். என்னுடைய சகோதரர் என்னுடன்‌ பேசுவதையே நிறுத்தி விட்டார். ஆனாலும் நான் பெரியார் கொள்கை உறுதியுடன் செயல்படுத்தி வருகிறேன் என்றார்.

மரண செய்தி வந்த உடனேயே எங்களுடைய கழக பெண்கள் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விடுவார்கள் என்று கொளத்தூர் மணி கூறினார். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிந்தால் நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறிய கொளத்தூர் மணி, சடலங்களை எரியூட்டிய பிறகு ஆன்மா, மோட்சத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்புவோம். எங்களுடைய கழக பெண்கள் 100-க்கும் மேற்பட்ட சடலங்களை தமிழ்நாடு முழுவதும் சடங்குகள் இன்றி சுமந்து சென்று அடக்கம் செய்யதுள்ளனர் என்று கூறினார்.

ஆங்கில இந்து நாளேடு மட்டுமின்றி D/W தமிழ், முரசொலி என பல ஊடகங்களில் திராவிடர் விடுதலைக் கழகப் பெண்களின் இந்த பணி செய்தியாக வெளியாகி பலரது கவனிப்பையும் பெற்றுள்ளது.
பெரியார் முழக்கம் 13032025இதழ்

You may also like...