அரசியலமைப்பின் மீது உறுதியேற்ற அமைச்சர்கள்!

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை ஜூன் 9ஆம் தேதி பதவியேற்றது. இசுலாமிய வெறுப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இப்போது தனது அமைச்சரவையிலும் ஒரு இசுலாமியருக்கு கூட இடம் அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி பாஜகவின் சார்பாக அமைச்சர்களாகி இருக்கும் அனைவரும் கடவுளின் பெயராலேயே பதவியேற்றுக் கொண்டனர். ஆனாலும் இது முழுமையான பாஜக ஆட்சி இல்லை. கூட்டணி ஆட்சிதான் என்பதை உணர்த்தும் விதமான நிகழ்வுகளும் பதவியேற்பில் நடந்திருக்கின்றன.
இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சியின் ஜிதன்ராம் மாஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜிவ் ரஞ்சன், அப்னா தளம் கட்சியின் அனுப்பிரியா, தெலுங்குதேசம் கட்சியின் சந்திரசேகர், இந்தியக் குடியரசு கட்சியின் ராம்தாஸ் அத்வாலே ஆகிய 5 பேரும் அரசியலமைப்பின் மீது உறுதியேற்று ஒன்றிய அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இவர்கள் யாரும் பதவியேற்பின்போது கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுக்கொள்ளவில்லை. இவர்கள் அனைவருமே பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் சார்பாக அமைச்சர்கள் ஆகியிருப்பவர்கள்.
அதுமட்டுமல்ல, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மேலும் உதாரணமாக, இந்தியாவின் தெற்கு, கிழக்கு, வடக்கிழக்கு மாநிலங்களில் இருந்து அமைச்சர்களாகியிருக்கும் பலர் இந்தியைத் தவிர்த்துவிட்டு, ஆங்கிலத்தில் பதவியேற்றனர். பாஜகவில் இருக்கும் சர்பானந்தா சோனாவால், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றவர்கள் கூட ஆங்கிலத்தில்தான் பதவியேற்றனர். இந்த பன்முகத்தன்மை தொடர வேண்டும். இந்தி ஒருபோதும் தேசிய மொழி ஆகாது.

பெரியார் முழக்கம் 13.06.2024 இதழ்

You may also like...