பாசிச பாஜகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவோம் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் பரப்புரை

கழகத் தலைமைக்குழுக் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலத்தில் 02.02.2024 அன்று முகில் நகரில் கழகத் தோழர் சீனிவாசன் இல்லத்தில் நடைபெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இணைய வழியாக (Skype) கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி:- எதிர்வரும் 2024 – நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கழகம் சார்பில் முன்னெடுக்க வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் முன்னெடுக்கவுள்ள பரப்புரைக்கான செயல் வடிவங்கள், முழக்கங்கள், பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட உள்ள துண்டறிக்கையில் இடம் பெற வேண்டிய கருத்துக்களை முன்வைத்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பரப்புரை இயக்கத்துக்கான துண்டறிக்கையில் இடம்பெற வேண்டிய செய்திகளை தலைமைக்குழு முன் சமர்ப்பித்தார்.

நிறைவாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” எனும் முழக்கத்தோடு பரப்புரை இயக்கங்கள் வழியாக மக்களை நேரடியாக சந்தித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வாதிகார பாசிச பாஜக ஆட்சியின் கொடுமைகள் குறித்தும், மீண்டும் பாசிச பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் இந்த நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து குறித்தும் எடுத்துரைப்பதுடன், இந்த ஆபத்தைத் தடுக்க தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது வாக்குகளை செலுத்தி 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெற செய்வதென முடிவு செய்யப்பட்டது.

வருகிற பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 25 வரை தமிழ்நாடு முழுவதும் கழகம் சார்பில் பரப்புரை இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தேர்தல் பரப்புரைக்கான துண்டறிக்கைகளை அச்சிடுதல், பரப்புரையில் ஈடுபடும் கழக செயல்வீரர்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டிய தகவல்கள், புள்ளி விபரங்கள், திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து  புத்தகம் ஒன்றை தயாரித்து வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் புரட்சிப் பெரியார் முழக்க சந்தா சேர்ப்பு, கழக  செயலவைக் கூட்டத்தை மார்ச் 17 அன்று திருச்சியில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் (Skype), தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மயிலாடுதுறை இளையராஜா, சென்னை உமாபதி, காவலாண்டியூர் ஈஸ்வரன், சூலூர் பன்னீர்செல்வம், மேட்டூர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 08022024 இதழ்

You may also like...