7. ஜஸ்டிஸ் கட்சி வேலைத்திட்டம் பெரியார் வகுத்தது

1931 வருடம் செப்டம்பர் மாதம் சென்னையில் பொப்பிலிராஜா சாஹெப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஜஸ்டிஸ் மகாநாட்டிலும், 1935 வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி பொப்பிலிராஜா சாஹெப் அவர்கள் பங்களாவில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கமிட்டியிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் திட்டங்கள்.

  1. விவசாயிகளைக் கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும் அவர்கள் மறுபடியும் கடன்காரராகி கஷ்டப்படாமல் இருக்கவேண்டிய காரியங்களை கடனுக்காக கடன்காரர்களை பூமியைச் கைப்பற்ற முடியாமல் செய்வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதை எல்லாம் செய்ய வேண்டும்
  2. அநியாய வட்டி லேவாதேவிக்காரர்களால் விவசாயிகள் அழிந்து போகாமல் இருக்கும்படி கூட்டுறவு நாணைய ஸ்தாபனங்களையும், நில அடமான பாங்குகளையும் தாராளமாகப் பெருக்க வேண்டும். நில அடமான பாங்கை மாகாணம் பூராவும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி அதை ராஜாங்கத்தாரே நடத்த வேண்டும்.
  3. சொத்துரிமை சம்பந்தமாக விவகாரங்களை குறைப்பதாகச் சொத்து பாத்தியங்களை குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை சர்க்கார் வைத்திருக்க வேண்டும். அன்றியும் நிமித்த மாத்திரமாகவும் மகாணையாகவும் எழுதி வைக்கப்பட்டது என்று எதிர் வழக்கு வாதாடும் (யசிஹிபுனிணூ) முறையை இல்லாமல் செய்ய வேண்டியதோடு அப்படிப்பட்ட வாதங்களைக் கோர்ட்டுகளில் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்துவிட வேண்டும்.
  4. விவசாயக்காரர்கள் விளைவின் பயனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர் மத்திய வியாபாரிகள் ஆகியவர்களை விலக்குதல் செய்து விளைபொருள் சாமான்களை வாங்குபவர்களுடன் நேரில் கலந்துகொள்ளத் தக்க ஸ்தானங்கள் ஏற்படுத்தி நல்ல விலையை விவசாயிகளே பெறும்படியாகச் செய்யவேண்டும்.
  5. பொது ஜனங்களுடைய உபயோகத்துக்காக இருந்து வரும் ரயில்வே, தந்தி, தபால், தண்ணீர் சப்ளை, எல்க்டரிசிட்டி முதலியவைகளை சர்க்கார் எப்படி நிர்வகித்து வருகிறார்களோ அந்த முறையே இனியும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப்படுத்தி எப்போதும் சர்க்காரலேயே நடந்து வரும்படி செய்யவேண்டும்.
  6. இன்ஷுரன்ஸ் விஷயத்தில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு சர்க்கார் செய்து கொடுத் திருக்கும் சௌகரியத்தை அதாவது போஸ்டாபீசைப்போல் மற்ற ஜனங்களும் அடையும்படியாகச் செய்யவேண்டும்.
  7. தேசப் பொது மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் அதற்கேற்ற வரும்படி கிடைக்கும்படி வரும்படி விகிதத்தை நிர்ணயிக்கவும் முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.
  8. குறிப்பிட்ட காலந்திற்குள் சகல மக்களும் ஆரம்பப் படிப்பு ஏற்படும்படி செய்து விடவேண்டும்.
  9. மதுபான ஒழியும்படியாகக் கூடிய முயற்சிகளையும் சட்டங்களையும் செய்துவிடவேண்டும்.
  10. மனித சமூகத்தில் இருந்து வரும் தீண்டாமையையும் பிறவி காரணமாக உள்ள வித்தியாசக் கொடுமைகளையும் அடியோடு ஒழித்து விடவேண்டும்.
  11. அரசியல் உத்தியோகங்கள் இந்த மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார்களுக்கும் அவரவர்கள் ஜனத்தொகை பெருக்கத்துக்குத் தக்கபடியும் அரசியல் லக்ஷியத்துக்குத் தக்கபடியும் கிடைக்கும்படியாகச் செய்யவேண்டும்.
  12. பூமி வரி விதிக்கும் முறையானது எல்லா மக்களுக்கும் சமமான வரிப்பளுவாய் இருக்கும்படியாகவும் அவசியமான இடங்களில் விலக்கு செய்யும்படியானதாகவும் மாற்றி அமைக்க வேண்டும். (அதாவது ஏழை குடியானவர்களுக்கு கொஞ்ச விகிதமும் இருக்கவேண்டும்.)
  13. முனிசிபாலிட்டிகளுக்கும், கூட்டுறவு ஸ்தாபனங்களுக்கும், ஜனங்களுக்கு இன்னும் அதிகமான காரியங்கள் செய்யும்படியான சுதந்தரங்கள் கொடுத்து அவைகளைச் சர்க்கார் அதிகாரிகளின் மேல் பார்வையில் நடைபெறச் செய்யவேண்டும்.
  14. தற்கால நிர்வாக முறையானது மக்களுக்கு மிகவும் பாரமாக இருப்பதால் நியாயமான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயல வேண்டியதோடு சம்பளங்களை இந்திய சராசரி வாழ்க்கையையும் இந்திய பொருளாதார நிலைமையும் கவனித்து ஏற்படுத்த வேண்டும்.
  15. இந்த காரியங்கள் நடைபெறும் பொருட்டு அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு இக்கொள்கைகளைப் பொது ஜனங்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்யவேண்டும்.

குடிஅரசு, துணைத்தலையங்கம்- 22.1.1939

You may also like...