2. தென்னிந்திய நலவுரிமைச் சங்க 14-வது மாநாடு தமிழரைத் தட்டியெழுப்பும் தலைமைப் பேருரை பெரியார் ஈ.வெ.ரா முழக்கம்

அருமைத் தோழர்களே!

தேசீயம், ஆத்மார்த்தம் என்னும் பெயர்களால் ஒரு சிறு கூட்டத்தினரால் ஏமாற்றப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும், சமுதாயம், கல்வி, செல்வம், அரசியல் இத்துறைகளிலே பின் தள்ளப்பட்டும், தாழ்த்தப்பட்டும், தீண்டப்படாதவராகவும், கீழ் ஜாதியாராகவும், மிலேச்சர்களாகவும், பிறவி அடிமை (சூத்திரர்) களாகவும் இழிவுபடுத்தி வைக்கப்பட்டுள்ள 100-க்கு 97 பகுதியுள்ள இம்மாகாணத்தின் பழம் பெருங்குடிகளும், பலகோடி மக்களுமான நம்மவரின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்டுள்ள மாபெரும் ஸ்தாபனத்தின் பெயரால் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்கு அளித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்

தென்னிந்திய நலவுரிமைச் சங்கமென்னும் இந்த ஸ்தாபனமானது இன்றைக்கு  22 வருடங்களுக்கு முன் அதாவது 1916-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 தேதியன்று தோற்றுவிக்கப் பட்டதாகும்.

இதை ஆரம்பித்தவர்கள் முதிர்ந்த அனுபவமும், சிறந்த அறிவும், நிறைந்த ஆற்றலும், மக்கள் உண்மை விடுதலை பெற்று உயர்நிலையடைந்து இன்பமெய்தி வாழவேண்டும் என்ற பேராதரவு முடைய சான்றோர்களாயிருந்ததோடு கூட சிறிதும் தன்னலமற்ற பெருந்தியாகிகள் என்பதையும், அவர்கள் இவ்வியக்க வளர்ச்சிக்கு எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதையும் உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை.

இந்த ஸ்தாபனத்தை அவர்கள் ஏற்படுத்திய காலை நாம் எந்நிலையில் இருந்தோம் என்பதும், இத்தகைய ஒரு இயக்கத்திற்கு அக்காலத்தில் எவ்வளவு அவசியம் இருந்தது என்பதும், இன்றுள்ள நம் வாலிபர்களுக்கோ,  அன்றி பள்ளிப்படிப்பை விட்டவுடன் தேச பக்தியில் மூழ்கித் தேசிய வீரர்களெனப் பட்டம் பெற்ற தேசாபிமானிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலருக்கோ, சரியாகத் தெரியாதென்றே சொல்லுவேன். ஏனெனில் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு இன்றைக்கு 22 ஆண்டுகள் கழிந்து விட்டபடியால், நமது அன்றைய நிலைமையைப் பலர் மறந்திருக்கக்கூடும்.

சர்.பி.தியாகராயரும், டாக்டர் நாயர் பெருமானும் எவ்வளவு இன்னல்களுக்கிடையிலும், எதிர்ப்புகளுக்கிடையிலும் அக்காலத்தில் இவ்வியக்கத்தை ஆரம்பித்து, அதை வளர்த்து நமக்கு அழியாத பெரும் பொக்கிஷமாக வைத்து விட்டுப்போனார்கள் என்பதை உணர்ந்தவர்கள் அப்பெரியோர்களுக்கு என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டவர்களாவார்கள்.

இந்த இயக்கத்தை ஒழிப்பதற்கு இதன் எதிரிகள் அன்று தொடங்கி இன்றளவும் கையாண்டு வரும் சூழ்ச்சிகளுக்கும் கொடுத்துவரும் இடையூறுகளுக்கும் ஒர் அளவுண்டோ?

உரிமை வேண்டுவது வகுப்புவாதமா?

இந்த இயக்கம் கூட ஆரம்பிக்கப்பட்ட காலமுதற்கொண்டு இன்று வரை நம் எதிரிகள் இதை வகுப்பு வாத இயக்கமென்று சொல்லி இதை நசுக்க முயற்சிகள் பல செய்து வருகின்றனர். ஒரு நாட்டில் 100க்கு 97 பேர்களாக உள்ள மக்கள் ஒன்று பட்டுத் தங்களுக்கு உரிய சமுதாய உரிமைகளைப் பெறமுயற்சிப்பது வகுப்புவாதமானால் 100-க்கு 3 பெயராகவுள்ள ஒருசிறு கூட்டத்தினர் நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதும், அந்நிலை என்றும் மாறாமல் அப்படியே நிலைத் திருப்பதாகவேண்டிய எல்லா ஏற்பாடும் செய்து கொண்டு வருவதும் என்ன வாதமாகும்?.

நம்மில் ஒரு சிலர் நெஞ்சுரமில்லாததாலும், நேர்மைக் குணமில்லாததாலும், பேராசையாலும், சமுகத்தை விற்றாவது தாம் வாழ்வது குற்றமன்று என்று கருதி எதிரிகட்குக் கையாளாகி அவர்கள் பின்னின்று தாளம் போடுவதாலேயே நமது எதிரிகள் நமது உரிமைகளைப் பெற நாம் முயற்சிப்பதை வகுப்புவாதம் என்று சொல்லத் துணிந்து விட்டனர். நாம் இந்த நாட்டின் எந்த ஒரு தனி வகுப்பிற்கோ, சிறுபான்மை ஜாதிக்கோ தனி உரிமைகள் வேண்டுமென்று கேட்கின்றோமா? அல்லது நம்மில் எந்தக் கூட்டத்தாராவது இந்நாட்டிலுள்ள எல்லோரினும் தாங்களே உயர்ந்த ஜாதியினராதலால் தனிச் சலுகை தங்களுக்குக் காட்டப்பட வேண்டுமென்று கேட்கின்றோமா?

சூழ்ச்சியிலும், சுயநலத்திலும் தேர்ச்சி பெற்ற ஒரு சிறு, மிகச் சிறு கூட்டத்தாரால் மிகவும் அவர்கள் வஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட, பெருஞ் சமூகம் விழிப்படைவது வகுப்புவாதமானால் அந்த வகுப்புவாதம் நம் உரிமைகளை நாம் பெறும்வரை நம்மை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்பதே நமது ஜீவாதார கோரிக்கையாக இருக்கவேண்டுமென்று கூற ஆசைப்படுகிறேன்.

இந்நாட்டில், இந்தியா முழுவதையும் எடுத்துக்கொண்டாலும் அல்லது தென்னிந்தியாவை மட்டும் எடுத்துக்கொண்டாலும் சரித்திர காலந்தொட்டே வகுப்பு வாதம், வகுப்புவாதப் போர் இல்லாத காலம் எப்போதாவது இருந்ததா என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா?

ஒரு சிலரடங்கிய ஒரு சிறு கூட்டத்தினர் தங்கள் நாகரிகம், நலன்கள், ஆசார அனுஷ்டானம், பழக்க வழக்கங்கள் இவைகளில் 100-க்கு 97 பேர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்றும், தமக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லையென்றும், தம்மை பூதேவரென்றும் ஆதலால் தங்களுக்குத் தனி உரிமை வேண்டுமென்றும், தாங்கள் மெய்வருந்தி உழைக்கக் கூடாதவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு, மற்றவர்களை இழிவுபடுத்தி வைத்திருக்கும் இவர்கள், மற்றவர்களைப் பார்த்து வகுப்புவாதிகள் என்று சொல்லுவது யோக்கியமாகுமா என்றும், அவர்கள் சொல்லுவது சரியென மற்றவர்கள் ஒப்புக் கொள்வது வீரமாகுமா என்றும் கேட்கின்றேன்

நம்மை வகுப்புவாதிகள் என்று அமைக்கும் நம் எதிரிகள் நாம் அரசியல் சுதந்திரங்களிலும், அரசாங்கப் பதவிகளிலுந்தான் மிகுதியாக வகுப்புவாத உணர்ச்சி காட்டி நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் விளைவிக்கின்றோம் என்று குற்றம் சாட்டுகின்றனர். 100-க்கு 97 பேர்களாக உள்ள நாம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நம் பங்கு உரிமைகளைப் பெற விரும்புகின்றோமா? அன்றி அளவுக்கு மீறிய உரிமைகளை அநியாயமாக அனுபவிக்க விரும்புகின்றோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்த்தல் அவசியமாகும்.

நமது நிலை

இவ்வியக்க ஆரம்பகாலத்தில் நம் நிலை எப்படி இருந்தது?

ஹிட்லர் ஜெர்மன் யூதர்களிடம் கொண்டுள்ள மனப்பான்மைக்குக் காரணங்கள் என்னென்ன வென்று அவர் சொல்லுகின்றாரோ அவைகளும் அவைகளுக்கு மேற்பட்ட காரணங்களுமே  இங்கே நம் மாபெருந்தலைவர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்குக் காரணங்களாயிருந்தன.

கல்வி

1915-வது ஆண்டில், நம் இயக்கம் ஆரம்பிக்கப்படு முன் கல்வித்துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் எந் நிலையிருந்தார்கள் என்பதைச் சிறிது கவனிப்போம்.

கல்வி இலாகா நிர்வாகத்தில் மொத்தம் 518 உத்தியோகங்களில் 400 உத்தியோகங்கள் பார்ப்பனர்கள் கையிலிருந்தன. 73 உத்தியோகங்களை ஆங்கிலோ இந்தியர்கள், யூரேஷியர்கள், கிறிஸ்தவர் இம்மூன்று வகுப்பினரும் 28 உத்தியோகங்களை முஸ்லிம்களும் வகித்து வந்தனர். வகுப்புவாதம் பேசுவதாகச் சொல்லப்படும் நமக்கு, அதாவது பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களுக்கு 18 உத்தியோகங்களே இருந்தன. 400 எங்கே ? 18 எங்கே ?

ஜெர்மனியில் அப்பொழுது யூதர்கள் நம் நாட்டுச் சிறு கூட்டத்தாரைப் போல இவ்வளவு அதிகப்படியான உத்தியோகங்களைக் கைப்பற்றியிருந்திருப்பார்களா என்பது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

நம் இயக்கம் தோன்றிய காலத்தில் இந்நாட்டில் 100-க்கு 7 பேரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அந்த எழுதப் படிக்கத் தெரிந்த மக்களில் 100-க்கு 90 பேருக்கு மேல் பார்ப்பனர்களே. படித்த இந்தியரில் பார்ப்பனரல்லாத இந்துக்கள் தொகை 100-க்கு 5-க்கு மேல் இருந்திருக்க முடியாது. நூற்றுக்குத் தொண்ணூறு எங்கே? அய்ந்தெங்கே?

ஆனால், கல்வித் திறமையிலோ பார்ப்பனரல்லாத மாணவர்கள் பார்ப்பன மாணவர்களுக்கு இளைக்காமலே இருந்து வந்திருக்கின்றார்கள்.

1915ஆம் வருடத்திய சென்னைப் பல்கலைக்கழக அறிக்கைப்படி 1914ஆம் ஆண்டில் இன்டர்மீடியட் (F.A.) பரிட்சைக்கு அனுப்பப்பட்ட 1900 பார்ப்பனப் பிள்ளைகளில் 775 பேர் தேறியிருந்தால் 640 பார்ப்பனரல்லாத இந்து மாணவர்களில் 240 பேர் தேறியிருக்கின்றார்கள். பி.ஏ. பரிட்சையில் ஆங்கிலப் பாடத்தில் பரிட்சை கொடுத்த 469 பார்ப்பனப் பிள்ளைகளில் 210 பேர் தேறியிருந்தால் 133 பார்ப்பனரல்லாத இந்து மாணவர்களில் 60 பேர் தேறியிருக்கின்றனர்.

பி.ஏ. சையன்ஸ் பரிட்சையில் 442 பார்ப்பனப் பிள்ளைகளில் 159 பேர் தேறியிருந்தால் பார்ப்பனரல்லாத இந்து பிள்ளைகளில் 107-க்கு 49 பேர்கள் தேறியிருக்கிறார்கள். பி.ஏ. புதிது) முதல் பகுதியில் (பார்ட் 1) 460-க்கு 270 பார்ப்ப னப் பிள்ளைகளும், 108க்கு 64 நம் சமுகப் பிள்ளைகளும் தேறியிருக்கின்றனர். இரண்டாவது பகுதியில் (பார்ட் 2) 426 பார்ப்பனப் பிள்ளைகளுக்கு 203 பேரும் 117 பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு 63 பேரும் தேறியிருக்கிறார்கள்.

எம்.ஏ. (M.A.) பரிட்சையில், பரிட்சைக்கு அனுப்பப்பட்ட 157 பார்ப்பனப் பிள்ளைகளுள் 67 பேரும், பார்ப்பனரல்லாத 20 மாணவர்களுக்கு 9 பேரும் தேறியிருக்கின்றனர்.

பி.ஏ.எல்.டி., (B.A.L.T.) என்ற உபாத்திமைத் தொழிற்பரிட்சைக்குச் சென்ற 104 பார்ப்பனப் பிள்ளைகளில் 95 பேர் தேறியிருந்தால் நமது சமுக மாணவர்கள் 11 பேரில் 10 பேர் தேறியிருக்கிறார்கள்.

பரிட்சைத் தாள் திருத்துபவர்கள் எல்லோரும் அநேகமாக பார்ப்பனர்களாகவே இருந்தும், கல்வி இலாகா அவர்கள் கையிலிருந்தும் நம் மாணவர்கள் பார்ப்பன மாணவர்களுக்கு மேலாகவே அந்தப் பரிட்சைகளில் தேறியிருப்பது கவனிக்கத்தக்கது.

மற்றும், இன்னொன்று கவனியுங்கள். பார்ப்பனப் பிள்ளைகள் 100 பேர் ஒரு பரிட்சைக்கு அனுப்பப்பட்டால் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் அதில் 4ல் ஒரு பாகத்திற்குக் குறைவாகவும், சில பரிட்சைகளுக்கு 100-க்கு 10 விகிதத்துக்குக்கூட குறைவாகவுமேதான் அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.

இவற்றிக்குக் காரணம் யாதாயிருக்கலாம்?

பரிட்சை கொடுக்கும் திறமையில் சரி சமமான, ஏன், மேலான சக்தியுடையவர்களாக இருந்தும், பரிட்சைக்கு அனுப்பப்படும் கணக்கு விகிதத்தில் மாத்திரம் நம் மாணவர்கள் இவ்வளவு குறைந்திருப்பதற்குக் காரணம் – கல்வி இலாகாவை அவர்கள் கைப்பற்றி விட்ட ஒரு காரணம் அல்லாமல் வேறு என்னவாக இருக்கக் கூடும்? இவ்வொரு காரணத்தாலேயே உத்தியோகங்களிலும் நம்மவர்கள் சரியான விகிதம் பெற முடியாமல் செய்யப்பட்டுப் போய்விட்டது என்று கூசாமல் சொல்லலாம்.

உத்தியோகம்

1916-ம் ஆண்டில் புரோவின்ஷியல் சிவில் சர்வீஸ் என்னும் உயர்தர நிர்வாக உத்தியோகத்தில் ஜனத்தொகையில் 100-க்கு 3 பேர் எண்ணிக்கை கொண்ட பார்ப்பனர்களில் 100 உத்தியோகஸ்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் அப்பதவியில் இருந்த பார்ப்பனரல்லாதவர்கள் 39 பேர்தான் பதவி வகித்து இருந்தார்கள்.

நீதி இலாகாவில் 190 பார்ப்பனர்கள் பதவி வகித்திருந்தார்கள். பார்ப்பனரல்லாதவர் களில் 39 பேர்தான் பதவி வகித்து இருந்தார்கள்.

மற்றும் கொழுத்த சம்பளங்களும், ஏகபோக அதிகாரங்களும், இருந்த எல்லா உத்தியோகங் களிலும் இவ்விரண்டு வகுப்பாருக்கும் மேல் காட்டிய விகிதாச்சார முறையிலோ, அன்றி, இதைவிட மோசமான விகிதாச்சார முறையிலோதான் உத்தியோகங்கள் இருந்து வந்திருக்கின்றன.

மேலும், உத்தியோகத்தில் கெட்டிக்காரர் பார்ப்பனர்; வக்கீல்களிலே கெட்டிக்காரர் பார்ப்பனர்; ஆங்கில அறிவிலே சிறந்தவர்கள் பார்ப்பனர்; தமிழில் பாண்டித்தியம் உடையவர்கள் பார்ப்பனர்; அறிவு நூல் தேர்ச்சி மிக்கவர்கள் பார்ப்பனர்; ஆராய்ச்சியில் வல்லவர்கள் பார்ப்பனர் என்று கெட்டிக்காரப் பட்டமெல்லாம் பார்ப்பனர்களுக்கே ஒழிய மற்றவர்களுக்குக் கிடையாது என்ற நிலை இருந்து வந்தது.

பொருளாதாரம்

பாடுபடாமல் பொருள் திரட்டுவதில் பார்ப்பனர்களுக்கே சகல வசதியும் இருந்து வந்தது. பார்ப்பனரல்லாதாரோ நெற்றி வேர்வை நிலத்தில் சொட்ட பாடுபட்டு ஈட்டும் பொருளையும், பல வழிகளிலும் பார்ப்பனர்களுக்கே கொடுக்க வேண்டியவர்களியிருந்து வந்தார்கள்.

சமுதாயத்துறை

சமுதாயத்துறையில், மிக்க இழிந்த பார்ப்பனன்கூட, உயர்ந்த ஜாதியான் ஆகவும் மிகச் சிறந்த அறிவுள்ள, ஒழுக்கம் பூண்ட செல்வந்தனான பார்ப்பனரல்லாதான் கீழ் ஜாதியானகவும் மதிக்கப்படுவ தாக இருந்தது. ஆகவே கல்வி, பதவி, நிபுணத்துவம், செல்வம் சமூக உயர்வு இது போன்ற நன்மைகள் எல்லாம் ஒரு சிறு ஜாதிக்கும், அதற்கு மாறுபட்டதெல்லாம் நமக்கும் என்ற நிலையிருந்தால் இது ஹிட்லர் ஜெர்மன் யூதர்களைப் பற்றிக் கூறும் குறைகளுக்கு அதிகமாக இருந்தனவா, அன்றி குறைவாக இருந்தனவா? என்பதை ஆலோசித்துப்பாருங்கள்.

துவேஷம் உண்டா?

எங்களது வீழ்ச்சிக்குக் காரணமான தடைகளை நீக்கி, தளைகளை அறுத்து மேல் நிலை அடையவேண்டுமென்றும், மக்கள் அனைவரும் சமமாகவும், சகல உரிமைகளையும் அனுபவிக்க சம சந்தர்ப்பம் உடைவர்களாகவும் இருக்கவேண்டுமென்றுந்தானே விரும்புகின்றோம்? இது துவேஷமா?

கொசுவலை உபயோகிப்பதால் நாம் கொசுக்களுக்கு துவேஷிகளாகி விடுவோமா? மூட்டைப்பூச்சி மருந்து உபயோகிப்பதால் நாம் மூட்டைப்பூச்சிகளுக்கு துவேஷிகள் ஆகிவிடுவோமா? இப்படிப்பட்ட துவேஷத்திற்கும் துரோகத்திற்கும் நாம் ஆளாகக்கூடாது என்று பயந்து பயந்து பார்ப்பனர் தூஷணைகளுக்கு நடுங்கி நடுங்கி நம் குறைகளை வெளியிலே எடுத்துச் சொல்வதற்கும் அவைகளை நிவர்த்திப்பதற்கும் இயலாத அவ்வளவு மோசமான பயங்காளிகளாக நாம் ஆகிவிட்டோமே!

இன்றுதான் என்ன?

இப்படிப்பட்ட ஒரு ஸ்தாபனத்தை தோற்றுவிக்கும் நம்மில் தலைசிறந்த அறிவாளிகளும், செல்வந்தர்களும் தனக்கென வாழாபிறர்க்குரியாளர்களும், கடந்த 22 வருடங்களாக, இந்த ஸ்தாபனத்திற்காக எவ்வளவோ பாடுபட்டு வந்திருந்தும் நமது தற்போதைய நிலைமைதான் என்னவென்ற பாருங்கள்.

அநேக விஷயங்களில் முன் நிலை சிறிதும் மாறுதல் அடையாமல் பழையபடி தானேயிருந்து வருகிறது. இந்த 22 வருடங்களில் நமது நிலைமையை உயர்த்துவதற்குச் செய்துவந்தவெகு சிறு காரியங்களும் இப்பொழுது நம் எதிரிகளால் அழிக்கப்படுகின்றன. நாம் என்றென்றும் தலை தூக்க முடியாவண்ணம் எவ்வித முன்னேற்றத்திற்கும் முயற்சிகூட செய்ய முடியாதபடி நம் எதிரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

நம் இயக்கத்திற்கும், நம் நன்மைக்கும் உண்மையாக உழைத்து வந்த பெரியோர்களில் ஏதோ இரண்டொருவர் தவிர மற்றவர்களெல்லாம் தங்கள் செல்வத்தை இழந்தார்கள்.

You may also like...