சிறப்பு கட்டுரை-சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம் என்ன நடக்கிறது, ‘அய்.அய்.டி.’களில்? – விடுதலை இராசேந்திரன்

‘சூத்திரர்’ கல்வி உரிமையைப் பறித்தது ‘மனுசாஸ்திரம்’. எனவே, அம்பேத்கரும் பெரியாரும் அதை எதிர்த்தனர். மக்கள் வரிப் பணத்தில் இயங்கும்- அய்.அய்.டி.கள். இந்தத் தலைவர்களின் சிந்தனை களுக்கே அய்.அய்.டி. வளாகத்துக்குள் தடை போட்டன. ‘மனுதர்மமே’ அய்.அய்.டி. ஏற்றுக் கொண்ட தத்துவம் என்பதே இதற்கான அர்த்தம். இதுகூட ஒரு கண்ணோட்டத்தில் வரவேற்க வேண்டியது தான். இல்லையேல் தமிழ்நாட்டில் அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், மார்க் சிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் ஒரே களத்தில் கரம் கோர்க்க நல்ல வாய்ப்பை உருவாக்கியிருக்குமா? ‘அய்.அய்.டி.’ என்பதற்கு மற்றொரு பெயர் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் – “அய்யர், அய்யங்கார், உயர்கல்வி நிறுவனம்”. வசிஷ்டர் படிப்பு வட்டம், வந்தே மாதரம் படிப்பு வட்டம், இராமாயண படிப்பு வட்டம், விவேகானந்தர் படிப்பு வட்டம், துர்வாசர் படிப்பு வட்டம் என்று வளாகத்தை வேத மயமாக்குவதற்கு அனுமதித்தவர்கள் – அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டத்தை மட்டும் அனுமதிக்க மறுத்தது. சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மீது திணிக்கப்படும் பாகுபாடுகளை எதிர்த்து 1998இல் தொடங்கி, 2000 ஆண்டு வரை மூன்று ஆண்டு காலம் தொடர் போராட் டங்களை பெரியார் திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது. தலித் அமைப்புகளை இணைத்து, ‘சமூகநீதி மீட்பு இயக்கம்’ ஒன்றை உருவாக்கி போராடியது. பொதுக் கூட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் ஆளுநரிடம் மனு என்ற வடிவில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

‘அய்.அய்.டி. வளாகத்துக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவுகிறார்கள்’ என்று புதுடில்லியிலிருந்து சுப்ரமணியசாமியைப் பிடித்து அறிக்கை வெளியிட வைத்தது அய்.அய்.டி. நிர்வாகம். அப்போது இங்கே பணியாற்றிய 420 பேராசிரியர்களில் தலித் இரண்டு பேர்; பிற்படுத்தப்பட்டோர் 20 பேர்; ஒரு முஸ்லீம்கூட இல்லை. இவர்கள்கூட இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படவில்லை. திறந்த போட்டியில் போட்டி யிட்டு வந்தவர்கள்தான். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலையில் எந்த மாற்றமும் நிகழ்ந்திடவில்லை. 2008-லிருந்து 2015ஆம் ஆண்டு வரை சென்னை அய்.அய்.டி.யின் பேராசிரியர், மாணவர்களின் ஜாதிவாரி எண்ணிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ளன. அதே நிறுவனத்தில் மனித வளம் மற்றும் சமூக விஞ்ஞானத் துறையில் பணியாற்றும் அருண்சுதர்சன் என்ற இளம் பேராசிரியர் விவரங்களைப் பெற்றிருக்கிறார். இதன்படி 86.57 சதவீத பேராசிரியர்கள் (மொத்தம் 464 பேர்) பார்ப்பனர்கள்.

இதில் மிகச் சிலர் உயர் ஜாதிப் பிரிவினர் பிற்படுத்தப்பட்டவர்கள் 11.01 சதவீதம் மட்டுமே (59 பேர்) தாழ்த்தப்பட்டோர் 2.05 சதவீதம் மட்டுமே (11 பேர்). பழங்குடிப் பிரிவினர் ஒரு சதவீதம்கூட இல்லை 0.31 சதவீதம் (2 பேர்).மொத்தமுள்ள 536 பேராசிரியர், துணைப் பேராசிரியர், இணைப் பேராசிரியர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பனர் உயர்ஜாதியினர். 1998-2000 ஆண்டுகளில் வசந்தா கந்தசாமி என்ற கணிதப் பேராசிரியர், பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், துறை ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் விவரிக்க முடியாத அளவில் பழி வாங்கப்பட்டார். பல சர்வதேச ஆய்வு இதழ்களில் மிக அதிக எண்ணிக்கையில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய பெருமை இவருக்கு உண்டு.

இதற்கு இணையாக எந்த ஒரு அய்.அய்.டி. பேராசிரியரும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதில்லை. நோபல் பரிசுக்கு இணையாக மதிப்பிடப்படும் ‘பட்நாகர் விருது’, 1996இல் இவருக்கு பரிந்துரைக்கப் பட்டது. அதுவரை சென்னை அய்.அய்.டி.யிலிருந்து இந்த விருதை எவரும் பெற்றிடவில்லை என்ற நிலையிலும் அய்.அய்.டி.யின் முன்னாள் இயக்குனராக இருந்த ஒரு பார்ப்பன இயக்குனர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு அவசரமாக திரும்பி வந்து, அவ்விருது கிடைத்துவிடாமல் தடுத்து நிறுத்தினார். இதை எதிர்த்து, வசந்தா கந்தசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மனுவில் இந்த விவரங்கள் சுட்டிக் காட்டப்பட்டன. அய்.அய்.டி.யின் ஜாதி வெறிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஏராளம். அத்தனையும் விசாரணைக்கு வராமல் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளன. ஒரே ஒரு முறைதான் அய்.அய்.டி. ஜாதியத்துக்கு எதிரான ஒரு தீர்ப்பு உயர்நீதிமன்றத்திலிருந்து வந்தது. வழக்கு இதுதான். அய்.அய்.டி. இயக்குனராக பல ஆண்டுகாலம் வேதகால ஆட்சி நடத்திய நடராஜன் என்பவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு ஆனந்த் என்ற பார்ப்பனர் கொல்லைப்புற வழியாக வந்துவிட்டார். அவரது நியமனம் முறையாக வெளிப்படைத் தன்மை இல்லாமல் இரகசியமாக அரங்கேற்றமானது.

நிறுவனம் தொடங்கப்பட்டு, 20 ஆண்டுகள் வரை அரசியல் சட்டம் உறுதி செய்திருந்த தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டையே பின்பற்ற மறுத்துவிட்டனர். அய்.அய்.டி. நிறுவனம், அந்த ஆணையை அமுல்படுத்த மறுத்ததோடு,
அதை எதிர்க்கவும் முடிவெடுத்தது.

 

அதற்கான ஆவண சான்றுகளும் இருந்தன. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்த நியமனத்தின் முறைகேடுகளை எடுத்துக்காட்டி, இயக்குநர் நியமனத்தை செல்லாது என்று அறிவித்தார். இந்த வரலாற்றுப் புகழ்மிக்க தீர்ப்பை வழங்கியது நீதிபதி சந்துரு. இதுவும் நிலைத்திடவில்லை. அடுத்த சில வாரங்களிலேயே மேல்முறையீட்டில் நிர்வாகம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுவிட்டது. இதே அய்.அய்.டி.யில் படித்து, சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்று, அமெரிக்கா- ஜப்பான் போன்ற நாடுகளில் கவுரப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு சொந்த நாட்டுக்கு சேவை செய்யும் விருப்பத்தோடு திரும்பினார் ஒரு பேராசிரியர். அய்.அய்.டி.யில் அவர் மனு செய்திருந்தார். அவர் பெயர் முனைவர் முரளிதரன். 50க்கும் மேற்பட்ட இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள், சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றவை. அமெரிக்காவின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளுக்கான தகவல் களஞ்சியத் தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், அவரிடம் இல்லாமல் போன தகுதி-உயர் குடிப் பிறப்புதான். ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட’ சமுதாயத் தில் பிறந்து விட்டார். இந்த உயிரியல் மருத்துவப் பொறியாளரான முனைவர் முரளிதரன், அய்.அய்.டி.யில், சிறந்த மாணவருக்கான விருது கிடைத்தும், பணி வாய்ப்புக்கான உரிய வாய்ப்பு, தகுதி இருந்தும் நிர்வாகம் மறுத்தது. நீதிமன்றம் போனார் முரளிதரன்.

ஆனால், அய்.அய்.டி. இயக்குனராக இருந்த நடராசன், இவரை அய்.அய்.டி. வளாகத்துக்குள்ளேயே நுழைவதற்கு தடை விதிக்கும் ஆணையைப்பிறப்பித்து, தனது ஆணவத்தை அதிகாரத் திமிரை வெளிப்படுத்தினார். எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் இப்படி ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இந்தப் பேராசிரியர் புகார் கொடுக்கப் போனார். காவல் நிலையம் புகாரை பதிவு செய்யவே மறுத்து விட்டது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் அவமதிப்புக்கும் நீதி கேட்டு நீதிமன்றங்களின் படியேறி வழக்குகளைத் தொடர்ந்தார். அவருக்கு நீதியின் கதவு திறக்கப்படவேயில்லை.

நாட்டில் தொழில்நுட்ப உயர்கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்த 1959ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் பம்பாய், சென்னை, டெல்லி, கான்பூர், கோரக்பூர் மற்றும் கவுகாத்தியில் தொடங்கப்பட்டன. தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த நிறுவனங்களின் வேந்தர் (ஊாயஉேநடடடிச) – குடியரசுத் தலைவர். 1961ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ், இந்த நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. 1963இல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, வெகு மக்களின் மேம்பாடே இதன் நோக்கம் என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. மக்கள் வரிப்பணத்தில் வெகு மக்கள் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் இந்த நிறுவனம், “பூணூல்”களுக்குள் முடக்கப்பட்டு விட்டது. நிறுவனம் தொடங்கப்பட்டு, 20 ஆண்டுகள் வரை அரசியல் சட்டம் உறுதி செய்திருந்த தாழ்த்தப் பட்டோர் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டையே பின்பற்ற மறுத்துவிட்டனர். 1978ஆம் ஆண்டுதான் அதுவும் நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே தலித் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைப் பின்பற்ற ஒப்புக் கொண்டனர். அதுவும்கூட கண் துடைப்புதான். அய்.அய்.டி. வரலாற்றில், இதுவரை இந்த இடஒதுக்கீட்டுக்கான இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டதே இல்லை. இப்போதும் என்ன நிலை? அய்.அய்.டி. மனிதவளம் மற்றும் சமூக விஞ்ஞானத் துறை, இளம் பேராசிரியர் அருள் சுதர்சன், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெற்றுள்ள தகவல்களே இதை உறுதி செய்கின்றன. 2008-லிருந்து 2015 வரை ஆய்வுப் பட்டப் படிப்புக்கு (பிஎச்.டி.) அனுமதிக்கப்பட்ட தலித் மாணவர் எண்ணிக்கை 142. பழங்குடி மாணவர் எண்ணிக்கை 9. திறந்த போட்டி வழியாக நுழைந்த பார்ப்பனர்கள் – 1592 பேர். மேல் பட்டப் படிப்புக்கு (எம்.எஸ்.) பொது போட்டி வழியாக நுழைந்த பார்ப்பனர் – 1194 பேர்.

இதில் வெகு சிலர் மட்டுமே முன்னேறிய ஜாதிப் பிரிவினர்) இதில் பிற்படுத்தப்பட் டோர் 740. தலித் மாணவர்கள் 29 பேர் பழங்குடிப் பிரிவு மாணவர் 3 பேர். இது தவிர, ஏனைய துறைகளில் பொதுப் போட்டி வழியாக நுழைந்தவர்கள்1,194 பார்ப்பன/உயர்ஜாதியினர். 429 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். 650 பேராசிரியர், துணைப் பேராசிரியர்களும், 8000 மாணவர்களும், 3000 ஊழியர்களும் பணியாற்றும் மிகப் பெரும் கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு கொள்கைகள் திட்ட மிட்டு புறக்கணிக்கப்படுவதை இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. (தகவல்: ‘பிரன்ட்லைன்’, ஜூன் 26, 2015) இவ்வளவுக்குப் பிறகு, 2008ஆம் ஆண்டு மத்திய மனித வளத்துறை அமைச்சகம், இடஒதுக்கீட்டை உறுதி செய்யக் கோரி குறிப்பாணை ஒன்றை அய்.அய்.டி.க்கு அனுப்பியது. தலித் பிரிவினருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம். ஆசிரியர்- மாணவர் தேர்வுகளில் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த குறிப்பாணை வலியுறுத்தியது. அய்.அய்.டி. நிறுவனம், அந்த ஆணையை அமுல்படுத்த மறுத்ததோடு, அதை எதிர்க்கவும் முடிவெடுத்தது.

அய்.அய்.டி., தனது ‘செனட்’ கூட்டத்தைக் கூட்டி, இடஒதுக்கீட்டு ஆணையை நிறைவேற்ற முடியாது என்று தீர்மானமே நிறைவேற்றியது. மத்திய மனித வளத் துறை தனது குறிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆட்சிக்கே அறிவுறுத்தியது. வெகு மக்கள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட நிறுவனம், தலித், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களுக்கான சட்டப்படியான உரிமைக் கதவுகளை இழுத்து மூடியது. இந்த நிறுவனங்களில் மக்கள் வரிப் பணத்தில் படித்த ‘அறிவாளிகள்’ இறுதியாண்டு படிக்கும் போதே வெளிநாடுகளில் வேலை நியமன ஆணை களையும் விசாவையும் பெற்றுக் கொண்டு பட்டம் பெற்ற உடனேயே விமானம் ஏறி விடுகிறார்கள். இந்தியாவில் குறைந்தது சில பல ஆண்டுகளாவது பணியாற்றுவதை கட்டாயப்படுத்தும் நிபந்தனைகளைக்கூட எதையும் இந்த ‘தேசபக்த’ நிர்வாகங்கள் விதிக்கத் தயாராக இல்லை.

(தொடரும்)
பெரியார் முழக்கம் 16072015 இதழ்

You may also like...

Leave a Reply