அய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது?

கேரளாவிலிருந்து சென்னை அய்.அய்.டி.க்கு படிக்க வந்த பாத்திமா லத்தீப் என்ற இஸ்லாமிய மாணவி, அய்.அய்.டி. விடுதியில் நவம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு உயிரை மாய்த்திருக்கிறார். மத ரீதியாகத் தான் துன்புறுத்தப்பட்டதால் இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். தனது அலைபேசியில் தன்னை துன்புறுத்தி, மதிப்பெண்களைக் குறைத்த சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். கேரள முதலமைச்சர் இப்பிரச்சினையை தமிழக முதல்வரிடம் கொண்டு வர, தமிழகக் காவல்துறை சி.பி.சி.அய்.டி. துறை வழியாக விசாரணை நடத்தி வருகிறது. கோட்டூர்புரம் காவல்துறை மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அய்.அய்.டி. நிர்வாகத்தின் குரலையே எதிரொலித்து வழக்கை மூடி மறைக்க முயற்சித்தது. இப்போது கேரள மாநில முதல்வர் தலையீட்டால் வழக்கு விசாரணையில் புதிய திருப்பம் உருவாகி யிருக்கிறது. இந்தப் பின்னணியில் அய்.அய்.டி. வரலாற்றை மீண்டும் சுருக்கமாக நினைவுகூர வேண்டியுள்ளது.

சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மீது திணிக்கப்படும் பாகுபாடு களை எதிர்த்து 1998இல் தொடங்கி, 2000 ஆண்டு வரை மூன்று ஆண்டு காலம் தொடர்  போராட் டங்களை பெரியார் திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது. தலித் அமைப்புகளை இணைத்து, ‘சமூகநீதி மீட்பு இயக்கம்’ ஒன்றை உருவாக்கி போராடியது.

பொதுக் கூட்டங்கள், முற்றுகைப் போராட் டங்கள் ஆளுநரிடம் மனு என்ற வடிவில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ‘அய்.அய்.டி. வளாகத்துக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவுகிறார்கள்’ என்று புதுடில்லியிலிருந்து சுப்ரமணியசாமியைப் பிடித்து அறிக்கை வெளியிட வைத்தது அய்.அய்.டி. நிர்வாகம். அப்போது இங்கே பணியாற்றிய 420 பேராசிரியர்களில் தலித் இரண்டு பேர்; பிற்படுத்தப்பட்டோர் 20 பேர்; ஒரு முஸ்லீம்கூட இல்லை. இவர்கள்கூட இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படவில்லை. திறந்த போட்டியில் போட்டி யிட்டு வந்தவர்கள்தான். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலையில் எந்த மாற்றமும் நிகழ்ந்திடவில்லை.

2019 நிலவரப்படி மொத்த பணியிடங்கள் 900, அதில் 684 நிரப்பப்பட்டன. அதில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர், துணை பேராசியர்களின் ஜாதிவாரி எண்ணிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. இதன்படி பேராசிரியருக்கான பணிக்கு, எஸ்.சி. பிரிவில் மொத்தம் 47 இடங்களில் 5 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. எஸ்.டி.பிரிவில் 23 இடங்களில் ஒரு இடம் மட்டுமே நிரப்பப்பட்டது. ஓ.பி.சி பிரிவில் 84 இடங்களில் 29 நிரப்பப்பட்டுள்ளன. ஓ.சி. பிரிவில் மொத்தம் 154 இடங்களுக்கு 273 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இணை பேராசிரியருக்கான பணிக்கு, எஸ்.சி. பிரிவில் 27 இடங்களில் 4, எஸ்.டி. பிரிவில் 13 இடங்களில் ஒன்று, ஓ.பி.சி. பிரிவில் 49 இடங்களில் 19, ஓ.சி. பிரிவில் 90 இடங்களுக்கு 156 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

துணை பேராசிரயருக்கான பணிக்கு, எஸ்.சி பிரிவில் 30 இடங்களில் 7, எஸ்.டி பிரிவில் 15 இடங்களில் ஒன்றும், ஓ.பி.சி பிரிவில் 53 இடங்களில் 18, ஓ.சி. பிரிவில் 98 இடங்களில் 170 ம் நிரப்பப் பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஆசிரியருக்காக விண்ணப்பித்த 271 பேரில் 5 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு 682 பேரில் 16 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

அய்.அய்.டி.யின் ஜாதி வெறிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஏராளம். அத்தனையும் விசாரணைக்கு வராமல் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளன. ஒரே ஒரு முறைதான் அய்.அய்.டி. ஜாதியத்துக்கு எதிரான ஒரு தீர்ப்பு உயர்நீதிமன்றத்திலிருந்து வந்தது. வழக்கு இதுதான். அய்.அய்.டி. இயக்குனராக பல ஆண்டுகாலம் வேதகால ஆட்சி நடத்திய நடராஜன் என்பவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு ஆனந்த் என்ற பார்ப்பனர் கொல்லைப்புற வழியாக வந்துவிட்டார்.

அவரது நியமனம் முறையாக வெளிப்படைத் தன்மை இல்லாமல் இரகசியமாக அரங்கேற்றமானது. அதற்கான ஆவண சான்றுகளும் இருந்தன. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்த நியமனத்தின் முறைகேடுகளை எடுத்துக்காட்டி, இயக்குநர் நியமனத்தை செல்லாது என்று அறிவித்தார். இந்த வரலாற்றுப் புகழ்மிக்க தீர்ப்பை வழங்கியது நீதிபதி சந்துரு. இதுவும் நிலைத்திடவில்லை. அடுத்த சில வாரங்களிலேயே மேல்முறையீட்டில் நிர்வாகம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுவிட்டது.

அய்.அய்.டி.யின் வரலாறு

நாட்டில் தொழில்நுட்ப உயர்கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்த 1959ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் பம்பாய், சென்னை, டெல்லி, கான்பூர், கோரக்பூர் மற்றும் கவுகாத்தியில் தொடங்கப்பட்டன. தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த நிறுவனங்களின் வேந்தர் (ஊhயnஉநடடடிச) – குடியரசுத் தலைவர். 1961ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ், இந்த நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. 1963இல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, வெகு மக்களின் மேம்பாடே இதன் நோக்கம் என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. மக்கள் வரிப்பணத்தில் வெகு மக்கள் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் இந்த நிறுவனம், “பூணூல்”களுக்குள் முடக்கப்பட்டு விட்டது. நிறுவனம் தொடங்கப்பட்டு, 20 ஆண்டுகள் வரை அரசியல் சட்டம் உறுதி செய்திருந்த தாழ்த்தப் பட்டோர் பழங்குடியினருக்கான இடஒதுக் கீட்டையே பின்பற்ற மறுத்துவிட்டனர். 1978ஆம் ஆண்டுதான் அதுவும் நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே தலித் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைப் பின்பற்ற ஒப்புக் கொண்டனர். அதுவும்கூட கண் துடைப்புதான். அய்.அய்.டி. வரலாற்றில், இதுவரை இந்த இடஒதுக்கீட்டுக்கான இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டதே இல்லை. இப்போதும் என்ன நிலை? அய்.அய்.டி. மனிதவளம் மற்றும் சமூக விஞ்ஞானத் துறை, இளம் பேராசிரியர் அருள் சுதர்சன், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெற்றுள்ள தகவல்களே இதை உறுதி செய்கின்றன.

2008-லிருந்து 2015 வரை ஆய்வுப் பட்டப் படிப்புக்கு (பிஎச்.டி.) அனுமதிக்கப்பட்ட தலித் மாணவர் எண்ணிக்கை 142. பழங்குடி மாணவர் எண்ணிக்கை 9. திறந்த போட்டி வழியாக நுழைந்த பார்ப்பனர்கள் – 1592 பேர். மேல் பட்டப் படிப்புக்கு (எம்.எஸ்.) பொது போட்டி வழியாக நுழைந்த பார்ப்பனர் – 1194 பேர். இதில் வெகு சிலர் மட்டுமே (முன்னேறிய பிற ஜாதிப் பிரிவினர்) இதில் பிற்படுத்தப்பட் டோர் 740. தலித் மாணவர்கள் 29 பேர் பழங்குடிப் பிரிவு மாணவர் 3 பேர். இது தவிர, ஏனைய துறை களில் பொதுப் போட்டி வழியாக நுழைந்தவர்கள் 1,194 பார்ப்பன/உயர்ஜாதியினர். 429 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். 650 பேராசிரியர், துணைப் பேராசிரியர்களும், 8000 மாணவர்களும், 3000 ஊழியர்களும் பணியாற்றும் மிகப் பெரும் கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு கொள்கைகள் திட்ட மிட்டு புறக்கணிக்கப்படுவதை இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. (தகவல்: ‘பிரண்ட்லைன்’, ஜூன் 26, 2015)

இவ்வளவுக்குப் பிறகு, 2008ஆம் ஆண்டு மத்திய மனித வளத்துறை அமைச்சகம், இடஒதுக்கீட்டை உறுதி செய்யக் கோரி குறிப்பாணை ஒன்றை அய்.அய்.டி.க்கு அனுப்பியது. தலித் பிரிவினருக்கு

15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம். ஆசிரியர்-மாணவர் தேர்வுகளில் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த குறிப்பாணை வலியுறுத்தியது. அய்.அய்.டி. நிறுவனம், அந்த ஆணையை அமுல்படுத்த மறுத்ததோடு, அதை எதிர்க்கவும் முடிவெடுத்தது. அய்.அய்.டி., தனது ‘செனட்’ கூட்டத்தைக் கூட்டி, இடஒதுக்கீட்டு ஆணையை நிறைவேற்ற முடியாது என்று தீர்மானமே நிறைவேற்றியது. மத்திய மனித வளத் துறை தனது குறிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆட்சிக்கே அறிவுறுத்தியது. வெகு மக்கள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட நிறுவனம், தலித், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களுக்கான சட்டப்படியான உரிமைக் கதவுகளை இழுத்து மூடியது.

இந்த நிறுவனங்களில் மக்கள் வரிப் பணத்தில் படித்த ‘அறிவாளிகள்’ இறுதியாண்டு படிக்கும் போதே வெளிநாடுகளில் வேலை நியமன ஆணை களையும் விசாவையும் பெற்றுக் கொண்டு பட்டம் பெற்ற உடனேயே விமானம் ஏறி விடுகிறார்கள். இந்தியாவில் குறைந்தது சில பல ஆண்டுகளாவது பணியாற்றுவதை கட்டாயப்படுத்தும் நிபந்தனை களைக் கூட எதையும் இந்த ‘தேசபக்த’ நிர்வாகங்கள் விதிக்கத் தயாராக இல்லை.

பெரியார் முழக்கம் 21112019 இதழ்

You may also like...