ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்முவில் நடக்கும் இராணுவ ஆட்சி மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து வீடுகளில் முடக்கி வைத்து விட்டது.

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சரியாக ஒரு மாதமாகிவிட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மக்களிடமிருந்து அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். செல்பேசி, தரைவழித் தொலை பேசி, இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளுதல் என எவ்விதமான தகவல் தொடர்பும் அவர்களுக்குக் கிடையாது. பிரதான சாலைகள் அனைத்திலும் பாதுகாப்புப் படையினரின் தடுப்பரண்கள் வைக்கப்பட் டிருப்பதாலும், பொதுப் போக்குவரத்து இல்லாததாலும் மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து எங்கும் செல்வதற்கான உரிமை பறிக்கப் பட்டவர்களாக இருந்து வருகிறார்கள்.
  • அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. செய்தித்தாள்கள் தங்கள் பதிப்புகளை வெளியிட முடியவில்லை. தகவல் தொடர்பு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட் டிருப்பதால் ஊடகவியலாளர்களால் தங்கள் செய்தி நிறுவனங்களுக்கு முறையாக செய்திகளை அனுப்ப முடியாததே இதற்குக் காரணமாகும்.
  • மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தடுப்புக்காவலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக் கிறார்கள். அனைத்து ஹூரியத் இயக்கத் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கின் உண்மை நிலைமைகள் குறித்து எவரேனும் வாய்திறந்தால் அவரும் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார். மக்களுக்கு மருத்துவ சேவை செய்திட மருந்துகள் கிடைக்க வில்லை என்று ஒரு மருத்துவர் தன் கவலையைத் தெரிவித்தபோது அவரும் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 30 நாட்களில் கொடூரமான, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 250க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் எதார்த்த நிலையில் எவ்வித வேறுபாடும் இல்லை. தரைவழித் தொலைபேசி இணைப்புகள் சரிசெய்யப்பட்டு விட்டன என்று அதிகாரிகள் கூறிவந்தபோதிலும், மாநிலத்தின் பல இடங்களில் அவை வேலை செய்யவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு வரையிலும் உள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வருவது என்பது அநேகமாக இல்லை. மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியவில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபின், கடந்த ஒரு மாத காலத்தில் ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தின்கீழ் ஒருவர் கூட பயன்பெறவில்லை என்று அரசாங்கத்தின் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையிலிருந்தே அங்குள்ள பரிதாப நிலையை நன்கு தெரிந்துகொள்ள முடியும். எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் ஆகஸ்ட் 29 அன்று வெளியான ஒரு செய்தியின்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 14 லட்சம் இ-கார்டுகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன என்றும், இதில் ஆகஸ்ட் 5 வரை 22 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கின்றனர் என்றும் தெரியவருகிறது. எனினும், மாநிலம், பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டபின்னர், மூன்று வாரங்களில், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்ட நோயாளிகள் எண்ணிக்கை என்பது “அநேகமாக பூஜ்யம்” ஆகக் குறைந்துவிட்டது.
  • இப்போது அம்மாநிலத்தில் புதியதொரு போக்கு உருவாகி இருக்கிறது. வீடுகளிலிருந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார்கள் என்பதற்கான காரணம் எதையும் குடும்பத்தினருக்குக் கூறுவதில்லை. கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப் பட்டவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிவிக்கப்படுவதில்லை. இது, குடும்பங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
  • வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், சௌராவில் நடைபெற்றது போன்று கிளர்ச்சிகள் எங்கேனும் நடைபெற்றால், அவை மிகவும் கொடூரமானமுறையில் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி நசுக்கப்படுகின்றன. அரசுத் தரப்பில் மூடி மறைத்த போதிலும், பெல்லட் குண்டுகளால் காயம் அடைந்த இளைஞர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்றுவரும் தகவல்கள் செய்திகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. பெல்லட்குண்டு காயங்களினால் ஏற்பட்ட முதல் மரணம் குறித்து செப்டம்பர் 3 அன்று பிடிஐ செய்தி நிறுவனத்தால் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. சௌராவில் நடைபெற்ற சம்பவத்தில் காயங்கள் அடைந்த அஸ்ரார் அகமது கான் என்பவர் மரணம் அடைந்துள்ளார்.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் குடிமக்களைப் பொறுத்தவரைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 19 மற்றும் 21ஆவது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் நசுக்கப்பட்டிருக்கின்றன. இதில் மிகவும் கவலை தரும் விஷயம் என்னவென்றால், ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடத் தலையிடுவது தன் வேலையல்ல என்கிற முறையில் உச்சநீதிமன்றம் நினைத்துக் கொண்டிருப்பதாகும். இது தொடர்பாக எண்ணற்ற மனுக்கள் அதனிடம் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் அவற்றின்மீது உரிய நடவடிக்கைகள் எதுவும் உச்சநீதிமன்றத்தால் இதுவரை எடுக்கப்படவில்லை.
  • அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு இரத்து செய்யப் பட்டதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தாங்கிக் கொள்ளாமல், கண்ணன் கோபிநாதன், அய்.ஏ.எஸ். தன் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் அய்ஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் என்பவரும் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

நம் நாட்டின் பன்முக ஜனநாயகத் தன்மை சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு அடிப்படைக் கட்டமைப்பே தகர்க்கப்படும்போது அய்ஏஎஸ் அதிகாரியாகத் தொடர்ந்து பணியாற்றுவது ‘நெறிமுறையற்ற’ (‘ரநேவாiஉயட’) செயலாகும்  என்று சசிகாந்த் செந்தில் கூறுகிறார்.

எஸ். சசிகாந்த் செந்தில், 2009ஆம் ஆண்டு அணியில் கர்நாடக ஐஏஎஸ் அதிகாரியாக சேர்ந்தவர். தற்போது தட்சிண  கன்னட மாவட்டத்தில் துணை ஆணையராக இருந்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமையன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். வரவிருக்கும் நாட்கள், நாட்டின் அடிப்படை வலைப் பின்னலுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.

எனவே, ஓர் அய்ஏஎஸ் அதிகாரியாக இருந்து பணியாற்றுவதைவிட வெளியிலிருந்து என் பணியைத் தொடர்வதே சிறந்தது என்று சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.  40 வயதாகும் சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். திருச்சியில் உள்ள பாரதி தாசன் பல்கலைக்கழகத்தின் ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. (எலக்ட்ரானிக்ஸ்) தேர்ச்சி பெற்றவர்.

பெரியார் முழக்கம் 12092019 இதழ்

You may also like...