இதுதான் பெரியார் மண்

சென்னை தியாகராயர் நகரில் கழகக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மேடையில் மருத்துவர் எழிலன் பேசிக் கொண்டிருந்தார். “கூட்டம் நடக்கும் பகுதியில் அலகு குத்திக் கொண்டு சாமி ஆடிக் கொண்டு ‘ஓம் மகா சக்தி’ என்று முழங்கிக் கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மேளதாளத்தோடு ஊர்வலமாகக் கோயிலை நோக்கிப் போகிறார்கள். அவ்வளவு பேரும் நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக் குடும்பத்தினர். மேடையில் பேசிக் கொண்டிருந்த மருத்துவர் எழிலன், பக்தி ஊர்வலம் சென்று முடியும் வரை தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். ஊர்வலம் சென்று முடிந்த பிறகு இந்த மக்களின் உரிமைகளுக்காகத் தான் பெரியார் தொண்டர்களாகிய நாம் போராடி வருகிறோம்” என்று கூறி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

அடுத்து பேச வந்த ஆளூர் ஷா நவாஸ், “இங்கே அமைதியாக பக்தி ஊர்வலத்திற்கு வழிவிட்டு பேச்சைக்கூட நிறுத்திக் கொண்டு பக்தர்கள் கடந்து செல்ல அனுமதித்தோம். இதுதான் பெரியார் மண்! நினைத்துப் பாருங்கள். இதுவே விநாயகன் ஊர்வலமாக இருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள்? மசூதி வழியாகவே போவோம் என்பார்கள். ஆத்திரமூட்டும் முழக்கமிடுவார்கள். வன்முறைக்குக் காத்திருப்பார்கள். போலீஸ் படை சூழ்ந்து நிற்கும். இங்கே அதுபோன்ற எந்த அசம்பாவிதமும் இல்லை. இப்படித்தான் பெரியார் தனது இயக்கத்தை பக்குவப்படுத்தியிருக்கிறார்” என்று கூறியபோது பலத்த கரவொலி எழுந்தது.

கழகக் கூட்ட மேடைக்குப் பின்னால் சற்று தூரத்தில் அம்மன் விழாவும் தீமிதியும்கூட நடந்து கொண்டிருந்தது.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 25072019 இதழ்

You may also like...