நாத்திகர் விழா – அனுமதி கோரி வழக்கு

நாத்திகர் விழா: அனுமதி கோரி வழக்கு!
நாத்திகர் விழாவுக்கு அனுமதி அளிக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 27ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் நாத்திகர் விழா நடத்த முடிவு செய்துள்ளது திராவிடர் விடுதலைக் கழகம். இதற்கு அனுமதி அளிக்கக் கோரி, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

நாத்திகர் விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி, கடந்த மாதம் 28ஆம் தேதியன்று கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், அங்கிருந்த காவல் துறை ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறித் தங்களது மனுவை நிராகரித்ததாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். “கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று மாவட்டத் தேர்தல் அதிகாரியாக உள்ள மாவட்ட ஆட்சியரிடம் விழா நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தோம். எங்களது பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 22ஆம் தேதியன்று இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

20

You may also like...