சலசலப்புகளை முறியடித்து எழுச்சியுடன் நடந்த ஈரோடு காஞ்சிக் கோயில் தெருமுனைக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 07.01.2018 ஞாயிறு மாலை 6:30 மணியளவில் காஞ்சிக்கோயில் நான்குமுனை சந்திப்பில் யாழ் எழிலன் தலைமையில் தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது.   சவுந்தர் தொடக்கவுரையாற்ற, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சார்ந்த  வீரா கார்த்தி பேசத் துவங்கிய பத்து நிமிடங்களில், அங்கு வந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கொங்கு அமைப்பைச் சார்ந்த கும்பல் கலவரம் செய்து கூட்டத்தை முடக்கும் நோக்கில் பேசாதே பேசாதே இந்துவைப் பற்றி பேசாதே என்று கூச்சலிட்டனர். அங்கு வந்த காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.  தொடர்ந்து வீரா கார்த்தி நீட் தேர்வின் ஆபத்து குறித்தும், தமிழ்நாடு தேர்வாணையம் குறித்தும் மாட்டுக்கறி தடை பற்றியும் உரையாற்றினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி மூடநம்பிக்கை குறித்து பேசினார் . பெரியார் இயக்கம் இது போன்ற எண்ணற்றத் தடைகளை சந்தித்த இயக்கம் இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது, இன்னும் மூன்று மாதங்கள் கழித்து காஞ்சிக் கோயிலில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்களின் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். இரவு 8மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. காஞ்சிக்கோயிலின் அருகாமையில் உள்ள ஊர்களைச் சார்ந்தோர் இது போன்ற கூட்டங்கள் தங்கள் ஊர்களிலும் நடத்தவேண்டுமெனக்  கேட்டுக்கொண்டனர்.

பெரியார் முழக்கம் 11012018 இதழ்

You may also like...