ஆகமக் கோயிலிலிருந்து அறநிலையத் துறை அமைச்சர் வரை ஆட்டிப் படைக்கிறது ‘மனுதர்மம்’

“சூத்திரன் அருகில் இருக்கும்போது பிராமணன் வேதம் ஓதலாகாது.”

– மனுதர்மம் அத்4; சுலோகம் 99

“கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘சூத்திரர்’ அர்ச்சகர் ஆகக் கூடாது என்ற நிலையே இன்றும் நீடிக்கிறது. அந்த உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்கிறது மனு நீதி. இப்போதும் சட்டங்களை புறந்தள்ளி விட்டு, ‘ஆட்சி’ செய்து வருகிறது. ‘மனுநீதி’ இதற்கு சான்றாக சட்டமன்றத்தில் மே 8 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆற்றிய உரையை கீழே தருகிறோம்:

தமிழகச் சட்டமன்றத்தில் 8.5.2012 இந்து சமய அறநிலையத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் பங்கேற்றுப் பேசுகையில்:

“பெரியார் நூற்றாண்டையொட்டி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அமைத்த நீதிபதி மகாராஜன் குழு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிட ஆகமங்கள் தடை விதிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து திருச்சி கம்பரசம்பேட்டையில் அனைவருக்குமான வேத – ஆகம பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 6 இடங்களில் தொடங்கி நடத்தப்பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் சுமார் 200 மாணவர்கள் பயின்றுள்ளனர். அவர்களுக்கு முக்கியத் தலங்களில் வேலை வழங்குவதுடன், அர்ச்சகர் பயிற்சியை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும்.

மடாதிபதிகள், பாலியல் குற்றங்களைப் புரிவதும், வரி ஏய்ப்புச் செய்வதும், கொலை போன்ற குற்றங்களில் தொடர்புடையவர்களாக இருப்பதும் தொடர்கதை யாகியுள்ளன. மடங்களின் பெயரில் ஏராளம் சொத்துகள் இருக்கின்றன.

எனவே, மடங்களின் சொத்துகளை அரசே நிர்வகிக்க சட்டம் இயற்ற வேண்டும். மடங்களின் தலைவர்களை ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்க அரசு தலையிட வேண்டும்.

தமிழ்நாடு கோவில் நுழைவுச் சட்டம் 1950 ஆம் ஆண்டே இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி தனியார் கோவிலில்கூட, அதே மதத்தைச் சேர்ந்தவர் வழிபடும் உரிமையை ஒருவர் மறுக்க முடியாது.

ஆனால், சாதிப் பாகுபாடுகளைக் காரணம் காட்டி, பல கோவில்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமை அனுமதிக்கப்படுவதில்லை. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் தலித் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

விழாக் காலங்களில் ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் நிறுத்தப்படுகின்றனர். இதற்கு செட்டிப்புலம், காளப்பட்டி, காங்கியனூர் என ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். இந்து சமய அறநிலையத் துறை இது போன்ற பாகுபாடுகளுக்கு எதிராகவும், அனைவரின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி மன்றங்களில் செய்வதைப் போல, கோவில் அர்ச்சகர்கள், அறநிலையத் துறை அதிகாரிகள், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பதை கட்டாயமாக்கலாம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் பேசினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், “தமிழ்நாட்டில் அனைத்துக் கோவில்களிலும் அனைத்து சாதியினரும் நுழைந்து வழிபட உரிமை இருக்கிறது. எங்கும் மக்களுக்கு வழிபாடு மறுக்கப்படவில்லை” என்றார்.

ஆகமக் கோயில்களில் மட்டுமல்ல, ஆதிக்கசாதி கட்டுப்பாட்டிலுள்ள பார்ப்பனரல்லாதார் கோயில்களிலும் ‘தலித்’ மக்கள் அனுமதிக்கப்படு

வதில்லை என்ற உண்மையையும் சட்டமன்றத்தில் உறுப்பினர் எடுத்துக் காட்டியுள்ளார்.

அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று அறநிலையத் துறை அமைச்சர் துணிந்து சட்டமன்றத்தில் கூறியிருப்பது நகைப்புக்குரியது. முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் முயற்சி. சட்டங்கள் போட்டாலும், ஆய்வாளர்கள் பரிந்துரைத்தாலும் ‘மனுதர்மத்தின்’ ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லையே! ஆக, ‘மனுதர்ம’ சிந்தனை, ஆகமக் கோயில்களிலிருந்து அறநிலையத் துறை அமைச்சர் வரை ஆட்டிப் படைக்கிறது.

இந்த  மனுதர்மம் எரிக்கப்பட வேண்டாமா?

இது மானமுள்ள மனிதனின் கடமை அல்லவா?

 

பெரியார் முழக்கம் 17052012 இதழ்

You may also like...