ஈழத்தில், மீண்டும் எழுகிறார்கள் தமிழர்கள்!

யாழ்ப்பாணத்தில் செப்.24 அன்று ‘எழுக தமிழ்’ என்ற எழுச்சிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்தியிருக்கிறார்கள். வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் உருவாக்கிய அரசியல் சார்பற்ற ‘தமிழ் மாநிலக் குழு’ என்ற அமைப்பின் சார்பில் அவரே தலைமையேற்று வழி நடத்திய பேரணி இது. இதில் ஈபி.ஆர்.எல்.எஃப். டெலோ, புளோட் உள்ளிட்ட அமைப்புகளின்  அரசியல் பிரிவுகளைச் சார்ந்த அனைவரும் பங்கேற்றனர். தமிழ் தேசிய கூட்டணியில் சம்பந்தம் தலைமை யிலான ஒரு பிரிவினர் மட்டும் பங்கேற்க வில்லை. 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு மக்கள் ஆளும் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து வெளிப் படையாக போர்க்குரல் எழுப்பி வெளியே வந்திருக்கிறார்கள் என்ற அளவில் இந்தப் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர் பகுதி இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் சூழலில் மக்களின் இந்தப் போராட்டக் குரல் அந்த மக்களின் விடுதலை உணர்வுத் தீ அணைந்து விடவில்லை என்பதை உலகுக்கு அறிவித்திருக்கிறது. பேரணியின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள பிரகடனங்கள் மிகவும் முக்கியமானதாகும். அந்த பிரகடனத்தின் கருத்துகள் தற்போது தமிழ் மக்கள் எத்தகைய நெருக்கடிகள் அடக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை தெளிவாகப் படம் பிடித்துள்ளது. அதன் சுருக்கமான கருத்துகள்:

  • ஈழத்தில் இறுதிக் கட்டப் போரில் இராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; அய்.நா. மனித உரிமை ஆணையாளர் சையத் உசேன் போர்க் குற்றங்களை விசாரிக்கக் கூடிய திறமையோ, ஆற்றலோ இலங்கை நீதித் துறைக்கு கிடையாது என்று வெளிப்படையாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து 2015 செப்டம்பரில் அய்.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானத்தில் போர்க் குற்றங்களை இலங்கை மற்றும் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை சர்வதேச நாடுகளுடன் இணைந்து இலங்கையும் ஏற்றுக் கொண்டது. சர்வதேச அரங்கில் ஏற்றுக் கொண்ட கருத்தை இப்போது இலங்கை ஏற்க மறுத்து, விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகளை அனுமதிக்க முடியாது என்று கூறுகிறது. இந்த நிலையில் முழுமை யான சர்வதேச விசாரணையை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று பேரணி வற்புறுத்தியுள்ளது.
  • கடந்த 35 ஆண்டுகளாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற கொடூரமான சட்டம் அமுலில் இருக்கிறது. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்த கொடூரமான சட்டத்தை நீக்க வேண்டும் என்று அய்.நா.வில் இலங்கைக்கு அழுத்தங்கள் வந்தன. சட்டத்தை நீக்குவதாக இலங்கையும், 2015 செப்டம்பரில் அய்.நா.வில் சர்வதேச நாடுகளுக்கு உறுதி தந்தது. ஆனால் சட்டம் நீக்கப்படாததோடு, இது நாள் வரை இந்த கொடூர சட்டத்தின் கீழ் கைதுகளும் தொடருகின்றன. 15-20 ஆண்டுகளாக எந்த குற்றச்சாட்டும் முன் வைக்கப்படாமலேயே பல இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். எனவே பயங்கரவாத தடைச் சட்டம் உடனே நீக்கப்பட வேண்டும்.
  • இராணுவத்தின் உதவியுடன் போதை மருந்துகள் கடத்தி வரப்பட்டு, தமிழ் இளைஞர்களை சீரழிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஒரு இனத்தின் விடுதலை உணர்வை, உலகின் பல் வேறு நாடுகளில் ஆக்கிரமிப்பாளர்கள் போதைக்கு அடிமையாக்கும் கொடுமைகள் தொடருகின்றன.
  • இலங்கை அரசு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. “இலங்கை ஒற்றையாட்சி முறையிலேயே நீடிக்கும்; புத்த மதமே அரசு மதம்” என்று அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் குறித்து அரசுக்கு எந்த கவலையும் இல்லை. தமிழர்கள் ஒரு தனி இனம், அவர்களுக்கென வரலாற்று ரீதியாக  தனி தாயகம் உண்டு என்பதை இலங்கை அங்கீகரித்து, அதனடிப்படையில் தமிழர்கள் தங்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யக் கூடிய ஒரு கூட்டாட்சி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று, எழுக தமிழ் பேரணி பிரகடனம் செய்திருக்கிறது. புதிய அரசியல் சட்டம் குறித்து தமிழர்களிடையே வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேரணி வற்புறுத்தியதோடு தமிழ் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக கருத்துகளை தெரிவித்திட இராணுவத்தை தமிழர் பகுதியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்;  பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் பேரணி வலியுறுத்தியது.

 

ஈழத்தில் இப்போது என்ன நடக்கிறது?

இப்போது ஈழத் தமிழர் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை விளக்கி யாழ்ப்பாண கத்தோலிக்க சபையின் அருட்தந்தை எஸ்.வி. மங்கள ராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இவரது தலைமையில் ‘நீதி மற்றும் அமைதிக்கான ஆணையம்’ ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  • தமிழர்களை சிறையிலிருந்து விடுதலை செய்வதாக கூறிவரும் இலங்கை அதில் உண்மையாக இல்லை. விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ‘இராணுவ மறுவாழ்வு முகாம்’ என்ற முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, மனநல சிகிச்சை தரப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இந்த முகாமுக்கு அனுப்பப்பட்டு விடுதலையான முன்னாள் போராளிகள் திடீர் திடீரென்று பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார்கள். இப்படி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 107 பேர். இவர்களுக்கு உயிருக்கு ஆபத்துகளை உருவாக்கக்கூடிய ‘நச்சு’ மருந்துகளை ஊசி  வழியாக செலுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் அவர்களே இந்த சந்தேகத்தை எழுப்பி சர்வதேச மருத்துவ நிபுணர் குழு ஒன்றை அமைத்து, விடுதலையான போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
  • சிறையில் உள்ள போராளிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற விசாரணைக்காக பல்வேறு ஊர்களுக்கு அழைத்து அலைகழிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரே ஒரு வழக்கிலிருந்து மட்டும் விடுதலை செய்துவிட்டு முன்னாள் போராளிகளை விடுதலை செய்துவிட்டதாக அரசு உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
  • அனுராதாபுரம் சிறையில் இப்போது 23 தமிழர்களை விடுதலை செய்யப் போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தங்களை, விடுதலைக்குப் பிறகு ‘இராணுவ மறுவாழ்வு’ முகாமுக்கு அனுப்பக் கூடாது என்று சிறைக்குள் தமிழர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
  • தமிழர்களுடைய நிலங்களை சிங்கள இராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது. நல்ல விவசாயம் செய்யக் கூடிய நிலங்களும், கடல் ஓரப் பகுதியில் மீன் பிடித் தொழில் செய்து வந்த தமிழர்களின் நிலங்களும் இராணுவத்தின் பிடியிலேயே இருக்கின்றன. கிளிநொச்சியில் 20,000 ஏக்கர் நிலங்களை இராணுவமே ஆக்கிரமித் திருக்கிறது. வடக்கு மாகாணத்தில் இராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ்சேனா நாயகா வலிகாமப் பகுதியில் இராணுவம் கைப்பற்றியுள்ள 4500 ஏக்கர் நிலத்தில் ஒரு அங்குலத்தைக்கூட விடுவிக்க மாட்டோம் என்று கடந்த வாரம் அறிவித்திருக்கிறார்.
  • உலக நாடுகளை ஏமாற்ற, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ‘தனி அலுவலகம்’ ஒன்றை இலங்கை அரசு அமைத்திருக்கிறது. ஆனால், அலுவலகம் கொழும்பில் திறக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், கொழும்புக்குப் போய் காணாமல் போனவர்களை எப்படி பதிவு செய்ய முடியும்? இந்த அலுவலகத்தை தமிழர் பகுதியிலேயே திறக்கப்படக்கூடாதா என்று கேட்கிறார்கள். இலங்கை மறுக்கிறது. இந்த அலுவலகத்துக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் இலங்கை அரசு வழங்கவில்லை.
  • கிளி நொச்சி மாவட்டத்தில் 104 பள்ளிகள் இயங்குகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 485 குழந்தைகள் போரில் தாய், தந்தை இருவரையுமே இழந்தவர்கள், பெற்றோரில் ஏதேனும் ஒருவரை இழந்தவர்கள், ஆயிரத்துக்கும் மேல் இருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை உடலில் ‘ஷெல்வீச்சு’ துகள்களோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவது இல்லை-என்று அருட்தந்தை மங்களராஜா விடுத்த அறிக்கை கூறுகிறது.

 

‘தி இந்து’ நாளேட்டில் அகிலன் கதிர்காமர் எழுதிய ஒரு கட்டுரையில் தமிழர்களின் அவல நிலையை விவரிக்கிறது: இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி, ‘சிறிசேன – விக்ரமசிங்க அரசு’ கொண்டு வந்த 2016ஆவது ஆண்டு பொது வரவு-செலவு அறிக்கையை ஆதரித்தே வாக்களித்தது. அப்படியிருந்தும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மறுகுடியமர்வு அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் 1,400 கோடி இலங்கை ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது இலங்கை அரசின் மொத்த வரவு-செலவில் வெறும் 0.5 சதவீதம்தான். இலங்கையின் வடக்கில் தமிழர் வாழும் பகுதியில் ஏற்பட்ட சேதங்களைக்களைந்து, மறுகட்டமைப்புகளை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவிருந்த நன்கொடையாளர்கள் மாநாட்டை எந்தவிதச் சந்தடியும் இல்லாமல் இலங்கை அரசு இரத்து செய்துவிட்டது. ஓராண்டுக்கு முன்னால் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் மொத்தம் 65,000 வீடுகளைக் கட்ட இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்தது. அந்த முடிவை சீர்குலைக்கும் வகையில் வேறு ஒரு முடிவு எடுத்தது. புதிய வீடுகளைக் கட்டுவதற்கு பதிலாக 100 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில், ஆர்சிலர் மிட்டல் என்ற பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து முன் கூட்டியே கோக்கப்பட்ட உருக்கு வீடுகளை வாங்குவதென்று அரசு தீர்மானித்தது. அதுவும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இலங்கையின் வடக்கிலேயே சிமென்ட் பயன்படுத்தி பாதிச் செலவில் நல்ல வீடு கட்ட முடியும் என்ற நிலையில், தயார் நிலையிலான உருக்கு வீடுகள் எதற்காக என்று கேள்வி எழுப்பப்பட்டது. சிமென்ட் பயன்படுத்தி வீடுகள் கட்டப்பட்டால், இலங்கையின் வடக்குப் பகுதியும் வளம்பெறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து வீடுகள் கட்டும் திட்டங்கள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் வடக்குப் பகுதியை ஒரு முறை சுற்றி வந்தால், பளபளவென்று பளிச்சிடும் சாலைகளும், நகர்ப்புறங்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் என்றழைக்கப்படும் பல்பொருள் அங்காடிகள், நிதி நிறுவனங்கள் என்று கண்ணில் படுவதால் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுவிட்ட மாயத் தோற்றம் ஏற்படுகிறது. இந்தச் சாலைகளை விட்டு இறங்கி, சில மீட்டர் தொலைவு நடந்து தெருக்கள், சந்துகளில் நுழைந்து பார்த்தால் வறுமையும் பசியும் பட்டினியுமே கண்ணில் படுகிறது. அன்றாட வயிற்றுப்பாட்டுக்குக்கூடப் பணம் கிடைக்காமல், கடனில் ஆழ்ந்து கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

மக்களுடைய வருமானமும் வருமானம் பெறுவதற்கான வழிகளும் குறைகின்றன. தமிழர் பகுதிகளில் விவசாயமும் மீன்பிடித் தொழிலும் நசிந்துவருகிறது. வடக்கில் போர் நடந்த ஊர்களில் மக்களுக்குக் கிடைக்கும் ஊதியம் நாட்டிலேயே குறைவு. முல்லைத்தீவு மாவட்டத்தில் மாதம் முழுக்க வேலை செய்தாலும் மொத்தமாக ரூ.2,157கூடக் கிடைப்பதில்லை. மாவட்ட மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டாலர் அளவுக்குக்கூட ஊதியம் பெறுவதில்லை. 2012, 2013-ல் எடுத்த கணக்கெடுப்பு இதைத் தெரிவிக்கிறது – என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 29092016 இதழ்

You may also like...