சீர்திருத்தமும் இந்துமத ஸ்மிருதியும்
திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தற்காலம் ஆலோசனையிலும் கமிட்டி விசாரணையிலும் இருந்து வரும் குழந்தை விவாகத் தடை மசோதாவைக் கண்டித்து ஒரு “ஸ்ரீமுகம்” வெளியிட்டிருக்கின்றார். அதை “சுதேசமித்திரன்” பிரசுரித்துள்ளபடி மற்றொரு பக்கத்தில் எடுத்துப் போட்டிருக்கின்றோம். அதன் காரண காரியங்களைப் பற்றி ஆராயுமுன் திரு. சத்தியமூர்த்தி யார் என்பதையும், அவர் எந்த முறையில் வெளிப் படுத்தியிருக்கின்றார் என்பதையும் முதலில் கவனிப்போம். திரு. சத்தியமூர்த்தியை அவருடைய தனித்த ஹோதாவில் ஒரு சாதாரண மனிதர் என்பதாகச் சொல்லிவிடலாமானாலும் அவருக்கு இம் மாதிரியான ஸ்ரீமுகங்கள் வெளியிட சந்தர்ப்பங்கள் அளித்ததும் அந்த ஸ்ரீமுகங்களை மக்கள் கவனிக்க நேர்ந்ததும், சில விஷயங்களிலாவது அவர் இந்திய மக்கள் பிரதிநிதி என்கின்ற தன்மை அடைந்திருக்கிறார் என்பதே. அதாவது “தேசீய அரசியல்” இயக்கம் என்று சொல்லப்படுவதில் ஒரு குறிப் பிட்ட மனிதராகவும், சென்னை சட்டசபை என்பதில் ஜனப்பிரதிநிதி அங்கத்தினராகவும், அதிலும் படித்த மக்களின் பிரதிநிதியாகவும், அதாவது யூனிவர்சிட்டி பிரதிநிதியாகவும், சென்னை முனிசிபாலிட்டியின் ஒரு அங்கத்தினராகவும்,...