சமதர்மம்

 

தலைவரவர்கள் சமதர்மம் பொதுவுடமை என்பதைப் பற்றி பேசுவது குற்றமல்ல என்றும், ஹைகோர்ட் ஜட்ஜ் ஒருவர் தீர்ப்புக் கூறிவிட்டதாகச் சொன்னார். அந்த மாதிரி பல தீர்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அவை காகிதத் தீர்ப்பேயொழிய நடைமுறைத் தீர்ப்பல்ல.

அந்தத் தீர்ப்புகளுக்கு எல்லா மேஜிஸ்ட்ரேட்களும் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. அந்தந்த சந்தர்ப்பம் அந்தந்த இடத்து அவ்வப்போதைய நிலமை, சர்க்காரின் மனப்பான்மை, பேசிய ஆளின் தன்மை ஆகியவைகளைக் கவனித்துத்தான் அமுல் நடத்துவார்கள்.  ஜட்ஜி தீர்ப்பை விட சட்டமே பிரதானமானது. பொது உடைமை சட்ட விரோதம் என்று சர்க்கார் ஒரு பக்கத்தில் சட்டம் செய்துவிட்டு மற்றொரு பக்கம் பொது உடைமைப் பிரசாரம் குற்றமல்ல என்று தீர்ப்புச் செய்தால் இதில் ஏதாவது இரகசியம் இருக்கத்தான் வேண்டும். சட்டம் பொது ஜனங்களுக்கு, தீர்ப்போ குறிப்பிட்ட நபருக்கு. தலைவர் போன்ற வக்கீல்கள் பொது உடைமை பிரசாரமல்ல, ரஷ்ய பிரசாரமே செய்தாலும் எந்த ஜட்ஜியும் குற்றமல்ல என்றுதான் சொல்லுவார்கள்.

மற்றபடி உண்மையான எண்ணத்தோடும், எவரொருவர் சொல்லுவதைப் பத்துப் பேராவது கேட்டு உணர்ச்சி கொண்டு விடுவார்கள் என்று கருதக்கூடியவர்கள் யாராவது பேசினால் சர்க்கார் இந்த ஹைகோர்ட்டு தீர்ப்புகளையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். அந்தவுணர்ச்சி பரவுவதை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தாக வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள்.

என்னுடைய வழக்கில் ஹைகோர்ட்டு தீர்ப்புகளை எடுத்து சொன்னதில் ஜில்லா மேஜிஸ்ட்ரேட், “”ஹைகோர்ட் தீர்ப்புகளை பின்பற்ற எனக்கு சக்தி போராது அதெல்லாம் ஹைகோர்ட்டார் பார்த்துக் கொள்ளட்டும்” என்றும் சொல்லி தண்டித்து விட்டார்.

ஹைகோர்ட்டில் எவ்வளவு தீர்ப்புகள் காட்டியும் கீழ்கோர்ட் தீர்ப்பே காயமாகி விட்டது. எந்தத் தீர்ப்பையும் ஜட்ஜி லட்சியம் செய்யவில்லை.

ஆதலால் ஜட்ஜ்கள் தீர்ப்புகளைவிட சட்டம்தான் முக்கியமானதாய் இருக்கிறது. சட்டமோ சர்க்கார் இஷ்டப்படி நடக்க இடம் கொடுக்கக் கூடியது.

ஆனால், சட்டத்தில் சமதர்மம் என்பது சட்ட விரோதம் என்று இன்னமும் நமது அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. நான் சட்டம் மீறுவது என்ற திட்டத்தைக் கொண்டவனல்ல. ஆனாலும் இன்று சமதர்மத்தைப் பற்றிப் பேசுவதைப் பற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை.

நிற்க, இன்று இன்ன விஷயம் பேசுவது என்பதைப் பற்றி முன்னதாக ஒன்றும் எனக்கு சொல்லாமல் இப்பொழுதுதான் சொல்லப்பட்டது. ஆனாலும் அதைப்பற்றி ஏதோ சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.

தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷியலிசம் என்னும் ஒரு வார்த்தைக்கு தமிழ் மொழிபெயர்ப்பாக கையாளப்படுகிறதென்றாலும் சோஷியலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒரு விதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அனேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும் தகுதிக்கும், சௌகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடி தான் பிரயோகிக்கப் படுகின்றது. சில இடத்தில் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.

ஆகவே சோஷயலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையருக்க அவ்வார்த்தையில் எவ்வித குறிப்பும் இல்லை.

சில இடத்து சோஷியலிசத்துக்கும் பொது உடமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடத்தில் வெகு சாதாரண விஷயத்திற்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடத்தில் பொதுவுடமை வேறாகவும், சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றது.

இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்கு சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழ வேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இன்று இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு, தாழ்வு, பேதாபேதம் இல்லை.

பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நமதுநாட்டு சமுதாய உயர்வு தாழ்வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது. அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால் அதற்கு நம் நாட்டு மக்கள் அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்ப மாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள். ஏனெனில் பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்மந்தப்பட்டு அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும் அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்கு தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டு சமதர்மம் பேசுவது பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவேயாகும்.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதல்படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக்கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேதவாதத்தை முக்கியமாய் வலியுருத்தி வருகிறேன்.

நிற்க, பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அருத்தத்தில் இருந்தாலும் சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவைகள் எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்மவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்று தான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொருத்த வரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்து தான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதிபேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால் தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும்.

பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய், காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள் களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத் தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்கு காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நமது மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மம் சொன்னால் தான் உண்மையாக கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீர வேண்டியிருக்கிறது.

நாஸ்திகனாவதற்கு கடவுள் இல்லை என்றுகூட சொல்ல வேண்டிய தில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது.

ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக  கடவுளால் கற்பிக்கப்பட்டதாக கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப் படுகின்றன. உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும் மேலானதுமான புஸ்தகம் என்று பெயர்.

முகம்மதியர்கள் கொரானை மதிப்பதைவிட, கிறிஸ்தவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதித்திருக்கிறார்கள். ஆனால் அப் புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும் அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அருத்தம்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில் கூட 100க்கு 99லு பேர்கள் கீதையை பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவைகளைப் பற்றி கண்ணீர் விடும் தோழர் காந்தியார் கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாய் சொல்லுகிறார்.

கீதையே தன்னை நடத்துவதாகவும் சொல்லுகிறார். இரவும் பகலும் ஒழிந்த நேரம் முழுவதும் கீதை பாராயணத்திலேயே இருக்கிறார்.

இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகள் எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தவரு என்றோ கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை என்றோ சொல்ல துணியாவிட்டால்  சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப்பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் கீதையையும் கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்திகனாவதற்கு தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்கு கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொருப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் வேண்டும்.

ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும் பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும் கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால், அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும். எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கி பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் படிக்கும் மற்றொருவனை கீழ் ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேரிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய் நோயாய், கட்டக் கந்தை அற்று, இருக்க இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.

இந்தக் காரியங்களுக்கு கடவுளை பொருத்துகின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.

ஊரார் உழைப்பை கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள், இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டுக்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?

ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்கு சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார்தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்கு கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால் அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்.

மற்றும் கடன்பட்டு வட்டிக் கொடுத்த மக்களுடையவும் பாடுபட்டு பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களை கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்கு கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்கு போக, தாசிகளை வைத்து உர்ச்சவம் வாண வேடிக்கை செய்ய பாழ்பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இந்த அக்கிரமங்களை பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள் தான் இருக்க முடியும்?

அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதில் யாருக்கு என்ன நஷ்டம் வரும்?

அப்படிப்பட்டக் கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்து போகுமே என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?

தோழர்களே இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளை கற்பித்து நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.

சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள், கொடுங்கோன்மைக்காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலத்துக்கு தான் பயன்படுகின்றதே ஒழிய, வேறு காரியத்துக்கும் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு ஆக என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கு மானால், அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி அது இருந்தாலும் அது இல்லா விட்டாலும் நமக்கு கவலையில்லை.

இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேள்க்கிறேன்.

கடவுளை சதாகாலம் கட்டியழுது, அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்க காரியங்கள் நமக்குத் தெரியாதா?

கடவுளுக்கு ஆக லக்ஷம், 10 லக்ஷம் பணம் போட்டு கோவிலை கட்டிக் கும்பாபிஷேகம் செய்து ஐந்து வேளை 6 வேளை பூஜை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்யாசியாய், குருவாய், சங்கராச்சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய், பாதிரியாய், பெரிய குருவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?

எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக் கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை  மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக் கூடாது என்றும் தான் சொல்லி வருகிறேன். மனித வாழ்க்கைக்கும் பேதா பேதங்களுக்கும் கடவுள் சம்மந்தமில்லை என்று சொல்லும் பக்ஷம் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?

ஆகவே தோழர்களே! சமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்களாகிறார்கள்? என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன். இனி மற்ற விஷயம் மற்றொரு சமயம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குறிப்பு:            08.09.1935 ஆம் நாள் தேவகோட்டையில் தோழர் லட்சுமிரதன் பாரதியார் வீட்டு மைதானத்தில் “சமதர்மம்’ என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு

குடி அரசு  சொற்பொழிவு  15.09.1935

You may also like...