இராமனாதபுரம் ஜில்லா சிவில் கோர்ட்டுகளில் பார்ப்பன ஆதிக்கமும் எதேச்சாதிகாரமும்

 

பிராமணரல்லாதாருக்கே வேலை கொடுக்க வேண்டுமென்றும், பிராமணர்களுக்கு உத்தியோகம் கொடுக்கக் கூடாதென்றும் ஹைகோர்ட் சர்க்குலர்களும், கவர்ன்மெண்டு ஆர்டர்களும் இருந்தும், அவைகளைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு நூற்றுக்கணக்கான பார்ப்பனர்களை திருச்சி, தஞ்சாவூர் ஜில்லாக்களிலிருந்து இந்த ஜில்லாவிற்கு இறக்குமதி செய்து வருகிறார்கள். சமீபமாக ஏற்பட்ட வகுப்புவாரி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்ற ஜி.ஓ.வை குயுக்தியாக அர்த்தம் பண்ணி, தங்கள் டிபார்ட்மெண்டுக்கு அமுலுக்கு வரவில்லையெனச் சொல்லி விட்டார்கள். வருஷத்தில் பெயரளவில் சில பிராமணரல்லாதாருக்கு, ஒரு மாச இரண்டு மாசத்தில் வேலை போட்டு விரட்டிவிட்டு, நீடித்த பதிலையும் பெர்மனெண்டு வேலைகளையும் பிராமணர்களுக்கே போட்டு தங்கள் ஆதிக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

8 வருஷம் 10 வருஷங்களுக்கு முன்னதாகவே இந்த டிபார்ட்மெண்டில் நிலைத்து ஆக்டிங் பார்த்து வரும் பார்ப்பனரல்லாதாரின் சர்வீசைக் கவனித்தால், 2 அல்லது 3 வருஷம் தானிருக்கும். ஏனெனில் வருஷத்தில் 4 மாசம் தான் பதில் போட்டிருப்பார்கள். சமீப காலத்தில் வந்த பிராமணன், துடர்ச்சியாக 2 அல்லது 3 வருஷம் பதில் பார்த்துவிட்டு, பிராமணரல்லாதாருக்கு சீனியர் என வந்து விடுவான். இப்பிராமணர்களுக்கே வேலைகளும் பெர்மனன்டாகிவிடும். ஆதலால் பிராமணரல்லாத ஒருவன் 10 வருஷங் களுக்கு முன்பு இருந்து ஆக்டிங் பார்த்து வந்தாலும், சீனியராக மதிக்கப்பட மாட்டான். தொடர்ச்சியாக ஆக்டிங் வேலையும் கிடைக்காது. காயமான உத்தியோகம் கிடைப்பதரிது. சிலருக்கு இந்த ஆக்டிங் வேலையும்கூடப் போடுவதில்லை. சீனியர் பிரகாரம் சர்வீசைக் கவனித்து வேலை போடுவதாகச் சொல்லுவார்கள். திடீரென ஒரு மாசம்கூட சர்வீஸ் இல்லாத புதிய பிராமணர்களுக்கு பெர்மனென்டாக உத்தியோகங்கள் போட்டுவிடுவார்கள். இவ்விதமே இதுவரை எத்தனையோ புதிய புதிய பார்ப்பனர்களுக்கு வேலை போட்டுக்  கொண்டு வருகிறார்கள். அப்பொழுது சீனியாரிட்டி என்பதையே மறந்து விடுவார்கள். இவர்கள் செய்யும் அநீதியை மேல் உத்தியோகஸ்தர்களுக்குத் தெரிவித்தால், அவர்களுக்கு வேண்டிய கெடுதியைச் செய்வார்கள். “”பிராமணர்களுக்கு மட்டும் சாப்பாடு” என சில கிளப்புகளில் போர்டு போட்டிருப்பதைப் போல் “”பிராமணர்களுக்கு மட்டும் உத்தியோகம்” என கோர்ட்டு வாசல்களில் போர்டுதான் போடாத குற்றம். போர்டு போட்டிருந்தால் பிராமணரல்லாதாரில் சிலர் இதில் நுழைந்து கஷ்டப்பட்டு வாழ்நாளை வீண் நாளாக ஆக்கி இருக்க மாட்டார்கள். சுயமரியாதையுள்ள எந்த மனிதனும் இதைச் சகிக்க முடியுமா!

சென்ற 10 வருஷங்களாக எத்தனை பிராமணரல்லாதாருக்கும், பிராமணர்களுக்கும் பெர்மனென்டாக வேலை போட்டிருக்கிறார்கள். சென்ற 10 வருஷங்களாக இந்த ஜில்லாவில் ஜட்ஜுகளும், சிரஸ்தார்களும் மற்ற உத்தியோகஸ்தர்களும் பிராமணர்களாகவே இருந்து வருகிறார்கள். சென்ற மாசம் இராமனாதபுரம் ஜில்லாக் கோர்ட்டிலும், சிவகங்கை சப் கோர்ட்டிலும் திடீரென ஒரு மாசம்கூட சர்வீஸ் இல்லாத 2 பார்ப்பனர்களுக்கு பெர்மனென்டாக அமினா வேலை போட்டிருக்கிறார்கள். 8 வருஷம் 10 வருஷங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் கதி என்ன ஆகிறது. þ நியமுகங்களை ரத்துச் செய்து பிராமணரல்லாதாருக்குப் போடும்படியாக ஹைகோர்ட்டாரையும் கவர்ன்மெண்டாரையும் கேட்டுக் கொள்கிறோம்.

இப்பொழுது இந்த ஜில்லாவில் 4, 5 அமினா வேலைகள் பெர்மனென்டாக காலியாயிருக்கிறது. இவைகளையாவது பிராமணரல்லா தாருக்குக் கொடுப்பார்களா? அல்லது அக்கிரகாரத்திலுள்ளவர்கள் தான் உரித்தானவர் களெனச் சொல்லப் போகிறார்களா?

கவர்ன்மெண்டாரும் ஹைகோர்ட்டாரும் கிருபை செய்து பிராமண ரல்லாதாரின் குறைகளை நீக்கி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைச் சீக்கிரமாக அமுலுக்குக் கொண்டுவந்து உதவியற்றுத் தவிக்கும் பிராமணரல்லாதாரை ரட்சிக்கும் படியாகக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.

குடி அரசு  கட்டுரை  23.06.1935

You may also like...