கழகப் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 105ஆவது வயதில் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 17.8.2019 அன்று 105ஆம் அகவையில் முடிவெய்தினார்.

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நெருங்கிய நண்பர் பெரியார் பெருந்தொண்டர் வைத்திலிங்கம், பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வந்தார். சிங்கப்பூரில் பணியாற்றி தனது கடும் உழைப்பால் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தார் வைத்திலிங்கம்.

நிறைந்த உழைப்பும், கடன் வாங்காமல் வாழும் பண்பும், பசித்தபின் அளவோடு உண்ணும் பழக்கமும் அய்யாவின் நிறை வாழ்வுக்கு காரணமாக அமைந்தன என்று அவரே அடிக்கடி பல்வேறு கூட்டங்களில் குறிப்பிட்டிருக்கிறார். சிறந்த கவிபுனையும் ஆற்றல் கொண்டவர். கவிதைகளை கையெழுத்துப் பிரதிகளாகவே வைத்திருக்கிறார். பேராவூரணி திருக்குறள் பேரவை வைத்திலிங்கம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

கழக சார்பில் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் மற்றும் ஆயர் ஜேம்ஸ், மெய்ச்சுடர் வெங்கடேசன், அ. கோவேந்தன், தா. கலைச்செல்வன் அன்னாரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி வணக்கம் செலுத்தினர்.

பெரியார் முழக்கம் 22082019 இதழ்

You may also like...