எந்த சங்ககாலப் புலவர்களின் பெயருக்குப் பின்னாலும் ஜாதி கிடையாது புலவர் செந்தலை கவுதமன்

நம்முடைய மரபு, செய்த தொழிலின் காரணமாக வந்த குடி மரபு! அந்தக் குடி இனக் குழுவானது, குல மானது. அதை இலக்கணப்படுத்தி வரையறுத்தபோது அது தான் திணை அமைப்பு. அந்த திணைக்குள்ளே நிலம் வரும், மக்கள் வருவார்கள். வாழ்க்கை முறையும் வரும். அந்த திணை வழி அமைப்பைத் தான் பிற் காலத்தில் ஜாதி ஆக்கி விட்டார்கள்.

இந்த அரங்கத்தில் இருக்கின்றவர்களையெல்லாம் மத ரீதியாக அமருங்கள் என்று சொன்னால் ஒரு மூன்று அல்லது நான்கு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். ஜாதி ரீதியாக அமருங்கள் என்று சொன்னால் ஒரு நாற்பதுப் பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அனைவரும் தமிழர்களாக அமருங்கள் என்றால்! உட்கார்ந்துதான் இருக்கிறோம். தமிழ் நம்மை இணைக்கும்! ஜாதி நம்மைப் பிரிக்கும்! மதம் நம்மைப் பிளக்கும்! ஏன் நமக்கு இந்த இழிநிலை என்று எண்ணுவதற்கும், இப்படித்தான் இருந்தோமா என்று எண்ணுவதற்கும் தான் இப்படி ஒரு தலைப்பை வழங்கியிருக்கிறார்கள்.

சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட எந்த புலவனுக்கும், பெயர் இருக்குமே தவிர பெயருக்குப் பின்னால் ஜாதி இருந்தது கிடையாது. பெயருக்கு முன்னால் அவருடைய புலமையை, ஆற்றலைக் காட்டக்கூடிய ஒரு அடைமொழி இருக்கும். “கணக்காயர் நக்கீரனார்” ‘கணியன் பூங்குன்றனார்’ என்று தான் இருக்கும். அதைத்தான் தொல்காப்பியர் சொல்கிறார், “சிறப்பினாகிய பெயர் நிலைக் கிளவி பின் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்” சிறப்பிற்குரிய எந்த ஒரு அடை மொழியும் பெயருக்கு முன்னால் இருக்குமே தவிர பின்னால் இருக்காது. இப்போது பின்னால் போடு கிறார்களே, நாயுடு, கவுண்டர், தேவர் அது இழிந்தது என்ற பொருளை தொல்காப்பியர் சொல்லுகிறார். பெயருக்கு முன்னால் போடுவது மட்டுமே பெருமைக்குரியது. பெயருக்குப் பின்னால் போடுகின்ற எதுவும் இழிந்தது.

பெயருக்குப் பின்னால் போடுகின்ற ஜாதிப் பட்டம் எப்பொழுது அறிமுகமானது? 400 ஆண்டுகள் மட்டும் தான்!

ஜாதி என்பதினுடைய வரலாறே வெறும் எண்ணூறு ஆண்டு வரலாறு தான். ஜாதியின் வரலாறும் எண்ணூறு ஆண்டுதான். ஒரு சில ஜாதிக்காரர்கள் ஏதோ உலகம் பிறந்தது முதலே ஜாதி இருந்தது போல் பேசுகிறார்கள். 2000 ஆண்டுகளாக 1000 ஆண்டுகளாக அவர்களின் விருப்பத்திற்கேற்ப கூட்டிக் கொண்டே போகிறார்கள். ஜாதிப்பெயர் இருந்தது உண்மை! ஆனால் ஜாதி ஏற்றத்தாழ்வு என்பது வெறும் எண்ணூறு ஆண்டுகளாக இருப்பது என்பது தான் வரலாற்று உண்மை. பெயரிலே இருந்த ஜாதி என்பது பிறப்பு வழி ஜாதி அல்ல. அது தொழில் வழி ஜாதி. “ஈன்ரு புறந்தறுதல் என்றலைக் கடனே! சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே! வேல் முடித்து தருதல் கொல்லர்க்கு கடனே” சங்க இலக்கியத்தில் கொல்லன் உண்டு. நான்கு குடிகளாக நாம் இருந்தோம். ‘துடியன், பாணன், பறையன், கடம்பனென்று இந்நான்கு அல்லது குடியுமில்லை’. நம்முடைய மரபு செய்த தொழிலின் காரணமாக வந்த குடி மரபு! அந்தக் குடி இனக்குழுவானது, குலமானது. அதை இலக்கணப்படுத்தி வரையறுத்தபோது அது தான் திணை அமைப்பு. அந்த திணைக்குள்ளே நிலம் வரும், மக்கள் வருவார்கள். வாழ்க்கை முறையும் வரும். அந்த திணை வழி அமைப்பைத் தான் பிற்காலத்தில் ஜாதி ஆக்கிவிட்டார்கள். ஊரைக் காவல் காத்தவன் “காமிண்டனாக” இருப்பான். கி.பி பதினோறாம் நூற்றாண்டு வரை காமிண்டன் தான். இன்றைக்கு அதனுடைய பெயர் ‘கவுண்டன்’. காமிண்டன் தான் கவுண்டன் ஆனான். ஆக பதினோறாம் நூற்றாண்டுக்கு முன்னால் கவுண்டர் இல்லை. கள்ளர் உண்டு, மறவர் உண்டு, அகமுடையார் உண்டு, செட்டியார் உண்டு. வெளிநாட்டிற்கு போனால் செட்டி ஆவதும் உண்டு. செட்டி சேட் ஆவதும் உண்டு, சேட் சேட்ஜி ஆவதும் உண்டு. அதைத்தான் சொன்னார்கள் ‘மூலமுதல்’ எல்லாவற்றிற்கும் கொடுத்தோம். சொற்களைக் கொடுத்தோம் நாம். செய்த தொழிலின் காரணமாக அவர்களுக்குப் பெயரைக் கொடுத்தோம். எதிரிநாட்டுப் படையை கள்ளத்தனமாக ஆய்ந்து வருபவனுக்கு பெயர் ‘கள்ளன்’. அரண்மனையின் செயல்களை பார்ப்பவன் அகமுடையன். எதிர்த்து நின்று போரிடுபவனுக்கு பெயர் மறவன். விளைகின்ற பொருளை செட்டாக வாங்கி அளவான விலையை வைத்து விற்பவனுக்கு பெயர் ‘செட்டி’. நான் ஓய்வு பெற்ற ஆசிரியர். ஆசு என்றால் குற்றம். மாணவனிடத்தில் ஆசு இல்லாமல் செய்கிறவர் “ஆசிரியர்”. அதே போல மரத்தில் இருக்கிற மாசு நீக்குகின்றவர், வாயால் நீக்க முடியாது அரிந்து எடுக்க வேண்டும் அவர் ‘ஆசாரி’. சொற்பொருள் அடிப்படையிலே ஆசிரியரும், ஆசாரியாரும் ஒன்றுதான். ஆனால், இருவருக்கும் ஒரே மதிப்பா? இப்போது ஆசாரியென்றால் இழிவு என்று அதை விஸ்வகர்மா ஆக்கிவிட்டார்கள். கோனார் என்பது கூட யாதவர் ஆகி இப்போது யாதவ் ஆகிவிட்டது. நாடாரைக்கூட பண்டாரி ஆக்கக்கூடிய முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. காரணம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கிற வாய்ப்பை நாம் வழங்காததுகூட காரணமாக இருக்கலாம்.

எல்லா ஜாதிக்கும் ஒரு காரணமுன்டு. சான்றோர் என்றால், இன்றைக்கு இருக்கிற சான்றோருக்கான பொருள் வேறு. சான்றாக வாழ்வோர் சான்றோர். ஆனால், சங்க இலக்கியத்தில் வேறு பொருள் உள்ளது. சங்க இலக்கியத்திலேயே சான்றோர் என்றால் வீரர். போர் வீரராக இருந்தவருக்கு பெயர் சான்றோர் . சான்றோர் தான் சாணார் ஆனார். சாணார் தான் நாடார் ஆனார். குந்தம் என்றால் போர்க் கருவி. போர்க் காலங்களிலே அவர் குந்தம் என்ற கருவியை ஏந்துவார். ஓய்வு காலங்களிலே குந்தம் என்ற கருவியைக் கொண்டு நெசவு செய்வார். அவர் தான் செங்குந்தர்! தந்தை அளவாக வணிகம் செய்கின்ற செட்டியாராக இருப்பார், அவருடைய மகன், எனக்கு உட்கார்ந்து செய்கின்ற வேலையெல்லாம் பிடிக்காது நான் வீரத்தோடு இருக்க வேண்டுமென்று ஊர்க்காவல் வேலையை செய்வான், அவன் கவுண்டனாக இருப்பான். அவனுடைய மகன் எனக்கு மரத்தினுள் கலை பொருட்கள் செய்ய ஆசை என்று அவன் ஆசாரியாக இருப்பான். இது தான் தமிழ்ச் சமூக வரலாறு. மன்னர் கால வரலாறு. ஜாதி கட்டமைப்பு என்பது அப்படித்தான். தாத்தா ஒரு ஜாதி, மகன் ஒரு ஜாதி, பேரன் ஒரு ஜாதி என்பதுதான். பிறப்பு வழி ஜாதி என்பது அல்ல. தொழில் வழி ஜாதி. ஜாதிப் பெயர் உண்டு. பிறப்பு வழி ஜாதி என்பது பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பின் தான். “யாயும் ஞாயும் யாராகி யரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி அறிதும், செம்புலப் பெயல்நீர்ப் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” அகமண முறை என்பது அப்போது இல்லை.

இந்த ஜாதியின் கொடிய பண்புகள் இந்த எண்ணூறு ஆண்டுகளாக வந்தவை. அதில் முதன்மை அகமணம். குறிப்பிட்ட பிரிவுக்குள் மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும். நாலு பேர் என்ன சொல்லுவான் என்னைப் பற்றி! என்னுடைய ஜாதிப் பெருமை என்னாவது? என்கிறபொழுது தான் ஆணவக் கொலை வருகிறது. ஆணவக்கொலையைத் தான் கவுரவக் கொலை என்கிறார்கள். அந்த அகமண முறை தான் இன்றைக்கும் ஜாதியை இறுக்கமாக வைத்திருக்கிறது. இப்போது இன்னொரு கேள்வி வரும், ஏன் மதங்களில்  இஸ்லாம் மதத்தில் பிரிவுகள் இல்லையா? உலகில் வேறு எங்கும் இல்லையா என்று, அங்கு பிரிவுகள் உள்ளது அடுக்குகள் இல்லை. இங்கு உள்ள  ஜாதி அடுக்குமுறைக் கொண்டது. பிரிவுகள் சக்கரம் போன்றது மேலே உள்ளது கீழே வரும், கீழே உள்ளது மேலே வரும். அதில் சமத்துவம் உள்ளது. ஆனால் நம்முடைய ஜாதி முறை என்பது ‘படிக்கட்டுகள் இல்லாத மாடிகள்’ என்று அம்பேத்கர் சொல்லுவார். மேலேயும் போக முடியாது கீழேயும் போக முடியாது. அதில் அடைக்கப்பட்டவன் அடைக்கப்பட்டவன்தான். ஒவ்வொரு ஜாதிக்கும் பெருமையுண்டு! காரணம் எனக்குக் கீழே பலபேர் இருக்கிறான் என்று. இந்த அடுக்குமுறை என்பது தான் ஜாதியினுடைய கொடுமையான பண்பு.

அடுத்தது ‘தீண்டாமை’. மற்ற நாடுகளிலே மதங்களிலே ஏதோ ஒன்றிலே பிரிவுகள் இருக்கலாம் ஆனால், தீண்டாமை கிடையாது. இங்கே இருக்கிற அனைவரும் தீண்டத் தகாதவர்கள் என்று சொல்வது வெட்கமானது தான் ஆனால் அது உண்மையானதும் தான்.  இங்கிருக்கிற யாருமே கோயிலின் கருவறையில் கால் வைக்க முடியாது. நன்கொடை கொடுக்க முடியும். கோயிலின் குடமுழுக்கு விழா நடக்கிறபோது, அந்த கலசத்திலே புனித  நீரை ஊற்றுகிற உரிமை ஒரு ஜாதியினருக்கு மட்டுமே உண்டு. இந்து மதத்திற்கு இருக்கிற மடங்களிலே ஆதீனகர்த்தராவதற்கான உரிமை ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தவருக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு ஜாதிக்கும் இங்கே மடமுண்டு. அந்த ஜாதியில் பிறந்தவர் மட்டும் தான் அந்த மடத்தில் ஆதீனகார்த்தர் ஆக முடியும். மசூதியில் சென்று வழிபடுகின்ற போதுகூட, ‘சலாமலேக்கும்’ என்று கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். நெற்றியைத் தொட்டு வாழ்த்துவார்கள் ஒவ்வொரு மதத்திலும். இங்கே தான் பேர் சொல்லுங்கோ, நட்சத்திரம் சொல்லுங்கோ, கோத்திரம் சொல்லுங்கோ என்று கேட்பார்கள். ஜாதியையும் கேட்பார்கள்.

இந்த இழிவு என்பது, எண்ணூறு ஆண்டுகால இழிவு.

நமக்குள்ள பண்பாடெல்லாம் திணை நிலைப் பண்பாடு. இந்தத் திணை நிலைப் பண்பாடு உலகத்தில் எவருக்கும் இல்லை. அந்த திணை நிலை வாழ்க்கையிலே அய்ந்து திணை! குறிஞ்சியிலே வாழ்ந்தோம் குறிஞ்சியிலே வாழ்ந்த நமக்கு பெயர் குறவர்கள், வேடவர்கள், வேட்டுவர்கள், கானவர்கள் அது தான் பெயர். வேடு என்றால் மறைவு என்று பொருள். கிராமங்களிலே இன்றும் இரவு உணவு சாப்பிட்ட பின் வேடு கட்டியாச்சா என்று கேட்பார்கள். தஞ்சை, திருச்சி மாவட்டத்திலிருப்பவர்களுக்கு அது மிகுதி. கொங்கு மாவட்டதிலிருப்பவர்கள் வண்டுகட்டியாச்சா என்பார்கள். அந்த வேடு என்றால் மறைப்பது. நான் வேட்டி கட்டிருக் கிறேன், உடம்பை வேடு செய்வது, வேட்டி,வேட்டி தான் இப்போது வேஷ்டியாகிருக்கிறது. இப்போ அதுவும் போய்விட்டது ‘தோத்தி’ என்கிறார்கள். அதுபோல் தன்னை மறைத்துக் கொண்டு செய்வதற்கு பெயர் வேட்டை. அவருக்குப் பெயர் வேடுவர். இன்றைக்கு அது ஒரு ஜாதி! இன்றைக்கு அது ஒரு தொழில் பிரிவு. அப்பாவினுடைய ஜாதிதான் மகனுக்கும் உண்டு என்பது பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பின் வந்தது. சட்டத்தினுடைய ஏற்பை, அரசினுடைய ஏற்பைப் பெற்றது கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னால். அதனுடைய கொடுமையான வடிவம் உச்சம் பெற்றது பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னால். பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவது வந்தது கி.பி பதினாறாம் நூற்றாண் டுக்குப் பின்னால். ஒவ்வொன்றுக்குமான வரலாற்றைச் சொல்ல முடியும். அதற்கான ஆதாரங்கள், தரவுகள் குவிந்து கிடக்கின்றன. இருந்தாலும் இது ஒரு அறிமுக மாநாடு பெரும் அறிஞர்கள் வந்திருக்கிறார்கள், அவர்கள் மத்தியிலே ஒரு சிறு செய்தியை சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன்.

அய்ந்து திணையிலே குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்தவர்கள் குறவர்கள். நாம் அனைவரும் குறவர்கள் தான். அப்போது தான் நாம் சாதுவான விலங்கு எது கொடுமையான விலங்கு எது என்று இனம் பிரித்து கண்டோம். சாதுவான விலங்குகளை மட்டும் ஓட்டிக்கொண்டு கீழே வந்தோம். அது தான் காட்டுப்பகுதி ‘முல்லை’. முன்னே நடந்தது வேட்டை வாழ்வு; அடுத்து வந்தது முல்லை அது மேய்ச்சல் வாழ்வு. அங்கே நாம் ஆடு, மாடுகளை பார்த்துக் கொண்டிருந்த தனால் நமக்கு பெயர் கோனார். நாம் அத்தனை பேரும் கோனார் தான். கோன் தான், இடையர் தான். கீழே பார்த்தால் சமவெளி, மேலே பார்த்தால் மலை இரண்டிற்கும் இடையில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்ந்த நமக்கு இடையர்கள் என்று பெயர். ஏராளமான இடையர்பாளையங் களை பார்க்கலாம். இடையர் என்ற சொல்லோடு கூடிய ஊர்களை, இடங்களை இன்றைக்கும் பார்க்கலாம். அதற்கு பின்னால் இருக்கிற வரலாறு இதுதான். அப்படி நாம் ஆடு மாடுகளை மேய்க்கச் சென்ற போது அங்கே நமக்கு அறிமுகமானது தான் விளைச்சல். ஏதாவது ஒன்றை வாயிலே வைத்து உருவி விட்ட பிறகு அது கசப்பாக இருந்தால் தூரம் எறிந்து விடுவோம். இனிப்பாக இருந்தால் மறுபடியும் இன்னொன்றை எடுத்து வைப்போம் உபரியாக இருப்பதை வீசி விட்டுச் சொல்வோம். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு வந்து பார்த்தால் அங்கே வீசியவை கைப்பிடி அளவாக இருக்கும். ஆனால் கிடைப்பதோ மூட்டை மூட்டையாக இருக்கும். ஆகவே வேளாண்மை நமக்கு அறிமுகமாகி விட்டது. காடு இதற்குப் பயன்படாது, மலை இதற்குப் பயன்படாது, ஆகவே சமவெளி தேவை. அதனால் தான் நாம் மருத நிலத்திற்கு வந்தோம். மருத நிலம் தான் வேளாண் வாழ்வு அங்கே தான் நாகரிகமான வாழ்க்கை தொடங்கியது. முல்லை நிலத்திலேயே அரசு வந்துவிட்டது. மருத நிலத்தில் தான் வேலைப் பிரிவினை ஏற்பட்டது. அப்படி வேலைப் பிரிவினை ஏற்படுகின்ற போது தான், ஒவ்வொரு ஜாதிக்கும் சொல்லலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில். இந்த அய்ந்து நிலத்திலே எல்லா நிலங்களும் இயற்கை நிலங்கள். செயற்கையாய், உழைப்பால் உருவான நிலம், உருவான திணை மருதத் திணை, அங்கே நாம் வீட்டைக் கட்டிக் கொண்டோம். மேட்டில் வேளாண்மை செய்தோம், பள்ளத்தில் வேளாண்மை செய்த நமக்கெல்லாம் பெயர் பள்ளர்கள். அத்தனை பேரும் பள்ளர்கள் தான். பள்ளம் வயலாகும். “பள்ளத்தில் பாடுபட்டோர் பள்ளர்கள் எனப்பட்டார் பண்போடு குள்ள மனம் கொண்ட கயவரெல்லாம் கூறுகின்றார் தாழ்வாக பண்டுமுதல் இன்று முதல் பார்”. முக்கூடற் பள்ளு. இலக்கியங்கங்களே பள்ளு தான். பள்ளு என்றால் உழவு. பள்ளர் என்றால் உழவர். இதனால் எல்லாருக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் என்று செய்தியை தெரிவிப்பவருக்குப் பெயர் பறையர். இன்றைக்கு அவர்களது பெயர் ‘மீடியா பர்சன்’ இரண்டு பேரும் ஒன்றுதான் என்று சொன்னால் ஒத்துக்கொள்வார்களா? இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒன்று சொல்லலாம். எந்த ஜாதியும் மேலுமில்லை, எந்த ஜாதியும் கீழுமில்லை.

சங்க காலத்தில் இருந்து எட்டாம் நூற்றாண்டு வரை, எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தீண்டாமை அறிமுகமானது, ஜாதி ஏற்றத்தாழ்வு அறிமுகமானது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அரசினுடைய ஏற்பைப் பெற்றது. பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகு நானூறு ஆண்டுகாலமாகத் தான் பெயருக்குப் பின்னால் ஒரு வால் தொங்குகிறது, ஜாதி வால். அந்த வாலை அறுத்தெடுத்தப் பெருமை தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் உண்டு. நீட் தேர்வு பட்டியலிலே வருகின்ற மாணவர்களின் பட்டியலில் பின்னால் இருப்பதைப் பார்த்தால் தேர்ச்சி பெற்று வரு கின்றவர்கள் யார் என்பதை காட்டிக் கொடுத்து விடும் அந்த வால். மேதா, படேல், ராவ், தேசாய், இப்படித்தானே போட்டிருக்கிறது. நம்முடன் பெயர் மட்டும் தானே இருக்கும். அங்கே பெயருடன் ஜாதி வாலும் இருக்கும். நம்முடைய இலக்கியத்திலே எவருடைய பெயருக்குப் பின்னாலும் ஜாதி வால் கிடையாது. இந்த ஜாதி என்பது தொழிலால் வந்தது. எந்த ஜாதியும் மேலுமில்லை, எந்த ஜாதியும் கீழுமில்லை. எந்த ஜாதியும் இழிவுமில்லை. ஒவ்வொரு ஜாதிக்கும் இருக்கின்ற காரணம் உயர்வான காரணம். இதை நாம் இரண்டாக பிரித்தோம், இந்த அய்ந்து திணைகளிலுமே, மருதத்தில் இருந்தோம், மருதத்திலே இருந்த போது தான் அப்போது நில வழி வணிகம் அது பாலை நிலம். நீர் வழி வணிகம் நெய்தல் நிலத்தில் நடந்தது. கடலுக்குப் பெயர் பரவை. அதிலே இருந்தவர்களுக்குப் பெயர் தான் பரதவர். அவர் தான் மீனவர். இப்படித்தான் நாம் அமைத்துக் கொண்டோம். இவர்களுக்குப் பெயர் ‘நிலைகுடி’. ஓரிடத்திலே தங்காமல் நாடோடி களாக வாழ்பவர்களுக்குப் பெயர் அலைகுடி. அப்படி இருந்தவர்கள் தான் பாணர்கள். பாணர்கள் வேறு, புலவர்கள் வேறு. இருவரும் சேர்ந்து எழுதிய இலக்கியம் தான் சங்க இலக்கியம். இரு தரப்பு பங்குமே அதில் உண்டு. அந்தப் பாணர்கள் இசை வைத்துப் பாடிவர்கள் இசைப்பாணர்கள். யாழ் வைத்துப் பாடியவர்கள் யாழ்ப்பாணர்கள். மண்டை போன்ற ஒரு பானையை பின்பக்கம் வைத்து தோலை முன் பக்கம்  இழுத்து வைத்துப் பாடியவர் மண்டைப் பாணர். இப்படி பாணர்களுக்குள்ளும் பல வகை. அவர்களெல்லாம் “அலைகொடி”. பார்ப்பனர்கள் என்பது அன்றைக்கு எல்லா ஜாதிக்குள்ளும் இருந்தனர்.  சுற்றுவட்டத்திலே ஒரு இடத்திலே அமர வைக்கப்பட்டவர்கள் அவ்வளவு தான். அவர்களை மையப்படுத்தி அனைத்தும் நடந்தது என்பது பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னால். மக்களுக்காக உருவாக்கப்பட்ட கோவில்களில் தங்களுடைய ஆதிக்க மையங்களை உருவாக்கிக் கொண்டார்கள் பார்ப்பனர்கள். தமிழ் அப்புறப்படுத்தப்பட்டு சமஸ்கிருதம், தேவ பாஷை, தெய்வ மொழி என்று மக்களை நம்பவைக்கப்பட்டு அதன்மூலம் இந்த நடைமுறை வந்தது. “தெய்வாதீனம் ஜகத்சர்வம் மந்த்ராதீனம்  துதெய்வதம் தன்மந்தரம் பிராமணாதீனம் தஸ்மத் பிராமணாப் பிரபு ஜெயத்”. உலகம் தெய்வத்துக்குள் அடக்கம். தெய்வம் மந்திரத் துக்குள் அடக்கம். மந்திரம் பார்ப்பனருக்குள் அடக்கம். அதனால் பார்ப்பனரே நம்முடைய தெய்வம் என்றாக்கி விட்டார்கள். இன்றைக்கும் பார்ப்பனரை சாமி என்கின்ற வழக்கம் இருக்கிறது. வீட்டுச் சடங்குகளுக்கு அழைக்கிற வழக்கம் இருக்கிறதென்றால், இடையிலே ஏற்பட்டது எல்லா வகையான அடிமைத்தனங்களுக்கும் தங்களுடைய வல்லான்மைக்கு கொண்டு சென்று விட்டார்கள். அதை இரண்டாகப் பிரித்தால் ஒன்று அரசு அதிகாரம், மற்றொன்று பண்பாட்டு அதிகாரம். அதாவது சமூக அதிகாரம். அந்த அரசு அதிகாரத்தை வழங்கக் கூடியவை படிப்பும், பதவியும். நமக்கு படிப்பு மறுக்கப் பட்டது. பதவி மறுக்கப்பட்டது.

இப்போது நாம் இந்த இரண்டையும் பெற்றுவிட்டோம் இந்த நூறாண்டு காலத்தில் மட்டும். படிப்பு பெற்றுவிட்டோம், அரசு பதவிகளும் ஓரளவுக்குப் பெற்றுவிட்டோம்.  ஆனால், சமூக அதிகாரத்தை நாம் இன்னும் பெறவில்லை. எண்ணூறு ஆண்டுகளாக, மன்னர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமூக அதிகாரம் இன்றைக்கும் ஒரு ஜாதியின் கைக்குள் இருப்பது என்பது மிகவும் இழிவான உண்மை தான். இந்த பார்ப்பனர்கள் என்பதிலே, அறுவகைப்பட்ட பார்ப்பன பாக்கம் என்று வரும் அதிலே வேள்வி செய்கின்ற பார்ப்பனர்கள் வேறு. வேள்வி செய்யாத பார்ப்பனர்களுக்கு பெயர் வேளா பார்ப்பனர். வரலாறு என்பது வியப்பைத் தரும். வரலாறு அதிர்ச்சியைத் தரும். பார்ப்பனர்கள் என்றால் இன்றைக்கு சொல்லுகிற இந்த நிலைமையில் இல்லை. கபிலர் தன்னையே ஒரு அந்தணர் என்று சொல்லிக்கொள்வார். ஆனால் சங்க இலக்கியத்திலே கபிலர் சாப்பிட்டது இறைச்சி உணவு, மாமிச உணவு, புலால் உணவு. அன்றைக்கு வேளா பார்ப்பனர் என்றால், அவர்கள் வேள்வி செய்யாத பார்ப்பனர்கள். வளையல் அறுத்த பார்ப்பனர்கள் என்றெல்லாம் சங்க இலக்கியத்திலே வரும். அதற்கான சான்றுகள் இருக்கின்றன. அதிலே ஒரு பிரிவினர் மட்டும் தான் வேள்வி செய்தவர்கள், எல்லோரையும் போல இணையானவர்களாக கருதப்பட்டவர்களே தவிர, வருண முறை என்பது தமிழ்நாட்டில் இல்லை. அன்றைக்கும்  இல்லை இன்றைக்கும் இல்லை. நமது நாட்டில் வைசிய மரபும் இல்லை, சத்ரிய மரபும் இல்லை. இரண்டே வருணம் தான் பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதோர் சூத்திரர்கள். இந்த இரண்டே வருணம் தான் இங்கே இருந்தது. நால் வர்ண முறை இங்கே இல்லை. அந்த வருண முறை அடுக்கு என்பது அரசின் ஏற்பாக பன்னி ரெண்டாம் நூற்றாண்டுக்குப் பின் தான் வந்தது. அதிலிருந்து நாம் விடுவித்துக்கொண்டுள்ளோம். பழைய வரலாறு தெரிந்தால் விரைவில் இன்னும் நாம் நம்மை விடுவித்துக்கொள்வோம்.

உலக தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை.

எழுத்தாக்கம்: மனோஜ்

நிமிர்வோம் ஜுன் 2019 மாத இதழ்

You may also like...