உழைக்கும் மக்கள் திறன்களைவிட பட்டம் பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல! – பெரியார்

கல்வி குறித்து பெரியாரின் கருத்துகள் ஆழமானவை; ஆய்வுக் குரியவை; ஆசிரியர் மாநாட்டில் அவர் நிகழ்த்திய உரை இது:

என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷக் காலந்தாம் நான் பள்ளியில் படித்திருப் பேன். அப்போதும் என் கையெழுத்தைப் போடக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே, கல்வி முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் உங்களுக்கு சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்கிறேன்.

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப் படுத்தலாம் என்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள்.

எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்கள் இருவரும் எப்படிக் குழந்தைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்துக்கும், தேச நன்மைக்கும், ஒழுக்கத்துக்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்பேர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ, நமது நாட்டில் பிள்ளை பெறும் இயந்திரங்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்புடன் இருக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்; தேசாபிமானத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றில் ஏதாவது உங்களால் கற்றுக் கொடுக்கப்படுகிறதா?

இந்தப் பட்டமெல்லாம் கல்வியாகுமா? இதைப் பெற்றவர்களெல்லாம் படித்தவர்களா வார்களா?

சலவைத் தொழிலாளி,  சிகை அழகு நிபுணர், தச்சுத் தொழிலாளி, கொல்லர், செருப்பு தைக்கும் தொழிலாளி முதலியோர் எப்படித் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக் கிறார்களோ அப்படியே பி.ஏ., எம்.ஏ. என்று படித்தவர்கள் என்போரும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள்.

சலவைத் தொழிலாளிக்கு எப்படிச் சரித்திரப் பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்கும் தொழில் தெரியாது. செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்பு தைக்கத் தெரியாது.

ஆகவே இந்தத் தொழிலாளிகளைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒருவிதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்துக்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர அறிவாகாது. இந்தப் புரிதலோடு நீங்கள் மக்களின் உண்மையான ஆசிரியராக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

-போளூரில், 24-4-1927-ல் நடந்த ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் சொற்பொழிவு, ‘குடிஅரசு’ 1-5-1927

படிப்பே பிரதானம்

மாணவர்களே! நீங்கள் படிப்பை ஒழுங்காகக் கவனித்துப் படியுங்கள்; உங்கள் பெற்றோர் கடன் வாங்கி, எப்படியாவது நீங்கள் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற ஆசையால் செலவழித்து, உங்களைப் படிக்க வைக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நீங்கள் படிப்பைத் தவிர வெளி விஷயங்களில் கலந்துகொள்ளாதீர்கள்.

சாதாரண மாணவர்களைக் கிளர்ச்சிக்கு அல்லது மற்றக் காரியங்களுக்குத் தூண்டுவதே தவறு. அவர்கள் உலக அனுபவம் இல்லாத வர்கள்; எதையும் எளிதில் நம்பிவிடுவார்கள்; உள்ளத்தின் வேகத்தில் எதுவும் செய்துவிடு வார்கள். அவர்களை இந்த முறையில் பழக்கி அவர்களைச் சிலர் கேடு அடையச் செய்யக்கூடாது.

-சென்னையில், 5-12-1952-ம் தேதி சொற்பொழிவு, ‘விடுதலை’ 11-12-1952

இப்படி பெரியார் சிந்தனையிலும் செயலிலும் கடும் உழைப்பைச் செலுத்தியதன் பலனை, இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்று அனைவருக்கும் கல்வி என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதில் தமிழகப் பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன்மூலம் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்துவருகிறார்கள். இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தீண்டாமைக் கொடுமை சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டிருக்கிறது.

நன்றி : ‘தமிழ் இந்து’

நிமிர்வோம் செப் 2018 இதழ்

You may also like...