வளர்ச்சியும் பார்ப்பனியமும்

இந்தியாவில் வறுமை கணிசமாக குறைந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், மக்களிடையே சமத்துவம் உருவாகியிருக்கிறதா? அதாவது, ஏற்றத்தாழ்வுகள் குறைந்திருக்கிறதா என்பதே முக்கிய கேள்வி! ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமூக சமுத்துவம் தான் – பெரியாரின் இலட்சியம். பெரியார் வாழ்நாள் முழுதும் போராடிய வகுப்புவாரி பிரதி நிதித்துவம் என்ற கொள்கையின் அடிநாதமே அனைத்து சமூகப் பிரிவினரையும் சமப்படுத்துவது தான். இந்தியாவின் உயர் அதிகார மட்டத்தில், பார்ப்பனர்களே கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்கள் கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துக் கொண்டு,வெகு மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளிகளை மேலும் மேலும் அதிகப்படுத்தும் திட்டங்களையே உருவாக்குகிறார்கள். இந்தியாவில் “பொருளாதாரசீர்திருத்தம்” என்ற பெயரில், கடந்த 30 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட கொள்கைகள் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்துவிட்டது என்பதை புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

2000ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவின் மொத்த சொத்து – செல்வங்களில் 66 சதவீதம், 10 குடும்பங்களிடமே தங்கியிருந்தது. இப்போது, இது 66-லிருந்து 74 சதவீதமாக அதிகரித்துவிட்டது. இதேபோல் 2000-த்தில் இந்தியாவின் உச்சகட்டப் பணக்காரர்களாக இருக்கும் ஒரு சதவீதத்தினரிடம் இந்தியாவின் சொத்து வளங்களில் 37 சதவீதம் இருந்தது. இது இப்போது 44 சதவீதமாக அதிகரித்துவிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியடைந்த பெரும் பணக்காரர்களுக்கே போய்ச் சேரும்போது, சமமற்ற சமூகம் எப்படி உருவாக முடியும்? 60 மில்லியன் பழங்குடி மக்களில் 40 சதவீதம் பேர் வளர்ச்சித் திட்டங்களுக்காக தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு உள்ளார்கள். விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிப் பிரிவினரிடம் நாட்டின் ‘பொருளாதார வளர்ச்சி’ சென்று அடையவில்லை என்பதை அண்மையில் வெளிவந்துள்ள சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புகளும் உறுதி செய்கின்றன.

கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான அரசின் திட்டங்கள் அரசால் புறக்கணிக்கப்படுகின்றன.இவை மக்களுக்கான வளர்ச்சிக்கு அடிப்படையானவை. இத்திட்டங்களில் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய முன் வராமல், தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விட்டது. கல்வி-மருத்துவ சேவைகளைப் பெற முடியாமல், தனித்துவிடப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட ஜாதி மற்றும் வர்க்கப் பிரிவினர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க முடியாதவர்களாக ஓரம் கட்டப்பட்டுவிட்டனர். ஆக பார்ப்பனியம், பொருளாதாரத்திலும் ஏற்றத் தாழ்வுகளை உறுதிபடுத்தி வருகிறது.

பெரியார் முழக்கம் 16072015 இதழ்

You may also like...