அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையா? கொளத்தூர் ஒன்றிய கழகம் எதிர்ப்பு

அரசு என்பது எந்த விதமான ஜாதி,மதம்,இன அடையாளங்களோடு இருக்கக் கூடாது. அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுளின் படங்களோ அதற்கு வழிபாடோ நடத்தப்படக் கூடாது என்பது அரசாணை. அந்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டி 17.10.2018 காலை கொளத்தூர் ஒன்றிய அலுவலகம், கொளத்தூர் காவல்நிலையம், கண்ணாமூச்சி தொடக்க கூட்டுறவு வங்கி, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என அரசு அலுவலகங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கொளத்தூர் நகரச் செயலாளர் ராமமூர்த்தி, கொளத்தூர் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நேரில் சென்று அதற்கான அரசாணையை கொடுத்தனர். அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை மீறி 17.10.2018 மாலை கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியரான காவலாண்டியூர் சசிகுமார் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தோழர்கள் சென்று கேட்டதற்கு அது அவரவர் விருப்பம் , யார் வேண்டுமானாலும் எந்த படத்தை வேண்டுமானாலும் வைத்து வழிபடலாம்  என்று ஆணையாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இதைக் கண்டித்து அக்டோபர் 29ஆம் தேதி இதற்கு எதிர்வினையாற்றும் போராட்டம் நடத்த கழகத் தோழர்கள் தயாராகி வருகிறார்கள்.

பெரியார் முழக்கம் 25102018 இதழ்

You may also like...