ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

தோழர் கொளத்தூர் மணி                                31.8.2018

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

ஐநா பொதுச் செயலருக்கும்,

ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும். 

ஆகஸ்ட் 30 ஆம் நாளில் வலுக்கட்டாயக் காணாமலடிக்கப்பட்டவர்களை உலகம் நினைவுகூர்வது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை ஐ.நா.வின் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவில் எழுப்புமாறு வலுக்கட்டாயக் காணாமலடித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில்(ICPPED) கைசாத்திட்டுள்ள நாடுகளை வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப்  போரின் போதும் அதற்குப் முன்பும் பின்பும் வலுகட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப்போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா. கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப்பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின் கடைசி நாட்களில் சிறிலங்கா அரசப்படைகளிடம் சரணடைந்த குடும்பங்களோடு இருந்தவர்கள். தங்களுடைய பாதுகாப்புக்கு உறுதியளித்ததை நம்பி போரின் முடிவில் தாமாக முன்வந்து சிறிலங்கா அரசப் படைகளின் கைகளில் தம்மை ஒப்படைத்துக் கொண்ட எண்ணற்ற குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட  தமிழர்கள் இதில் அடங்குவர்.

சிறிலங்காவில் உள்ள தமிழ்த்தேசமும் அதன் புலம்பெயர்மக்களும் இந்தியாவில் உள்ள தமிழ் மக்களாகிய நாங்களும் கிட்டத்தட்ட சிங்களர்களை மட்டுமே கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடைசியாக கண்ட எண்ணற்ற தமிழர்கள் வலுகட்டாயமாக காணாமலாக்கப்பட்டதன் நீண்டகால விளைவுகளால் தொடர்ந்து துன்பத்தில்இருக்கிறோம். தங்களுடைய விருப்பத்திற்கு உரியவர்களுக்கு என்னநேர்ந்தது என்பதை அறிவதிலுள்ள நிலையற்றத் தன்மையாலும் அவர்களுக்கு முறையாக இறுதி அஞ்சலி செலுத்த முடியாமலும் அவர்களோடு தொடர்புடைய சட்ட சிக்கல்களைத் தீர்க்க முடியாமலும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் தொடர்ந்து துன்பத்தில் உள்ளனர்.

காணாமலடித்தலுக்கு எதிரான ஒப்பந்தத்தை சிறிலங்கா 2016 மே மாதம் ஏற்புறுதி செய்த போது, சிறிலங்காவில் வலுக்கட்டாயக் காணாமலடித்தலைச் செய்தவர்கள், ஆணையிட்டவர்கள், செய்யச் சொன்னவர்கள், அல்லது அதில் உடந்தையாக இருந்தவர்கள் மீது குற்றப் பொறுப்பு சுமத்த தனக்குள்ள சட்டக் கடமையை ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்த நாள் வரை அப்படிச் செய்ய சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் எவ்வித முயற்சியும் இல்லை. காணாமலடித்தலுக்கு எதிரான ஒப்பந்தத்தின் 32ஆம் உறுப்பின் படி, ஒப்பந்த மீறல்கள் என்று குற்றஞ்சாட்டி பிற அரசுத் தரப்புகளிடமிருந்து கடிதம் பெற வலுக்கட்டாயக் காணாமலடித்தளுக்கு எதிரான குழுவுக்குள்ள தகுதியை சிறிலங்கா அறிந்தேற்றது. நாளது வரை எந்த அரசுத் தரப்பும் சிறிலங்காவின் ஒப்பந்த மீறலைக் கருதிப் பார்க்கும்படி இக்குழுவை வெளிப்படையாகக் கேட்கவில்லை.

இலங்கை அரசாங்கம் சர்வதேச விதிகளின் கீழான கடமைகளையும் சரி தானே முன்வந்து இணைஉபயம்(co-sponsor) செய்த, முற்றாக நடைமுறைப்படுத்துவதாக ஐ.நா. விடம் உறுதியளித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 30/1 மற்றும் 34/1 தீர்மான்ங்களின் கீழான கடமைகளையும் சரி நிறைவேற்றத் தவறிவிட்டது. இவைமட்டுமின்றி, சிறிலங்கா அரசாங்கம் ஏராளமான உறுதிமொழிகளை அளித்திருந்தும் அரசப்படையாள் ஒருவரைக்கூட நீதியின் முன்பு நிறுத்தவில்லை.

காணாமலாக்கபட்டோரின் தாய்மார்கள் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்த போது, 2009 மே மாதத்தில் போரின் முடிவில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு அடுத்தநாள் நடக்கவிருக்கும் பாதுகாப்பு அவைக்கூட்டத்தில் ஆணையிடுவதாக அவர்களுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியுள்ளார்.

மேலும், தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே தைப்பொங்கலை முன்னிட்டு வடக்கில் உள்ள யாழ்நகரத்திற்கு சென்றிருந்தபோது, 2016 சனவரி 15 இல்நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், “ போரின்முடிவில் 2009 மேமாதத்தில் சிறிலங்கா அரசப்படைகளிடம் சரணடைந்த அனைவரும் உயிரோடில்லை” என்று சொன்னார். இந்நாள்வரை, தன்னுடைய வாய்மொழியை ஒட்டி எழும்,  சரணடைந்தவர்கள் கொல்லப்படுவதற்கு யார் பொறுப்பு?, அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள், அவர்களுடைய இறந்த உடல்கள் எங்கே? உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் தர மறுக்கிறார்.

ஆயுதமோதலின்போதும்அதற்கு முன்பும் பின்பும் சிறிலங்கா அரசாங்கம் வலுக்கட்டாயக் காணாமலடித்தலை தமிழ்த்தேசத்திற்கு எதிரான இனப்படுகொலையின் திட்டமிடப்பட்ட கருவியாக கையாண்டுள்ளது.

நன்கு அறியப்பட்ட வெள்ளைவேன் கடத்தல்கள் தமிழர்களுக்கும் மாற்றுகருத்துக் கொண்ட சில சிங்களர்களுக்கும்கூட எதிரான அடக்குமுறைக் கருவியாக மாறிப்போனது. காணாமலடிக்கப்பட்ட தமிழ்மக்களோடு சேர்த்து ஆயுதமோதலின் முடிவில் சரணடைந்த பெரும்பாலான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களின் நிலையும் தெரியாமலே இருக்கிறது. 2015 நவம்பர் மாதம் சிறிலங்காவுக்குச் சென்று பார்வையிட்ட பின் வலுக்கட்டாயக் காணாமற்போதல் பற்றிய ஐநா செயற்குழு கூறியது போல், நடப்பில் செயற்குழுவின் பார்வையிலுள்ள காணாமற்போதல் நேர்வுகளின் தொகையில் சிறிலங்கா இரண்டாமிடம் வகிக்கிறது.  .

சிறிலங்கா 2016 அக்டோபரிலும் 2017 மார்ச்சிலும் மனித உரிமை மன்றத்தில் “காணாமல் போனோர் அலுவலகம் அமைத்துள்ளோம், இது ஒரு சாதனை” என்று கூறியது ஏமாற்றுப் பேச்சே. தமிழ்ச் சமுதாயத்திடமிருந்து உருப்படியான உள்ளீடு ஏதுமில்லாமலும் மனித உரிமை மன்றத்தின் 30/1 தீர்மானம் (A/HRC/30/L.29) கோரியவாறு பன்னாட்டு வல்லுநர்களின் பங்கேற்பு ஏதுமில்லாமலும் காணாமல் போனோர் அலுவலகம் அமைத்திருப்பது சர்வதேசச் சமுதாயத்தை ஏமாற்ற சிறிலங்கா மேற்கொண்டுள்ள வஞ்சக முயற்சியே ஆகும்.

காணாமற்போனோர் அலுவலகத்தில் ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு வல்லுநர்களை சேர்க்க வேண்டும் என்ற தொடர்ச்சியான வேண்டுகோள் இலங்கை அரசால் மறுக்கப்பட்டன. குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்தது போல் முன்னாள் மூத்த பாதுகாப்பு படை அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு)ன் மோகந்தி பிரிசை காணாமற்போனோர் அலுலகத்தின் ஆணையர்களில் ஒருவராக அண்மையில் ஆக்கியுள்ளது சிறிலாங்கா அரசாங்கம்.

காணாமல் போனவர்களின் பாதிப்புற்ற குடும்பத்தினர் உள்நாட்டுச் சட்டத்தின் படி உண்மையான ஈடுபெறும் வாய்ப்பை மறுப்பது மட்டுமல்லாமல், வலுக்கட்டாயக் காணாமலடித்தலுக்கு எதிரான ஒப்பந்தத்தின் 31ஆம் உறுப்பில் கண்டவாறு இந்தக் குடும்பத்தினரிடமிருந்து நேராக முறையீடுகள் பெற வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய ஐநா குழுவுக்குள்ள தகுதியையும் சிறிலங்கா அரசாங்கம் அறிந்தேற்கவில்லை.

உள்நாட்டு வழிமுறையோ பன்னாட்டு வழிமுறையோ எதற்கும் இடமில்லை என்ற நிலையில், காணாமல் போனவர்களின் தாய்மார்களும் மனைவிமார்களும் கிளிநொச்சியிலும் பிற மையங்களிலும்  மாதக்கணக்கில்  தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். எங்கள் குடும்பத்தினரை விடுதலை செய்க! அல்லது அவர்களுக்கு என்ன நேரிட்டது என்ற உண்மையை அறிய நம்பகமான புலனாய்வு செய்க! என்பதே அவர்கள் கோரிக்கை. அமைதியான முறையில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் அரசின் வன்முறைக்கு இலக்காகியுள்ளன.

இந்தப் பெண்களும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அனைவரும் ஆண்டுக் கணக்கில் செய்வதறியாமல் திகைத்துப் போய் வாழ்ந்து வருகின்றனர். வாரிசுரிமையாகச் சொத்தில் பங்கு பெற முடியவில்லை. உரிமைப் பட்டயம் வைத்துக் கொள்ளவோ உதவி கோரி விண்ணப்பிக்கவோ முடியவில்லை. காணாமல் போனவர்களுக்குப் பொறுப்புக் கூறவோ, அர்ஜெந்தினா, போஸ்னியா, எர்சகோபினா, சிலே, பெரு போன்ற நாடுகளின் அரசுகள் வழங்கியிருப்பது போல் “வலுக்கட்டாயக் காணாமலடித்தலால் இல்லாது போனவர்” என்பது போன்ற பொருத்தமான சட்டத் தகுநிலை வழங்கவோ அரசாங்கம் தவறி விட்டதே காரணம்.

மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு, காணாமல் போனவர்களின் பாதிப்புற்ற குடும்பத்தினருடன் தோழமை கொண்டு கீழே ஒப்பமிட்டுள்ள நாங்கள்:

  • “வலுக்கட்டாயக் காணாமலடித்தலால்இல்லாமற்போதல்” என்ற சிறப்புச் சட்டத் தகுநிலை ஒன்றைத் தோற்றுவிக்கும் படி சர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
  • அரசாங்கத்தினால் அல்லது அதன் முகவர்களால் இப்போது சிறை வைக்கப்பட்டுள்ள அனைவருமடங்கிய பட்டியலை வெளியிடும் படி சர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
  • சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிப் படையினரின் பட்டியலை வெளியிடும் படிசர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
  • சிறைக் காவல் மையங்கள் அனைத்தையும் பன்னாட்டு நோக்கர்களும் சர்வதேச சமுதாய உறுப்பினர்களும் தடையின்றிப் பார்வையிட சிறிலங்கா அனுமதிக்கக் கோருகிறோம்.
  • வலுக்கட்டாயக் காணாமலடித்தல் தொடர்பான குழுவிடம் பாதிப்புற்றவர்கள் நேராக முறையீடுகள் தாக்கல் செய்ய அனுமதிக்கும் வகையில் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் ஒப்பந்தத்தின் 31ஆம் உறுப்பையொட்டிப் பிரகடனம் செய்யும் படிசர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
  • காணாமல் போனவர்கள் அலுவலகத்தில் பன்னாட்டு வல்லுநர்களைச் சேர்த்துக் கொள்ளும்படிசர்வதேச சமுதாயம் சிறிலங்காவுக்கு அழுத்தம் தருமாறு வலியுறுத்துகிறோம்.
  • அரசாங்கத்தால் சிறை வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலார் “அநேகமாக இறந்து விட்டார்கள்” என்று திரு ரணில் விக்கிரமசிங்கா 2016 சனவரி மாதம் கூறியதைப் புலனாய்வு செய்யும்படி சர்வதேச சமுதாயம் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவைக் கேட்குமாறு வலியுறுத்துகிறோம்.
  • வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டுள்ள அரசுகள் உறுப்பு 32இல் வழிவகை செய்யப்பட்டுள்ள கடப்பாடுகளை சிறிலங்கா நிறைவேற்றத் தவறியிருப்பதைக் கருதிப் பார்க்கும்படி சர்வதேச சமுதாயம் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவைக் கேட்குமாறு வலியுறுத்துகிறோம்.

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் இனஅழிப்பின் கொடுவலிகளைக் கண்டுள்ள தமிழினம் நீதிக்காக மிக நீண்ட காலம் காத்துள்ளது என்பதை மீண்டும் அழுத்தமாக எடுத்துரைக்க விழைகிறோம்.  பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வது  ஐ.நா. மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.

இப்படிக்கு,

 கொளத்தூர் தா.செ. மணி

 ஒருங்கிணைப்பாளர்,

 ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

                       

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You may also like...