புராணங்களிலும் வேதங்களிலும் அறிவியல் இருந்தது என்ற மோசடிப் பிரச்சாரத்தை எதிர்க்காமல் அறிவியலாளர்கள் மவுனம் சாதிக்கலாமா? புராணப் புரட்டுகளுக்கு அறிவியல் முலாம்

“கோட்சேயும் சாவர்க்கரும் இந்தியா வில் ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள்!” “ஐன்ஸ்டீனின் சார்பு நிலை கோட்பாட்டை விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளன என்று ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியிருக்கிறார்.” “ஆரியர்களின் தாயகமான வட துருவம் பீகாருக்கும் ஒரிசாவுக்கும் நடுவில் இருந்தது.” “பசுவை வழிபடுவதும், கோமாதா வழிபாடும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஆகப்பெரிய பங்களிப்பை செய்யும் சக்தியுடையது” – இது போன்ற பிதற்றல்களை, பாரத வரலாறு என்றும், உலக வரலாறு என்றும் நமது பள்ளி மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மதவாதத் திட்டம். இவற்றின் அடிப்படையில் பள்ளி வரலாற்றுப் பாடங்களைத் திருத்துவதற்கு முன் தயாரிப்பாக, மோடியின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, 14 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார். இந்த கமிட்டியின் தலைவரான கே.என். தீட்சித் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.

ராய்ட்டர்ஸ் அம்பலபடுத்தியது

2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கமிட்டி பற்றிய விபரங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ரூபம் ஜெயின், டாம் லசெட்டர் ஆகிய இரு பத்திரிகையாளர் கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். “இந்துக்கள் தான் இந்த நாட்டின் பூர்வகுடிகள், வேதங் களிலும் புராணங்களிலும் சொல்லப்பட் டிருப்பவை கதை அல்ல, வரலாற்று உண்மைகள்” என்று நிரூபிப்பதற்குப் பொருத்தமான வகையில் புதைபொருள் ஆதாரங்களையும், மரபணு ஆய்வுகளையும் தொகுத்து முன் வைப்பதுதான் இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலை. “கமிட்டியின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்து நிறைவேற்றிய பிறகு, அதன் பரிந்துரைகளைப் பள்ளிக் கல்வியிலும், ஆராய்ச்சித் துறைகளிலும் சேர்க்குமாறு மனித வளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப் போம்” என்று கூறுகிறார் கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா. “கலாச்சார அமைச்சகம் பரிந்துரைக்கும் எல்லா விஷயங்களையும் அக்கறையோடு அமல்படுத்துவோம்” என்கிறார் மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர். ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர் பாளர் மன்மோகன் வைத்யாவை ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது, “இந்திய வரலாற்றின் உண்மையான நிறம் காவி. கலாச்சார மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். வரலாற்று ஆய்வுப் பிரிவின் தலைவர் பால்முகுந்த் பாண்டே, “இந்து நூல்கள் கற்பனை அல்ல, உண்மை என்று நிரூபித்து, இந்தியாவின் கடந்த காலப் பெருமையை நிலைநாட்ட வேண்டிய நேரம் இது” என்று கூறியிருக்கிறார்.

இந்து மதம் தான் இந்தியா

முஸ்லீம்களும், கிருத்துவர்களும் இந்து கலாச்சாரத்தை ஏற்று, இந்துக்களின் தயவில் வாழ வேண்டும் என்ற பாசிச அரசியலைத் திணிப்பதற்கு இந்து மதம்தான் இந்தியாவின் மதம் என்று நிரூபிப்பது அடிப்படை தேவையாக இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருப்பதையும், பழங்குடி மக்கள், உழைக்கும் மக்களின் வழிபாட்டு முறைகளை இந்துமதம் உள்வாங்கிச் செரிக்க முயற்சித்திருக் கிறது என்பதையும் மறைப்பது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.எனவேதான், உயர் ஜாதி இந்துக்களின் வேத பாராயணம் போல, ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் எது அன்றாடம் போதிக்கப்படுகிறதோ, அதையெல்லாம் மாணவர்கள் அனைவர் மீதும் திணிப்பதன் மூலம் எல்லாப் பள்ளிகளையும் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள். “இந்துக்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் மட்டு மல்ல, உலகம் முழுவதற்கும் அறிவையும், ஞானத்தையும் கொண்டு சென்றவர்கள். பழங்கால இந்தியாவிலிருந்து அறிவு முதலில் எகிப்துக்குப் போய், அங்கிருந்து ரோமாபுரிக் கும், ஐரோப்பாவுக்கும் பரவி, இறுதியாக அமெரிக்காவைச் சென்றடைந்தது” என்று சாதிக்கிறார்கள். கிருஷ்ணனும், அர்ஜூனனும் அஸ்வதாரி (நீராவிக் கப்பல்) ஒன்றின் மீது ஏறிப் பாதாள உலகத்துக்குச் (அமெரிக்கா) சென்றனர். உலொபி என்ற பாதாள மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டான், அர்ஜூனன் என்று மகாபாரதத்தில் இருப்பதால், அந்தக் காலத்து மக்கள் வெளிநாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் போய் வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.அனுமார் என்பவர் இராமாயணத்தில் சஞ்சீவி மலையை இலங்கைக்குத் தூக்கிச் சென்ற பலசாலி என்று நம்பும் வைணவர்கள் பலர் இருக்கிறார்கள். அனுமான் ஒரு சிரஞ்சீவி, அவனுக்கு இறப்பே இல்லை. எங்கெல்லாம் இராமனின் கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் வந்து உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பான் என்றும் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை அவர்களது தனிப்பட்ட விவகாரம். யாருக்கும் பிரச்சனை இல்லை, ஆனால், பாபர் மசூதிக்குள் 1949இல் திருட்டுத் தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்தரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி (கே.எம்.பாண்டே), நீதிமன்ற அறையில் மேற்கூரையில் குரங்கு வடிவில் அனுமார் அமர்ந்திருந்தார் என்று நம்பும்போது, நீதிபதியின் அந்த நம்பிக்கை அல்லவா தீர்ப்பைத் தீர்மானிக்கிறது.“பிள்ளையாருக்கு யானைத் தலை பொருத்தப்பட்டிருப்பது நமது முன் னோர்கள் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதைக் காட்டு கிறது” என்று இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, விஞ்ஞானிகளையும் அவ்வாறே நம்பச் சொல்வதுதான் சிக்கல்.

வரலாற்றின் வரலாறு

வரலாறு என்பது பைபிள், குரான் அல்லது வேத புராணங்களில் சொல்லப்படும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படு வதல்ல. அறிவியல் அணுகுமுறையின் மூலம் பல்வேறு வரலாற்றுத் தரவுகளைச் சரிபார்த்து, அவற்றுக்கிடையேயான இணைப்புகளைப் பொருத்திப் பார்த்து, படிப்படியாக ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கி உருவாக்கப்பட்டதுதான் இன்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் அறிவியல் பூர்வமான வரலாறு. வரலாற்று ஆய்வு என்பது இலக்கிய ஆதாரங்கள் (வேதங்கள், சங்க இலக்கியங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள்), கல்வெட்டுகள், புதைபொருள் ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி நிறுவப்படுவதாகும். சமீப காலங்களில் மரபணு ஆய்வு மூலமாகவும் மனித குலத்தின் வரலாற்று நகர்வுகள் பற்றிய முடிவுகள் முன் வைக்கப்படுகின்றன.இப்போதைய நமது வரலாற்று அறிவு என்பது கடந்த 300 ஆண்டு களாக உலகெங்கிலும் உள்ள வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளை உறுதி செய்தும், மறுத்தும், மற்ற ஆய்வாளர்களுடனான வாத பிரதிவாதங்கள், விமர்சனங்கள், கருத்து பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் மேம் படுத்தப்பட்டும் உருவாகியிருக்கிறது.

சங் பரிவாரத்தின் திணிப்பு

சங் பரிவாரம் கூறும் வரலாற்றின்படி இராமாயணம் நடந்த திரேதா யுகத்தைத் தொடர்ந்து 8.4 இலட்சம் ஆண்டுகள் துவாபர யுகம் நீடித்தது (மகாபாரதம்) பாண்டவர்களின் ஆட்சிக்குப் பிறகு தொடங்கிய கலியுகம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை திரட்டப்பட்ட புதைபொருள் ஆய்வுகளோ, மனிதன் காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரீக நிலைக்கு மாறியதே சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்று கூறுகிறது.இத்தகைய சூழலில், பாரதத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித நாகரீகம் இருந்தது என்று சொன்னால், உலகம் இந்தப் ஆர் எஸ் எஸ் கும்பலைப் பார்த்து சிரிக்கும். எனவேதான், மேலே சொன்ன கமிட்டியின் ஆய்வை 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து நாகரீகத்தைப் பற்றிய ஆய்வு என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார்கள்.

அவர்களின் திட்டம்

வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். வகுத்த புதிய திட்டம் இல்லை. 1977ல் ஜனதா ஆட்சியில் பங்கேற்ற போதே இந்துத்துவாதிகள் தங்கள் நம்பிக்கைக் குப் புறம்பான வரலாற்று நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். வாஜ்பாய் பிரதமராக இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முரளி மனோகர் ஜோஷி மனித வளத்துறை அமைச்சராக இருந்தபோது பாடப் புத்தகங்களில் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி தொடங்கப்பட்டது. அதில் சிந்து சமவெளி நாகரீகம் என்பதை சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்று மாற்றியிருந்தனர். சிந்து என்ற உண்மையான ஆற்றை, சரஸ்வதி என்ற அவர்களது கற்பனையோடு இணைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்தனர்.தீனாநாத் பத்ரா எழுதிய புத்தகங்கள் குஜராத்திலும் அரியானாவிலும் பாடப் புத்தகங்களாகப் பயன்படுத்தப்படு கின்றன. இராஜஸ்தானில் வரலாற்றுப் புத்தகங்கள் ஏற்கனவே திருத்தி எழுதப்பட்டு விட்டன. 19ஆம் நூற்றாண்டில் சனாதன பார்ப்பன மதத்தை இந்து மதம் என்ற புதிய மொந்தைக்குள் அடைத்தவர்களுள் முக்கிய மான ஒருவரான தயானந்த சரஸ்வதி, கிருத்துவ பாதிரியார்களை எதிர்த்து வாதிடுவதற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தனது தேவைக் கேற்ப பயன்படுத்திக் கொண்டார். பைபிள் சொல்லும் பரம்பரை காலக்கோடு ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் வரை மட்டுமே நீளும் போது, இந்து புராணங்களில் சொல்லப்படும் கல்பகோடி யுகங்கள், பூமி 400-500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று நிலவியல் (ஜியாலஜி) சொல்வதுடன் ஒத்துப் போவதை அவர் பயன்படுத்திக் கொண்டார். இப்படி இந்துத்துவவாதிகள் அறிவியலைத் தமது நோக்கத்துக்கு ஒருபுறம் பயன்படுத்திக் கொள்வார்கள். இன்னொருபுறம், வேதங்களின் காலம் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று மொழியியல் அறிஞர்கள் சொன்னால், அதை ஐரோப்பிய கிருத்துவ சதி என்று கூக்குரல் எழுப்புவார்கள்.

பொய்யும் புளுகும்

புஷ்பக விமானம் பண்டைய இந்தியாவில் விமான போக்குவரத்து இருந்ததற்கான ஆதாரம், பிரும்மாஸ்திரம்தான் அணுகுண்டு என எல்லாமே வேதங்களிலும், இதிகாசங்களிலும் இருந்ததாக அவிழ்த்துவிடும் வேலையை மிகவும் திறம்படச் செய்தவர் செத்துப்போன மூத்த சங்கராச்சாரி, சந்திரசேகரேந்திர சரஸ்வதி. குவாண்டம் இயற்பியலின் நிச்சயமின்மை கோட்பாட்டை முன்வைத்த ஜெர்மனியைச் சேர்ந்த ஹைசன்பர்க், அதை வேதங்களில் இருந்துதான் கற்றுக் கொண்டார் என்றார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஹைசன்பர்க் வேதங்களைப் படித்ததே இல்லை என்று சுட்டிக் காட்டியதும், அவர் தாகூரிடம் ஒரு முறை பேசியிருக்கிறார், அதிலிருந்து வேதங்களைப் பற்றித் தெரிந்து கொண்டார் என்று சாதித்தனர். ஆனால், ஹைசன்பர்க் தாகூரைச் சந்திப்பதற்கு

2 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிச்சயமின்மை கோட்பாட்டை உருவாக்கி வெளியிட்டிருந்தார். இப்போது ஐன்ஸ்டினின் சார்பியல் கோட் பாட்டை விஞ்சுகின்ற அறிவு வேதங்களில் இருக்கிறது என்று ஹாக்கிங் கூறியதாக அவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன். ஹாக்கிங் இவ்வாறெல்லாம் சொன்ன தில்லை என்று இதற்கு மறுப்பு தெரிவித்திருக் கின்றனர் ஹாக்கிங் அறக்கட்டளையினர். அறிவியலாளர்கள் மாநாட்டில் ஹர்ஷ் வர்த்தன் இப்படி பேசியிருப்பது குறித்து நோபல் பரிசு பெற்ற வேதியியல் ஆய்வாளரும் இலண்டன் ராயல் சொசைட்டி ஆப் சயின்ஸின் தலைவருமான வெங்கி. ராமகிருஷ்ணனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.” நான் ஏதாவது கருத்து சொன்னால், உடனே என்னை மேற்கத்திய சிந்தனைக்கு அடிமையாகி விட்டவன் என்பார்கள். அறிவின் மிகப்பெரிய எதிரி, அறியாமையல்ல. தான் எல்லாம் அறிந்தவன் என்ற மயக்கம்தான் என்பார் ஹாக்கிங். அதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன். என்னிடம் கருத்து கேட்பது இருக்கட்டும். இந்தியாவில் ஒன்றுக்கு மூன்று அறிவியல் கழகங்கள் இருக்கின்றனவே, அமைச்சரின் பேச்சு பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களைக் கேளுங்கள்” என்றாராம் ராமகிருஷ்ணன். இதுதான் நம் கவனத்துக்குரியது. பாடத்திட்டத்தை இந்துத்துவ மயமாக்குவது பற்றி ராய்ட்டர் எழுதுகிறது. ஹர்ஷ்வர்த்தனின் அறிவியல் சிதைப்பு பற்றி ராமகிருஷ்ணன் கருத்து சொல் கிறார். ஆனால், இங்கிருக்கும் அறிவியலாளர்கள் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்? அவர்களுடைய மவுனம் பாசிசத்துக்கு வாசிக்கப்படும் வரவேற்புரையா?

(இணையத்திலிருந்து)

நிமிர்வோம் மே 2018 இதழ்

You may also like...