போராடும் விவசாயிகளுக்காக கழகம் போராட்டம்

13-4-17 அன்று மாலை 4-00  மணியாவில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக…..கடந்த 31 நாட்களாக டெல்லி – ஜந்தரில் போராடி கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மோடி அரசைக் கண்டித்து பா.ஜான்மண்டேலா  தலைமையில் சென்னை “கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்” நடைபெற்றது.

விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்க கோரி மத்திய மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 25பேர் கைது செய்து சைதாப்பேட்டை கூ.மு. திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்

புதுவை கழகம் பாரூக் குடும்ப நிதியாக 2 இலட்சம் வழங்கியது

8-4-2017 அன்று புதுவை, அரியாங்குப்பம், கரும்புலி மில்லர் அரங்கத்தில், புதுவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஃபாரூக் குடும்பநிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். தோழர்கள் தந்தைபிரியன், வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் முன்னரே நிதி அளித்தவர்கள் அல்லாமல் ஏராளமான பேர் நேரில் நிதி வழங்கினர். நிதியினைப் பெற்றுக் கொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஃபாரூக் படுகொலை, இசுலாமிய அமைப்புகளின் தொடர்வினை, வழக்கின் தன்மை போன்ற வற்றை விளக்கிப் பேசினார்.

அந்நிகழ்வில் ரூ.1,84,100/- வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் ரூ.15,900/- அனுப்பி மொத்த நிதியை ரூ.2,00,000/-மாக முழுமைப் படுத்தினர்.

ஆந்திர காவல்துறையால் கொலையான 20 அப்பாவித் தமிழர் நினைவு நாள்

செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரால், ஆந்திர காவல், வனத்துறை அதிகாரிகளால் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு, ஆந்திர வனப்பகுதிக்குள் கொண்டு சென்று 20 அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் 6-4-2015 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவாய் 7-4-2017 அன்று மாலை, தருமபுரி வள்ளலார் திடலில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு அமைப்பு, கட்சித் தலைவர்களை ஒருங் கிணைத்து பொது உரையாடல் நடைபெற்றது.

கலை நிகழ்வுகளுடன் தொடங்கிய அந்நிகழ்வில் மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர்  வழக்கறிஞர் ஹென்றிதிபேன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆணைகள், திருப்பதி, ஆந்திர உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்து கொண்டுள்ள வழக்கின் நிலவரம், தேவைப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர்மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லிபாபு, இயக்குநர் களஞ்சியம், தமிழர் முன்னேற்றப் படைதலைவர் கி.வீரலட்சுமி, வழக்கறிஞர்அசோகன், து.இசக்கிமுத்து, வழக்கறிஞர் இரவி ஆகியோர் உரையாற்றினர்.

போலி மோதலில் பலியான 20 தமிழர்களின் குடும்பத்தினரும் எராளமான பொதுமக்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 27042017 இதழ்

You may also like...