தூக்குத் தண்டனையை நீக்குக

இந்தியாவில் தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பச்சன்சிங் வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு, பெரும்பான்மை அடிப்படையில் தூக்குத் தண்டனைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
30ஆம் தேதி தூக்கிலிடுவதற்கு பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாக்கூப் மேமனுக்கு தேதி குறித்த நிலையில் தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ், பதவி ஓய்வுக்குப் பிறகு தூக்குத் தண்டனைக்கு எதிராக கருத்துகளை வலியுறுத்தி வருகிறார். தற்போது யாக்கூப் மேமன் பிரச்சினையில் தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு நீதிபதி தூக்குத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் என்று கருதுவதால் மட்டுமே தூக்குத் தண்டனை விதித்திடக் கூடாது என்று கூறியுள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, சமூகப்பார்வையை மய்யமாகக் கருதி செயல்பட வேண்டும். சட்டத்தின் நிர்பந்தம், சூழ்நிலையை மட்டுமே நீதிபதிகள் கருத்தில் கொள்ளக்கூடாது. மக்கள் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர, நீதிபதிகள் தங்களின் முடிவுகளை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது என்றும் நீதிபதி கே.டி. தாமஸ் கூறியுள்ளார்.
யாக்கூப் மேமனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணையில் முனைப்புடன் செயல்பட்ட இந்திய உளவு நிறுவன (‘ரா’) அதிகாரி பி. இராமன் வெளியிட்ட கருத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பி. இராமன் கருத்து, இப்போது இணையதளங்களில் இருக்கிறது. நீதிமன்றமே தாமாக முன் வந்து இவரது கருத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும், கே.டி. தாமஸ் கூறியுள்ளார். பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில், பல முக்கிய தகவல்களை விசாரணையில் யாகூப் மேமன் தெரிவித்துள்ளதோடு, பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கிறது என்பதற்கான பல முக்கிய தகவல் களையும் கூறியிருக்கிறார். விசாரணை நடத்திய உளவுத் துறை இந்த வழக்கிலிருந்து அவரைக் காப்பாற்ற, உறுதியளித்திருக்கக்கூடும். இந்த நிலையில் தானாக முன்வந்து சரணடைய வந்த ஒருவரை, கையில் சிக்கியவர் என்பதால், தூக்கிலிடக்கூடாது என்று பிரபல வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.டி. எஸ். துள்சி கூறியுள்ளார்.

பெரியார் முழக்கம் 30072015 இதழ்

You may also like...

Leave a Reply