சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம்! கழகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்டிருக்காத போது, சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஏற்க முடியாது. எனவே ஆட்சி மொழிப் பட்டியலி லிருந்து அதை நீக்கக் கோரியும், மத்திய அரசு அய்.அய்.டி., சி.பி.எஸ்.ஈ., பள்ளிகளில் சமஸ்கிருத்தைப் பாடமாக திணிப்பதைக் கண்டித்தும் கல்வி உரிமையை பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி மீண்டும் மாநில உரிமைப் பட்டியலுக்குக் கொண்டு வர வலியுறுத்தியும், கடந்த 8 ஆம் தேதி தமிழகம் முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அது குறித்த செய்திகளின் தொகுப்பு:

 

சென்னையில்

கல்வியில் மத்திய பா.ஜ.க. அரசின் சமஸ்கிருததிணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழிபட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08.07.2016 வெள்ளிக்கிழமை காலை 10  மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியாரியல் சிந்தனையாளர் வாலாசா வளவன் (மா.பெ.பொ.க), கண்ணன் (மக்கள் விடுதலை), தந்தை பெரியார்  திராவிடர் கழகத்தின் சார்பில் கரு அண்ணாமலை, தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், அன்பு தனசேகர், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, வழக்கறிஞர் துரை அருண் உரையாற்றினர்.

 

வேலூரில்

08.07.2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ப.திலிபன், அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), இரா.ப.சிவா (அமைப்பாளர்), பாபு மாசிலாமணி (பாவேந்தர் மன்றம்), செவ்வேள் தா.ஒ.வி.கஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நன்றியுரை நரேன்.

 

மயிலாடுதுறையில்

08.07.2016 அன்று மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை சின்னக்கடை வீதி, நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. நகர அமைப்பாளர் ஜி.ஆர். செந்தில் குமார் தலைமை தாங்கினார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டியக்கம் பேராசிரியர் ஜெயராமன் கண்டன உரையாற்றினார். சபீக் அகமது (ளுனுஞஐ கட்சி), அப்துல் கபூர் (மனித நேய மக்கள் கட்சி), சுப்பு. மகேஷ் (தமிழர் உரிமை இயக்கம்), வழக்குரைஞர் சங்கர் (கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), வேலு. குணவேந்தன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) உள்ளிட்ட தோழர்கள்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

திருச்சியில்

08.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி இராமகிருஷ்ணா திரையரங்க பாலம் அருகில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆரோக்கிய சாமி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.பெ.தி.க., ஆதித்தமிழர் பேரவை, சிந்தனையாளர் கழகம், புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மா.பெ.பொ.கட்சி, பெரியார் பாசறை அமைப்புகளை சார்ந்த தோழர்கள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

 

நாமக்கல்லில்

08.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமை தாங்கினார். அ.முத்துப்பாண்டி (மாவட்ட பொருளாளர்), மு.சாமிநாதன் (மாவட்ட தலைவர்), மா. வைரவேல் (மாவட்ட அமைப்பாளர்) உரையாற்றினர். நன்றியுரை மு சரவணன் நகரச் செயலாளர் ஆ. பிரகாஷ் நகரத் தலைவர், வெங்கட், குப்புசாமி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்

 

திருப்பூரில்

08.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் நீதிராசன் தலைமை தாங்கினார். கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் முகில்ராசு, பல்லடம் நகரத் தலைவர் கோவிந்தராசு, பல்லடம் ஒன்றிய தலைவர் சண்முகம், அகிலன், தனபால், மாதவன், சங்கீதா, முத்து, ராமசாமி, பரிமளராசன் உள்ளிட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

மேட்டுப்பாளையத்தில்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு 09.07.2016 அன்று மாலை 5 மணிக்கு நடந்த கண்டன  ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்டத் தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமை தாங்கினார், சுந்தரமூர்த்தி, நிர்மல்குமார், பன்னீர்செல்வம், சுதாகர்  (இயற்கை நல் வாழ்வு சங்கம்), மூர்த்தி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), நகரத் தலைவர் பாருக் அப்துல் (எஸ்.டி.பி.அய்.), பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய நகர தலைவர் பீர் முகமது, நேருதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கிருஷ்ணன், கணேஷ், இனியவன், அலெக்ஸ், விஷ்ணு பிரசாந்த், தேவபிரசாத், வசந்தகுமார், தேவா உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.  முருகேஷ் நன்றி தெரிவித்தார்.

 

சேலத்தில்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில், சேலம் தலைமை அஞ்சல்  அலுவலகத்தின் முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முழக்கங்களுக்கு இடையிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா.நாவரசன், ம.தி.மு.க. மாநகர செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தராஜ், அருந்ததிய மக்கள் இயக்க நிறுவனர் வழக்குரைஞர் பிரதாபன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பி.சுல்தான், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மாயன், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை தோழர் மணிமாறன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சந்தியூர் பார்த்திபன், த.பெ.தி.க. மாவட்ட செயலாளர் தங்கராசு, மூத்த பெரியார் தொண்டர் ஏற்காடு ஆசிரியர் தேவதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 120 தோழர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பார்வையாளர்கள் ஆர்ப்பாட்ட முழக்கங்களையும், உரைகளையும் ஆர்வமாகக் கேட்டனர். காவல்துறையினரும் பேருந்து வழித் தடத்தை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டு நிகழ்ச்சி சிறக்க உதவினர். ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைவர் சி.கோவிந்தராசு ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் இரா.டேவிட் நன்றி கூறினார்.

தூத்துக்குடியில்

தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட கழகத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமை தாங்கினார். கழகப் பொறுப்பாளர்கள் நாத்திகம் முருகேசனார், சா. மாரிச்சாமி மற்றும் கண்ணன், அம்புரோசு (ஆதித் தமிழர் பேரவை), யூசுப் (தமுமுக), கழகத் தோழர்கள் கோ.அ.குமார்,  மோ. அன்பழகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏன்? என்பதை விளக்கி திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விளக்கவுரை யாற்றினார். “சமஸ்கிருத திணிப்பு என்பது வெறும் மொழி திணிப்பல்ல. அதுஇந்துத்துவ கொள்கை திணிப்பு, பார்ப்பன பண்பாட்டு திணிப்பு. சுமார் 2000 பேர் மட்டுமே பேசும் மொழியை 121கோடி மக்கள் மீது திணிப்பது  எவ்வகையில் நியாயம்” என்று கடுமையாகப் பேசினார். தமிழ், தமிழர் என்று பேசும் தமிழ்  தேசிய அமைப்புகள் சமஸ்கிருததிணிப்பை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? எந்த திராவிடர் இயக்கம் தமிழர்களுக்கு எதிரானது என்று நீங்கள் சொன்னீர்களோ, அந்த திராவிடர் இயக்கங்கள்தான் இப்போது தெருவில் இறங்கி போராடு கின்றன. திராவிடர் இயக்கங்கள் மட்டும்தான் தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும் தொடர்ந்து பாடுபடும் இயக்கம்” என்று கூறி விளக்க வுரையை நிறைவு செய்தார். கழகச் செயலாளர் இரவி சங்கர் நன்றி  கூறினார்.

 

சங்கராபுரம்

9.7.2016 அன்று விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் மாலை 4 மணி யளவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செ.வே. ராஜேஷ் தலைமை வகித்தார்.ம. குப்புசாமி, மு.நாகரஜ், சி. ஆசைத்தம்பி, மா.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ந. வெற்றிவேல், ச.கு. பெரியார் வெங்கட் (வி.வி.மு.), பெரியார் பெருந்தொண்டர் கவிஞர் கலிய செல்லமுத்து, விழுப்புரம் ந.அய்யனார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். வீ. முருகன் நன்றி கூறினார். மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்தும் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். மன்னார்குடியில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மனித நேய ஜனநாயகட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜகபர் சாதிக், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் சேக்தாவூத், தொகுதி தலைவர் முகமது அலி தமிழக மக்கள் புரட்சிக்கழககொள்கை பரப்பு செயலாளர் ஆறுநீலகண்டன், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன்,மாவட்ட பிரதிநிதி மீனாட்சி சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் தொகுதி துணை செயலாளர் ஆதவன், மன்னை ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் முரளி, மாற்றத்திற்கான மக்கள் களம் அமைப்பாளர் சிமா மகேந்திரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் பாரி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தஞ்சை விடுதலைவேந்தன் சிறப்புரையாற்றினார். நாகர்கோயிலில் மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பு அருகிலுள்ள நகராட்சி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வே. சதா தலைமை தாங்கினார். தோழர்கள் தமிழ் மதி, சூசையப்பா, நீதி அரசர், தமிழ் அரசன், மஞ்சுகுமார், ஸ்டெல்லா, விஷ்ணு, ஜான்மதி மற்றும் கழகத் தோழர்கள், ஆதர வாளர்கள், மக்கள் அதிகாரம் அமைப் பினர், சமூகநீதிக்கான சனநாயக பேரவை அமைப்பினர், மதிமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து எதிர்ப்பு முழக்கம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 14072016 இதழ்

You may also like...