7 தமிழர்களையும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளையும் 161ஆவது விதியின் கீழ் விடுதலை செய்ய தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனைத்துக் கட்சி இயக்கங்களைச் சார்ந்த ‘தமிழர் எழுவர் விடுதலை கூட்டியக்கம்’ வேண்டுகோள் வைத்துள்ளது. 7 தமிழர்கள் மட்டுமல்லாது சிறையில் நீண்டகாலம் வாடும் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூட்டியக்கம் வலியுறுத்தியது. அண்மையில் வெளி வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்தப் பிரிவை பயன்படுத்தும் மாநில அரசின் உரிமையை உறுதி செய்துள்ளது என்றும், கூட்டியக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னையில் ஜன.4ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டியக்கம் சார்பில் தோழர்கள் வேல் முருகன், தியாகு செய்தியாளர்களிடம் முன் வைத்த அறிக்கை :
இராசீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பய°, இரவிச்சந்திரன், ஜெயக் குமார் ஆகிய எழுவரின் விடுதலைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டதாக வந்துள்ள செய்திகள் சரியானவை அல்ல.
இந்தியக் குற்ற நடைமுறைச் சட்டத்தின் தண்டனைக் குறைப்பு விதிகள் தொடர்பாக சென்ற 2015 திசம்பர் 2ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய முழு ஆயம் (புல் பெஞ்ச்) வழங்கியுள்ள தீர்ப்பு தான் இவ்வாறு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
சென்ற 2014 பிப்ரவரி 19ஆம் நாள் மேற்கூறிய எழுவரையும் விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு இந்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை எதிர்த்து அன்றைய காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் குற்ற நடைமுறைச் சட்ட விதிகளின் படி மத்திய, மாநில அரசுகளுக்குள்ள அதிகாரம் தொடர்பாக ஒரு கேள்விப் பட்டியல் தயாரித்து, அந்தக் கேள்விகளுக்கு விடை காண ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட முழு ஆயம் அமைத்தது.
இந்த ஆயம் திசம்பர் 2ஆம் நாள் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பு எழுவர் விடுதலைக்குத் தடையாக விருப்பதாக தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
உச்ச நீதிமன்ற முழு ஆயம் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டோமானால் மாநில சுயாட்சி – இந்தியக் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறி ஆகிவிடும் ஆபத்தும் உள்ளது.
ஆனாலும், தண்டனைக் குறைப்பு தொடர்பாகக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மாநில அரசு களுக்குள்ள உரிமைகளை இந்தத் தீர்ப்பு பெரிதும் கட்டுப் படுத்தியுள்ள போதிலும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 மாநில ஆளுநருக்கு வழங்கும் அதிகாரத்தில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மாநில அரசின் பரிந்துரைப்படியே மாநில ஆளுநர் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த இயலும் என்பது ஏற்கெனவே நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எனவே, தமிழர் ஏழு பேர் தொடர்பாக மட்டுமின்றி, நீண்ட பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் வாழ்நாள் சிறைப்பட்டோர் தொடர்பாகவும்கூட, தமிழக அரசு ஒரு முடிவெடுத்து, அவர்கள் வாழ்வில் விளக்கேற்ற அரசமைப்புச் சட்ட 161ஆம் உறுப்பைப் பயன்படுத்த இதுவே தக்க தருணம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இதற்கும் மேலே, இராசீவ் கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இருந்து பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த தியாகராஜன், தாம் செய்த பிழையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பதை யும் கருத்திற்கொண்டால் இந்த எழுவரின் விடுதலையை இனியும் தள்ளிப்போடுவது நீதியாகாது எனச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இவர்களின் நன்னடத்தை, விடுப்பே இல்லாத
24 ஆண்டுச் சிறைவாசம், புலனாய்வு அதிகாரியே இவர்கள் நிரபராதிகள் என்று முன் வைத்த சட்ட வாக்குமூலம், இதனால் இவர்களின் குற்றத் தன்மையின் மேல் எழுந்துள்ள சந்தேகம், இவர்களின் தூக்கை உறுதி செய்த நீதியரசர், கே.டி.தாமஸ், “விலங்குகளைப்போல் அடைபட்டுக் கிடக்கும் இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று இப்பொழுது கொடுக்கும் அழுத்தம் என இந்த 7 தமிழர்கள் பக்கம் உள்ள நியாயங்கள் மானுடம் போற்றும் எவரையும் பதற வைக்கும்.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்சொன்ன காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு அறிவு உள்ளிட்ட எழுவரையும், மிக நீண்ட காலமாகச் சிறையில் வாடும் வாழ்நாள் சிறைப்பட் டோரையும் விரைவில் விடுதலை செய்ய கருணையோடு ஆய்வு செய்ய வேண்டுகிறோம். வருகிற சனவரி 17ஆம் நாள் தொடங்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டை இதற்குரிய நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் – என்று பேட்டியில் கூறினார்.
திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, எஸ்.டி.பி.அய். கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா,  ‘நாம் தமிழர்’ கட்சி சார்பில் வியனரசு உள்ளிட்ட தோழர்கள் பேட்டியில் உடனிருந்தனர்.

You may also like...