பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

அய்.நா.வின் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் பன்னாட்டு விசாரணையை உறுதிப் படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் இந்தியா தலையிட்டு துரோகம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள்.

24-03-2014 திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடுவதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி செல்வி, சேவ் தமிழ்ஸ் செந்தில், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட 18 இயக்கங்களை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் லு.ஆ.ஊ.ஹ விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அய்.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா தலையிட்டு மேலும் நீர்த்துப் போகச் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஏற்கெனவே அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானங்களில் இந்தியா தலையிட்டு இலங்கைக்கு சாதகமாக சில பிரிவுகளை நீக்கச் செய்தது. அப்படி, இந்தியா இலங்கைக்காக தலையிட்டும் அதை இலங்கை மதித்து நடக்கத் தயாராக இல்லை. இந்த நிலையில் மூன்றாவது முறையாக அமெரிக்க தீர்மானத்தின் வரைவு அறிமுகமாகியுள்ளது.

அமெரிக்கா முன்வைத்துள்ள இறுதி வரைவு தீர்மானம், சர்வதேச விசாரணை ஆணையம் அமைப்பதற்கும் அதை வழி நடத்துவதற்குமான உரிமையை அய்.நா. மனித உரிமை ஆணையருக்கு வழங்குவதால் இது மாற்றமின்றி ஏற்கப்படுமானால் ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைவிட இலங்கைக்கு கூடுதல் சர்வதேச நெருக்கடியை உருவாக்குவதாக அமையும். அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்துக்கு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் ஆதரவு கிடைத்திருப்பதாக தெரிகிறது. தீர்மானம் நிறைவேறிய பிறகு இலங்கை சண்டித்தனம் செய்தால் இலங்கைக்கும் அய்ரோப்பிய நாடுகளுக்கு மிடையிலான முரண்பாடுகள் அதிகரிக்கும். இந்த முரண்பாட்டை ஈழத் தமிழர் உரிமைகளுக்கு ஆதரவாக முன்னெடுக்கலாம் என்று கைதின்போது பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரை யாடலில் விவாதிக்கப்பட்டது. தீர்மானம் வரவிருக்கும் மார்ச் 28ஆம் தேதிக்கு முதல் நாள் மார்ச் 27 அன்று கூட்டமைப்பு சார்பில் சென்னையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தி பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

பெரியார் முழக்கம் 27032014 இதழ்

You may also like...