குற்றாலத்தில் சு.ம. திருமணம்

எனது மதிப்புக்கு உரிய தோழர் ஆச்சாரியார் அவர்களும் தோழர் முதலியார் அவர்களும் இத்திருமணத்தைப் பாராட்டிப் பேசியது எனக்கு மிகவும் பெருமையளிக்கத் தக்கதாகவே இருந்தது.

இதுவரை நான் எத்தனையோ திருமணத்தில் கலந்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்; தலைமை வகித்தும் இருக்கிறேன் என்றாலும் இன்றைய திருமணத்தில் நான் கலந்திருந்ததை உண்மையாகவே நான் பெருமையாக எண்ணுகிறேன். இத்திருமண முறை இப்பெரியார்களின் ஆமோதிப்பையும் ஆசியையும் பெற்றது உண்மையிலேயே எனக்குக் கிடைக்கக் கூடாத ஒரு சாதனம் கிடைத்தது போலவே இருக்கிறது. மணமக்களுக்கும் இந்த சந்தர்ப்பமானது ஒரு மறக்கக்கூடாததும், என்றும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய பெருமையானதுமான சம்பவமும் ஆகும். ஆதலால் அவர்களையும் நான் பாராட்டுகிறேன்.

எனது பணிவிற்குரிய ஆச்சாரியார் அவர்கள் நான் இத் திருமணத்துக்கு புரோகிதன் என்று சொன்னார்கள். இது தான் புரோகித முறையாகவும் புரோகிதத்துக்கு இவ்வளவு தான் வேலை என்றும் இருந்தால் நான் அந்த புரோகித பட்டத்தை ஏற்க தயாராய் இருப்பதோடு புரோகிதத் தன்மையை எதிர்க்கவுமாட்டேன். புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும் பொறுக்க முடியாமல் இருப்பதாலும் அப்படி இருந்தும் அதற்கு செல்வாக்கு இருப்பதாலும் தான் புரோகிதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கின்றேன். மற்றபடி எனக்கு வேறு எண்ணம் இல்லை. இன்று நடந்த இந்த காரியங்கள் கூட இல்லாமல் திருமணங்கள் என்பவை நடக்க வேண்டும் என்பது எனது அவா. அப்படியே அநேக இடங்களில் நடக்கின்றன. ஆணும் பெண்ணும் ரிஜிஸ்டர் ஆபிசுக்கு போய் வாழ்க்கைத் துணைவர்களாகி விட்டோம் என்று சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்துத் திருமணத்துக்கு இதைவிட அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு. புருஷன் பல பெண்ஜாதிகளைக் கட்டிக் கொள்ள முடியாது, தொந்தரவு பண்ண முடியாது. ஆண் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் சரிபங்கு உண்டு.

நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டால் ஆணோ, பெண்ணோ பிரிந்து இஷ்டமானால் வேறு கல்யாணமும் செய்து கொள்ளலாம். புரோகிதக்கூலி, தக்ஷணை, தாம்பூலம், சாப்பாடு, ஆடல், பாடல், ஆடம்பரம் ஆகிய செலவும் தொல்லையும் கிடையாது. இன்றுகூட நாம் இங்குக்கூடி இந்தக் காரியங் களாவது செய்வது இந்த வாழ்க்கை ஒப்பந்தத்துக்கு ஒரு விளம்பரத்துக்கு ஆகவே ஒழிய மற்றபடி இப்படிச் செய்தால் தான் கல்யாணமாகும் என்பதற்கு ஆக அல்ல. ஆகையால் வரவர இவைகள் கூட அவசியமில்லாத மாதிரி செய்து கொள்ள வேண்டும். சட்டங்களிலும் சீர்திருத்தங்கள் வேண்டும்.

மற்றும் ஆச்சாரியார் அவர்கள் நான் அவர்களை திருமணத்தை பாராட்டி வாழ்த்தும்படி கேட்டதை ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டதாகவும், அது கடவுளுக்குத்தான் உரிமை என்றும் சொன்னார். நான் கேட்டுக் கொண்டதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆச்சாரியார் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் மதிப்பு உண்டென்று இப்போதும் கருதுகிறேன்.

இத்திருமண முறையை பெரியார் ஆச்சாரியார் ஆதரித்து விட்டதால் எனக்கு எவ்வளவோ தைரியம் ஏற்பட்டு விட்டது.

இத்திருமண முறைக்கு இன்று ஒரு பொது ஆமோதிப்பு ஏற்பட்டு விட்டதென்றும் அது இம்முறை பெருக ஒரு நல்ல ஆதரவு என்றும் சொல்லுவேன்.

இது நமக்கு ஒரு லாபகரமான காரியம் என்றே கருதுகிறேன். அதற்கு ஆக அவர்களுக்கு நான் மிகுதியும் கடமைப்பட்டவனேயாவேன்.

நிற்க, ஆசீர்வாதம் செய்யச் சொன்னேன் என்பதிலும் எனக்கு ஆக்ஷேபணையில்லை.

ஆனால் அதற்கு தான் தகுதியில்லை என்றும், கடவுள்தான் செய்ய வேண்டும் என்றும் சொன்னதற்கு நான் சொல்லக்கூடிய சமாதானம் என்னவென்றால் ஆச்சாரியார் அவர்கள் ஆசீர்வாதம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் என்றே சொல்லுகிறேன். அவர் போன்றவர்கள் இம் மண மக்கள் வாழ்க்கை நலத்தில் ஆசைகொண்டு ஆசி கூறிவிட்டால் அந்த ஆசி வீண் ஆசியாகவோ, கடவுள் ஆசியாவோ, தக்ஷணைக்கு ஆக செய்யும் ஆசியாகவோ ஆகிவிடுமா?

உதாரணமாக அரசியல் உலகில் ஒரு வைசிராய் ஒரு ஆசாமியைப் பார்த்து “நீ முன்னேற்றமடைய தகுதி உடையவன், நீ முன்னேற்றமடைந்து பெரிய பதவிகளுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று ஆசி கூறுவாரேயானால் அந்த ஆளுக்கு அந்த ஆசி பயன்படுமா படாதா என்று யோசித்துப் பாருங்கள். வைசிராயானவர் அந்த ஆசாமிக்கு ஆபத்து வரும் காலத்தில் எல்லாம் தன்னால் கூடியதைச் செய்து தன் வாக்கு நிறைவேற முயற்சிப்பாரா இல்லையா என்று யோசித்துப்பாருங்கள். அதுபோல் ஆச்சாரியார் அவர்களால் ஆசிபெற்று விட்டால் மணமக்கள் வாழ்க்கையில் ஆச்சாரியார் அவர்கள் கண்காணிப்பும் கவலையும் இருந்துதான் தீரும். அதற்கு ஆகத்தான் தகுந்தவர்களிடம் ஆசிபெறவேண்டுமென்பது.

மற்றபடி கடவுள் ஆசி என்றால் அரை அணா வாங்கிக்கொண்டு தெருவில் போகின்றவன் யாதொரு பொறுப்பும் இல்லாமல் மணமக்கள் 16 மக்கள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். கடவுள் கிருபையில் வாழவேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள். அதனால் என்ன ஆகிவிடும்? 10, 12 குழந்தைகள் பெற்று அவைகள் கை முய் என்று பசியால் வாடி அழுதால் ஆசீர்வாதக்காரன் பக்கத்து வீட்டில் இருந்தால் என்ன சொல்லுவான். தன் ஆசீர்வாதத்தால் ஏற்பட்டதென்றோ, தனது பிரார்த்தனையில் கடவுள் கொடுத்தார் என்றோ எண்ணி உதவி செய்வானா? “இதென்னடா எழவு பன்றி குட்டி போட்ட மாதிரி 10, 12 உருப்படிகள் பெற்று பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு நமக்கு வீண் தொந்திரவு கொடுக்கிறார். தூக்கமில்லை” என்று வெறுப்புடன் இழித்துரைப்பான்.

ஆகையால் யாரும் ஆசீர்வாதம் செய்யலாம் என்பதும், கடவுள் மீது பழிபோடலாம் என்பதும் நியாயமாகிவிடாது. மணமக்களுக்கு ஆச்சாரியார் அவர்களது ஆசீர்வாதத்தை உண்மையாகவே பெருமையாய் கருதுகிறேன். ஆசீர்வாதம் என்றாலும், வாழ்த்து என்றாலும், ஆசி என்றாலும், ஆசைப் படுகிறேன் என்றாலும் கருத்து ஒன்றுதான். தனது ஆசையையும் நல்ல எண்ணத்தையும் தெரிவிப்பதேயாகும்.

தோழர் சிதம்பரநாத முதலியார் அவர்களும் இத்திருமணத்தை பாராட்டியதும் இங்கு விஜயம் செய்ததும் பாராட்டற்குரியதேயாகும்.

கடசியாக இவ்வளவு சுருக்கமுறையில் திருமணம் நடத்திக்கொள்ள முற்பட்ட மணமக்களுக்கும், அதை ஒப்புக்கொண்ட மணமக்கள் பெற்றோர் களுக்கும் இங்கு விஜயம் செய்த பெரியார்களுக்கும் நன்றிகூறி அமருகிறேன்.

குறிப்பு: 31.05.1936 ஆம் நாள் குற்றாலம் காடல்குடி ஜமீன்தார் பங்களாவில் நடைபெற்ற சென்னை என்.டி. ஷண்முகம் (பட்டணம்பொடி) கம்பெனி நிறுவனர் என்.தங்கவேலு மதுரை அய்யம்பாளையம் வணிகர் கே.எஸ். ராமசாமி அவர்கள் குமாரத்தி பூரணத்தம்மாள் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரை.

குடி அரசு சொற்பொழிவு 07.06.1936

You may also like...