பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (1) – வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.
வழக்கறிஞர் பா. குப்பன் என்பவர் ‘தமிழரின் இனப்பகை ஈ. வெ. ரா’ என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் பல வரலாற்றுப் பொய்களையும் பல வரலாற்றுத் திரிபுகளையும் செய்துள்ளார். அவர் சமீபகாலமாக ம.பொ.சியின் பக்தராக மாறியுள்ளதால் ம.பொ.சியின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது சீடகோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை.
தமிழ் மக்களுக்கு உண்மை வரலாறுகள் தெரியவேண்டும். தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார், உண்மையான தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் நாம் மேற்கொண்டிருக்கும் இலட்சியப் பயணத்தின் இறுதியில் வெற்றி கொள்ளமுடியும். பா.குப்பன் தன்னுடைய நூலின் தொடக்கத்திலேயே என்னுரையில் பக் 31இல் (அவர் தமிழ் எண்ணில் பக்க எண் கொடுத்துள்ளார்)
“இமய மலைக்கும் விந்திய மலைக்கும், கங்கை ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஆரிய வர்த்தத்திலிருந்த சூத்திரப் பட்டத்தைத் தமிழர்களுக்குச் சூட்டி இழிவுபடுத்தினார் ஈ.வெ.ரா. தமிழர்களைப் பிராமணர்கள் ‘சூத்திரன்’ என்று அழைத்ததாகக் கூறிய ஈ.வெ.ரா. ‘சூத்திரர், சூத்திரர்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கினார்” என்று கூறுகிறார். இது எவ்வளவு உலக மகா பொய் என்பது வரலாறு படித்த அனைவருக்கும் தெரியும்.
திருவள்ளுவர் காலத்திலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் ஆரியம் ஊடுருவித் தமிழர்களை இழிவு படுத்தியது என்பதற்கு திருவள்ளுவரே சான்று.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” – என்று திருவள்ளுவர் எழுத வேண்டிய காரணமென்ன? பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இருந்ததால் தானே. அதுமட்டுமன்றி 1500 ஆண்டுகளுக்கு முன்பு அரசாட்சி செய்த பல்லவ மன்னர்கள் மனுதர்மப்படி ஆட்சி நடத்தியுள்ளதையும், 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த இராசஇராச சோழன் பல ஆயிரக்கணக்கான வட நாட்டு ஆரியப் பார்ப்பனர்களை வரவழைத்து அவர்களுக்குப் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் ‘பிரம்மதேயம்’, ‘சதூர்வேதிமங்கலம்’ என்கிற பெயர்களில் தானமாகக் கொடுத்து, அவர்கள் சொல்படி (நால்வருணத் தர்மப்படி) ஆட்சி நடத்தியதையும் டாக்டர் இராசமாணிக்கனாரின் ‘பல்லவர் வரலாறு’, சாதாசிவ பண்டாரத்தாரின் ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’ முதலான நூல்களில் கல்வெட்டு ஆதாரங்களோடு உள்ளன.
மேலும் பாண்டியர் கால ஆட்சிகளிலும் பார்ப்பன நால் வருண ஆட்சியே நிலை பெற்றிருந்தது. ஒரு பாண்டிய மன்னனுடைய பெயரே ‘முதுகுடுமிப் பெருவழுதி’ ஆகும். ஒரு சோழ அரசனுடைய பெயர் ‘மனுநீதிச் சோழன்’ என்றும் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் தமிழ் அரசர்கள் அரசு ஆண்ட பொழுதிலும் வேற்று மொழி அரசர்கள் தமிழகத்தில் அரசு ஆண்ட போதிலும் ஆரியப் பார்ப்பன ஆதிக்கமும் அவர்களுடைய செல்வாக்கும் உச்ச நிலையில் இருந்ததைத் தமிழக வரலாறு நன்கு உணர்த்துகிறது. ஆனால் குப்பன் கேட்கிறார் எந்த ஆரிய மன்னன் தமிழ் நாட்டை ஆண்டான் என்று. இவருடைய வாதத்தை என்ன என்று சொல்வது. வழக்குரைஞர் பா.குப்பன் எழுதுகிறார் வடக்கே இருந்த நால்வருணத்தையும் சூத்திரப் பட்டத்தையும் பெரியார் கொண்டு வந்து தமிழர்மேல் சுமத்துகிறார் என்று. இது எவ்வளவு பச்சையான பொய்யும் வரலாற்றுத் திரிபுமாகும்.
பா.குப்பன் ஒரு வழக்குரைஞர். இந்துச் சட்டத்தைப் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். இந்துச் சட்டத்தின் முகவுரையிலேயே எடுத்த எடுப்பிலேயே இந்துக்களை நான்கு வருணங்களாகப் பிரித்து உள்ளதைத் தெளிவாக அறியலாம். பெரியார் பிறப்பதற்கு முன்பே ஆங்கிலேயர்கள் 1863 ஆம் ஆண்டிலேயே இந்துச் சட்டத்தைத் தொகுத்தார்கள். அதன் பிறகு 1955 இல் அதில் சில மாற்றங்களை இந்திய அரசு செய்தது. இன்றும் பார்ப்பனர்கள் பூசாரிகளாக உள்ள பெரிய கோவில்களில் பிறசாதியினர் பூசை செய்ய முடியாது. தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சூத்திரப் பட்டத்தை ஒழிக்கப் போராடிய பெரியாரைப் பார்த்துத் தமிழர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத் தினார் என்பது எவ்வளவு புரட்டு. குப்பனுடைய பாட்டைனையும், பூட்டனையும் 10 வயதுப் பார்ப்பன இளைஞன்கூட டே, போடா, வாடா என்று தான் அழைத்தான். அவர்கள் என்னசாமி என்றுதான் கூறினார்கள். இந்த நிலைமையை ஒழித்தது யார்? பெரியாரல்லவா? தமிழர்களுக்குத் தன்மான உணர்ச்சி யூட்டிய பெரியாரைப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை உருவாக் கினார் என்பது குப்பனுடைய பேதமையைக் காட்டுகிறது.
குப்பன் இந்த நூலில் பெரியார் மீது வைத்திருக்கும் மிகப் பெரிய குற்றச்சாட்டு எல்லைப் போராட்டத்தில் பெரியார் துரோக மிழைத்து விட்டார் என்பதுதான். அந்த நூலில் இச்செய்தி பல பக்கங்களில் உள்ளது.
அக் குற்றச்சாட்டில் ஒரு துளிகூட உண்மை இல்லை. ம.பொ.சி ஒரு பொய்யர், வரலாற்றுப் புரட்டர், அவர் தனக்கு சாதகமாகவும் திராவிடர் இயக்கங்களுக்கு விரோதமாகவும் உண்மைக்கு மாறான பல செய்திகளை எழுதியுள்ளார். ‘புதியத் தமிழகம் படைத்த வரலாறு’, ‘எனது போராட்டம்’ ஆகிய நூல்களில் அப் பொய் களை எழுதியுள்ளார். அதைப் படித்துவிட்டு ம.பொ.சியின் சீடர்கள் அப்பொய்களையே திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.
உண்மையில் எல்லைப் போராட்டம் நடத்தியவர்கள் அதை ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமாக நடத்தவில்லை. ம.பொ.சி. வடக்கெல்லை போராட்டம் நடத்தியபோது ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் 1953இல் காமராசர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வரையில் காங்கிரசுக் கட்சியில்தான் இருந்தார். காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்த பிறகும்கூட அவருடைய சிந்தனைப் போக்கு இந்திய தேசியத்திலேயே குடிகொண்டிருந்தது. அதற்கு அவருடைய ‘எனது போராட்டம்’ நூலே சாட்சி.
தெற்கெல்லைப் போராட்டம் நடத்திய மார்ஷல் நேசமணி ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு’ என்ற பெயரிலேயே அமைப்பை வைத்திருந்தார். கொச்சி, திருவிதாங்கூரிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களைத் தமிழ்நாட்டுடன் இணைப்பது மட்டுமே எங்கள் குறிக்கோள். மற்றபடி காங்கிரசுக்கும் எங்களுக்கும் கொள்கை வேறுபாடு கிடையாது என்று வெளிப்படையாக அறிக்கை விட்டவர் (நம் நாடு 1-9-54). எல்லைப்போராட்டம் நடத்தியவர்கள் அடிப்படையில் இந்தியத் தேசிய வாதிகளாகவே இருந்தார்கள். நேசமணி 1957இல் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார், வடக்கெல்லைப் போராட்டத் தளபதி கே. விநாயகம் 1952 முதல் பிரஜா சோசலி°டு கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1957இல் இந்தியத் தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். இருவரும் 1957இல் காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனார்கள். ம.பொ.சி கடைசியாகக் காங்கிரசில் சேர்ந்தார். ஆக இவர்களில் யாரும் தமிழ் இன விடுதலைக்கான உண்மையான போராளிகள் அல்ல.
இனி எல்லைப் போராட்டங்களைக் குறித்துச் சற்றுப் பார்ப்போம். பிரதமர் நேரு 1953இல் அமைத்த நீதிபதி வாஞ்சு குழு தன் பரிந்துரையில் சென்னை ஆந்திராவின் தற்காலிக தலைநகராக 3-5 வருடங்கள் இருக்க வேண்டும் (அறிக்கை பக். 6). ஆந்திராவின் உயர்நீதிமன்றம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சென்னையில் இருக்கவேண்டும் (அறிக்கை பக். 8). சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரிகளில் ஆந்திர மாணவர்களுக்கு 36சதவீத இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஒதுக்கித் தர வேண்டும் (அறிக்கை பக் 12-13). பிரிந்து போகும் ஆந்திர மாநிலம் புதிய தலைநகரை உருவாக்குவதற்குச் சென்னை மாகாண அரசு இரண்டரை கோடி ரூபாய் தர வேண்டும் (அறிக்கை பக் 26). இது வாஞ்சிக் குழுவின் பரிந்துரையாகும். தமிழகத்தின் வடக்கெல்லையான சித்தூர், திருப்பதியையும் இக் குழுதான் ஆந்திராவிற்கு அளித்தது.
இந்தப் பரிந்துரைகளைக் கண்டித்துத் தமிழ்நாடே கொதித்து எழுந்தது.
ஆந்திரா பிரச்சனை குறித்துத்
திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு
11-1-1953இல் நிறைவேற்றிய தீர்மானம்
(எ) ஆந்திர நாடு பிரிவினை விஷயத்தில் ஆந்திரர்கள் பிடிவாதமாக இருப்பதால் ஆந்திர நாட்டைப் பிரிக்கும் விஷயத்தில் காலதாமதம் செய்யாமல் உடனடியாகப் பிரித்து விடவேண்டுமென்று இக்கமிட்டி தெரிவித்துக் கொள்ளுகிறது.
அப்படிப் பிரிப்பதில் ஆந்திர நாட்டினரிலேயே சிலர் பிரிவினைக்கு முட்டுக்கட்டை போடுகிற மாதிரியில் தாங்கள் பிரிந்துபோன பின்பும் எஞ்சியுள்ள சென்னை நாட்டில் தங்களுக்குச் சில உரிமையோ சலுகையோ அதாவது பொது நீதிமன்றம், பொது கவர்னர் முதலியவை சென்னையிலிருக்க வேண்டுமென்று கேட்பதையும், சென்னையைத் தற்காலிக தலைநகரமாக இருக்க இடம் தரவேண்டுமென்பதையும், இக்கூட்டம் கண்டிப்பதுடன், அப்படிப்பட்ட உரிமைக்கோ சலுகை முதலியவற்றிற்கோ மத்திய சர்க்கார் இடம் கொடுக்குமானால் தமிழர்களின் அதிருப்திக்கும், கிளர்ச்சிக்கும் ஆளாகவேண்டி நேரிடு மென்று மத்திய சர்க்காருக்கு எச்சரிக்கை செய்கின்றது.
இதே சமயத்தில் திராவிடர் கழகம் ராஜ்ய பிரிவினையைப் பற்றிய தனது கருத்தைக் தெரிவித்துக் கொள்ளுகின்றது. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி நாடுகள் சேர்ந்த சென்னை ராஜ்யம் மத்திய (இந்திய யூனியன்) ஆட்சியின் எவ்வித சம்பந்தமுமில்லாத தனிச் சுதந்திர ராஜ்யமாகப் பிரிக்கப்படவேண்டும் என்பதே அதன் முடிந்த கருத்தாகும். இந்த நிலையில் சென்னை ராஜ்ஜியத்திலிருந்து எந்த மொழி நாடு பிரிந்து போனாலும் மீதியுள்ள மொழி நாடு அல்லது நாடுகள் பூரண சுதந்திர முள்ள தனி அரசு நாடாக ஆக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்து கொண்டு இருக்கிறதுடன் இந்த கொள்கைக்குக் கட்டுப்பட்டுப் பிரிவினைக் கிளர்ச்சி செய்யும் எந்த மொழி நாட்டாருடனுடம் யாருடனும் திராவிடர் கழகம் கூடுமான அளவு ஒத்துழைக்க முன்வரும் என்று தெரிவித்துக் கொள்கின்றது.
பி) எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய அரசாங்கத்தார் சென்னை நகரத்தையும் அதைச் சேர்ந்த எந்த பாகத்தையும் சேர்த்து கமிஷனர் ராஜ்யமாக (ஞயசவ ஊ ளவயவந) ஆக்கவோ கூடாதென்றும் இக் கமிட்டி வற்புறுத்தித் தெரிவித்துக் கொள்ளுகிறது.
(சி) பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தில் அவர்கள் நிர்வாக வசதிக்கு ஆக அமைத்துக் கொள்ளப்பட்ட ஜில்லா எல்லையில் தமிழ் பெரும்பான்மையாகப் பேசப்படும் பிரதேசத்தையும், தெலுங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் பிரதேசத்தையும் ஒன்றாக ஒரே ஜில்லாவாக அமைத்திருந்தனர். சித்துhர் ஜில்லாவில் திருத்தணி முதலிய பெரும்பாலாக தமிழ் பேசும் மக்களடங்கிய பிரதேசங்கள் இருப்பதனால் இப்போது மொழியை அடிப்படையாகக் கொண்ட நாடே பிரிக்கப்படுவதனால் ஒரு மொழி பேசும் நாட்டுடன் வேறு மொழி பேசும் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட பிரதேசம் சேர்க்கப்படுவதென்பது மொழிவாரி பிரிவினை தத்துவத்திற்கே எதிர்ப்பானது என்பதோடு வேறு மொழி பேசும் மக்களுக்கும் இடையூறானது. ஆதலால் இந்த மொழிவாரி நாடு பிரிவினையில் சித்தூர் ஜில்லாவிலுள்ள தமிழ் மொழி அதிகமாகப் பேசும் பிரதேசத்தைக் கண்டிப்பாகத் தமிழ் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று இக் கமிட்டி தீர்மானிக்கிறது. (‘விடுதலை’ 12-1-1953)
1-2-53 ஆம் தேதி தமிழ் மு°லிம்கள் சார்பில் சென்னை கடற்கரையில் நடைபெற்ற “சென்னை தமிழருக்கே” என்ற சர்வக்கட்சி கூட்டத்தில் இலட்சகணக்கான மக்கள் மத்தியில் பேசிய பெரியார், “எங்களுடைய கொள்கைப்படி நாங்கள் பிரிவினை கேட்பது எல்லாம் இந்த மாதிரியான பிரிவினை அல்ல, நாடு பிரிய வேண்டும், எப்படிப்பட்ட பிரிவினை என்றால் பர்மா பிரிந்தது போல… அந்நியர் சுரண்டலற்ற தனி நாடு வேண்டும் என்பதுதான். ஆனால் பிரிய வேண்டுமென்பவர்களைச் சந்தோஷமாகப் பிரித்து அனுப்பிவிடுவோம். சுயநலக்காரர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பதைவிட வெளியே அனுப்பிவிடுவது நல்லது. மற்றபடி இரண்டு, மூன்று பிரச்சனைகள் சொல்லப்படுகின்றன; அதாவது ஆந்திரா ஐ கோர்ட், சர்க்கார் காரியாலயம், தலைநகர் முதலியவைகள் எல்லாம் சென்னையில் கொஞ்ச நாளைக்காவது இருக்க வேண்டும் என்கிறார்கள். எப்போது போகிறோம் என்று போகிறார்களோ, அவர்களுக்கு இங்கு என்ன வேலை? ஒரு வீட்டில் பாகப்பிரிவினை எல்லாம் செய்யப்பட்ட பிறகு சமையல் மட்டும் கொஞ்ச நாளைக்கு இங்கே செய்து கொள்கிறேன் என்பது என்ன நியாயம்?
அடுத்தபடியாக கமிஷனர் மாகாணமாக சென்னையை ஆக்கவேண்டும் என்று ஆந்திரர்கள் சொல்வதைப் பற்றிக் கூறவேண்டுமானால் மடத்தை விட்டுப் போகின்ற ஆண்டிக்கு நந்தவனத்தைப் பற்றி என்னக் கவலை. மற்றும் நஷ்ட ஈடு கேட்பது என்பதும் அப்படித்தான் நியாயமில்லாத கோரிக்கையாகும் என்று ஆந்திரர்களைக் கண்டித்துப் பேசினார். (‘விடுதலை’ 3-2-53)
சென்னை நகர மேயர் செங்கல்வராயன் முதலமைச்சர் இராசாசியைக் கலந்து ஆலோசித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். முதலமைச்சர் இராசாசி அக் கூட்டத்திற்குப் பெரியாரையும் அழைக்கும்படி கூறினார்.பெரியாருக்கு மட்டும்தான் நேரு பயப்படுவார் என்பது இராசாசிக்கு நன்கு தெரியும். அக்கூட்டத்திற்குப் பெரியாரை அழைக்க மேயர் செங்கல்வராயனும் ம.பொ.சியும் வந்தனர். பெரியார் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு இலட்சம் மக்களிடையே எழுச்சியுரை ஆற்றினார். ஆந்திரர்களின் அக்கிரமத்திற்கு முடிவுகட்ட ஓரு நாள் கடையடைப்பும் வேலைநிறுத்தமும் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார். அக்கூட்டத்தில் எம். பக்தவச்சலம், எஸ்.என். கரையாளர், பி.டி. ராசன், மீனாம்பாள் சிவராஜ், ம.பொ.சி. உட்பட பலர் பேசினர். மேயர் நன்றி கூறினார். (‘விடுதலை’ 17-2-1953) வாஞ்சு அறிக்கை வெளிவருவதற்கு முன்பிருந்தே அதன் செய்திகள் கசிய ஆரம்பித்த காலம் முதலே ‘விடுதலை’யில் அதன் ஆசிரியர் குத்தூசி குருசாமி மத்திய அரசைக் கண்டித்தும், ஆந்திரர்களைக் கண்டித்தும், வாஞ்சு அறிக்கையைக் கண்டித்தும் 7-1-1953 முதல் பல தலையங்கங்கள் எழுதியுள்ளார்.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 01102015 இதழ்

You may also like...