பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (2) – வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட் டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.

முதல் பாகம் தொடர்ச்சி
“மேயர் தமது சொந்தப் பொறுப்பில் 16.3.53 அன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் நடத்த முயன்றார். பெரியார் ஈ.வெ. ராவையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்குமாறு ராஜாஜி கூறினார்.
நான் அவர்தான் சென்னை ஆந்திராவுக்குப் போனாலும் தமிழ் நாட்டிலிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று சொல்லிவிட்டாரே! தமிழ்நாட்டில் தான் இருக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அவர் வருவாரா?” என்றேன். இந்தக் கூட்டத்தில் நாயக்கர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள் அவர் வருவார் என்று சொன்னார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 623) இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பொய். திராவிடர் கழக மத்தியச் செயற்குழு 11.1.1953இல் சென்னை தமிழகத்திற்கே சொந்தம் தற்காலிகத் தலை நகராகக் கூட ஆந்திராவிற்குக் கொடுக்கக்கூடாது என்று கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும். 1.2.53இல் சென்னை கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் சென்னையில் ஆந்திரர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையென்று கண்டித்துப் பேசிய பிறகும் 16.3.53 கூட்டத்திற்கு அழைக்க வந்த ம.பொ.சி இராஜாஜியிடம் கூறியதாக ‘எனது போராட்டம்’ என்ற நூலில் எழுதியுள்ளது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி. உண்மையில் ம.பொ.சியின் குருநாதர் இராஜாஜி தான் சென்னை ஆந்திரர்களின் தற்காலிகத் தலைநகராக இருக்கவேண்டும் என்று விரும்பினார். இதோ ம.பொ.சியே கூறுகிறார். “மாநாகராட்சியின் சிறப்புக்கூட்டம் நடைபெற இருக்கும் செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்ததும் மேயரையும் என்னையும் ராஜாஜி தமது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார்”. ஆந்திர அரசுக்குத் தற்காலிமாகக் கூட சென்னையில் இடம் தரக்கூடாது என்ற வாசகத்தை நீக்கிவிடுமாறு மேயரையும் என்னையும் ராஜாஜி கேட்டுக் கொண்டார். மேயர் அவர்கள் வெகு சுலபத்தில் அதற்கு இணங்கிவிட்டார். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். நிபந்தனை எதுவும் இல்லாமலே ஆந்திர அரசுக்கு சென்னையில் இடம் தரத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் தயாராக இருப்பதை நான் அறிவேன். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 632) சென்னையில் ஆந்திராவுக்கு தற்காலிகமாகக் கூட தலைநகரமாக இருக்க அனுமதிக்கக் கூடாது என்று சொன்ன பெரியாரைத் துரோகி என்பதும், ஆந்திரத் தலைநகர் தற்காலிக மாகச் சென்னையில் இருக்க வேண்டும் என்று சொன்ன இராஜாஜியைத் தலைவர் என்பதும் இராஜாஜியைத் தமிழ்ப் பார்ப்பனர் என்பதும் வேண்டுமென்றே பெரியார் அவரை எதிர்க்கிறார் என்பதும் எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி என்பதை இதன்மூலம் அறியலாம்.
15.2.53 சென்னை மாவட்ட திராவிடர் கழக செயற்குழு 22.2.53 அன்று சென்னைக்கு வரும் குடிஅரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்துக்குக் கருப்புக் கொடி காட்டத் தீர்மானித்தது. (விடுதலை 16.2.53) அன்றே திராவிடர் கழக மத்திய செயற்குழு கூடி இந்தியக் குடிஅரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் சென்னைக்கு வரும் அன்றே “தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்” தமிழகமெங்கும் கொண்டாடும்படி தீர்மானம் நிறைவேற்றியது (விடுதலை 16.2.53)
திட்டமிட்டபடி இராசேந்திர பிரசாத்துக்குக் குத்தூசி குருசாமி தலைமையில் ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டினர். காவல் துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலால் சில தி.க. தோழர்களுக்கு மண்டையும் உடைந்தது.
22.2.53 அன்று வாஞ்சு அறிக்கைக் கண்டன நாள் தி.க. தோழர்களால் தமிழகம் முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடு கருதாமல் புதுதில்லியில் 1953 மார்ச் 23 பிரதமர் நேருவைச் சந்தித்து, ஆந்திரத்தின் தற்காலிகத் தலைநகரமோ, உயர்நீதி மன்றமோ சென்னையில் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். (விடுதலை 4-3-53)
இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகுதான் நேரு ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்றார்.
தெற்கெல்லைப்போராட்டத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழிவழியாகப் பிரித்து அமைக்க நேருவின் தலைமையிலான இந்திய அரசு நீதிபதி பசல் அலி தலைமையிலான குழுவை 29.12.53இல் அமைத்தது. அக்குழுவில் கே.எம். பணிக்கர் என்ற மலையாளியும் குன்சுரு என்ற உ.பி.காரரும் உறுப்பினர்களாக இருந்தனர். அக்குழு 30.9.1955இல் தங்கள் பரிந்துரையை இந்திய அரசுக்கு அளித்தது. 267பக்க அறிக்கையில் பக்81 முதல் பக்89 வரை தமிழகத்தைப் பற்றியது.
அக்குழுதான் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட 4 தாலுக்காக்களைக் கேரளாவுக்குக் கொடுக்கவேண்டும் என்று சிபாரிசு செய்தது. மார்ஷல் நேசமணி தலைமையில் 1946 முதலே திருவாங்கூர், கொச்சி பகுதியில் உள்ள தமிழ்ப்பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடி வந்தனர். இந்த அறிக்கை வெளிவந்தவுடன் அவர்களுடைய போராட்டமும் அதிகரித்தது. தமிழகமும் கொந்தளித்து எழுந்தது. 10.7.54 முதலே விடுதலை யில் திருவாங்கூர் தமிழர் கிளர்ச்சிக்கு ஆதரவான தலையகங்கள் எழுதப்பட்டு வந்தது.
21.11.1955 முதல் 24.11.1955 வரை தமிழகச் சட்டமன்றத்தில் இந்த குழுவின் அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மலையாளிகளும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினரும் தவிர எல்லோருமே தேவிகுளம் பீர்மேடு தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று பேசினர், தமிழக நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் தேவிகுளம் பீர்மேடு தமிழகத்திற்குச் சொந்தம் என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார். இறுதி நாளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தேவிகுளம் பீர்மேடு தமிழகத்திற்குச் சேரவேண்டுமென்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் அதற்கு எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன. பின்னாளில் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் (ஊஞஐ) உள்பட எதிர்த்து வாக்களித்தனர். தமிழகப் பொதுவுடைமைக்கட்சி உறுப்பினர்கள். ப. ஜீவானந்தம், ஞ. இராமமூர்த்தி, கல்யாண சுந்தரம் உட்பட 13 சட்டமன்ற உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர். தீர்மானம் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக நிறைவேறியது.
தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தை ஆதரித்து விடுதலையில் தலையங்கம் எழுதினார் குத்தூசி குருசாமி (விடுதலை 25.11.1955) நேரு, பசல் அலி குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைத்தார். 16.12.1953 முதல் 23.12.53 வரை விவாதம் நடைபெற்றது. நேசமணியும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் நேரு தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தைப் புறக்கணித்துத் தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.
தமிழக முதல்வரையும், நிதிஅமைச்சர் சி.சுப்பிரமணியத்தையும் டெல்லிக்கு அழைத்துத் தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்குச் சொந்தம் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
தமிழக சட்டமன்றத்தில் சி.சுப்பிரமணியம் தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று மசோதா கொண்டுவந்தார். 28.3.56 முதல் 31.3.56 வரை நடைபெற்ற விவாதத்தில் காங்கிரசுஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் விவாதத்தில் பங்கேற்கக் கூடாது என்று கொறடா உத்தரவைப் பிறப்பித்து, இது மேலிட உத்தரவு இதைமீற முடியாது என்று கூறித் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கும் விடாமலே நிறைவேற்றினார். அப்போதுதான் முதலைமைச்சர் குளமாவது மேடாவது என்று சட்டமன்றத்திலேயே பேசினார்.
உண்மையான தமிழர்களின் எதிரி நேருவே என்பதை உணர்ந்த பெரியார் மலையாளிகளைத் தமிழகத்தை விட்டு வெளியேறும் படியான கிளர்ச்சி செய்யாத வரையில் தில்லி பணியாது என்று மதுரைப் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். (விடுதலை 18.1.56)
‘தில்லி அநீதிக்கு மேல் அநீதி தேவிகுளம் பீர்மேடு தாய்த் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்படுகின்றன’ என்று 17.1.56 அன்று விடுதலையில் தலையங்கம் எழுதப்பட்டது. 15.2.56 அன்று மன்னார் குடியில் பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார் பார்ப்பான், வடநாட்டான், மலையாளி போன்ற அந்நியனெவனும் வெளியேற்றப்பட வேண்டியவனே. மலையாளிகளைத் தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டாமா என்று ஆவேசப்பட்டார். (விடுதலை 16.2.56) ஆக தமிழகம் தன் மண்ணை இழந்தது. திராவிடம் பேசியதாலா (அ) இந்தியம் பேசியதாலா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயரில் போலிக் கட்சி வைத்துக் கொண்டு நேருதான் என் தலைவர், காந்திதான் என் தலைவர், சத்தியமூர்த்திதான் என் தலைவர் இராஜாஜிதான் என் தலைவர் என்று கூறி இந்தியத் தேசியத்திற்குக் காவடி தூக்கிய ம.பொ.சி தான் தமிழினத்துரோகி. தி.மு.கவும், வடக்கு எல்லை தெற்கு எல்லைப் போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுத்து கொண்டது.
ம.பொ.சி வட எல்லைப் போராட்டத்தில் பெரியாரின் மீது பொய்யையும், புளுகையும் அவிழ்த்துவிட்டதைப் போலவே தெற்கெல்லைப் போராட்டத்திலும் மிகப்பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார்.
“பெரியார் ஈ.வெ.ரா எப்போதும் எதிலும் ஒரு தனிப்போக்கோடு நடந்து கொள்ளக்கூடியவரல்லவா? பசல் அலி கமிஷன் பரிந்துரையிலும் தமது வழக்கப்படித்தான் அவர் நடந்துகொண்டார். திருச்சியிலுள்ள தமது மாளிகையில் ‘தினத்தந்தி’ (தேதி கொடுக்கப்படவில்லை) நிருபர்க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் “தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை, கொச்சி, சித்தூர் ஆகிய பகுதிகள் பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியதுதான். சமீபத்தில் சர்தார் பணிக்கர் வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன். தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு (தேவிகுளம், பீர்மேடு) வந்தார்களே ஒழிய நிலம் மலையாளத்தைதான் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன்” (எனது போராட்டம் பக் 758) தினத்தந்திக்குக் குத்தூசி குருசாமி வைத்த பெயரே (டெய்லிடூப்) என்பதாகும். ம.பொ.சியும், தினத்தந்தி ஆதித்தனும் வேண்டுமென்றே பெரியாரின் மீது அவதூறுகளைப் பரப்பி வந்தனர்.
ஆதித்தனார் 1952-57 வரை பிரஜா சோஷலிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அக்கட்சியின் கொச்சி முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை 11 தமிழர்களைச் சுட்டுக் கொன்றார். அக்கட்சி கொச்சி சட்டசபையில் தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று கூறியபோதும் தினத்தந்தி ஆதித்தன் அக்கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கவில்லை. ம.பொ.சியைப் போன்றே பெரியார் மீது ஏதாவது பொய் சொல்லிக் கொண்டிருப்பது அவரது வாடிக்கை. பெரியாருக்கென்று விடுதலை நாளேடு இருக்கிறது. எங்காவது தேவிகுளம், பீர்மேடு மலையாளிக்கு சொந்தம் என்று இருக்கிறதா என்று யாராவது காட்ட முடியுமா?
1956 முதல் பெரியார் மறையும் வரை “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கி வந்தார். இவரா தமிழினப் பகைவர், தமிழினத்துரோகி?

தொடரும்

பெரியார் முழக்கம் 08102015 இதழ்

 

You may also like...