சத்தியமூர்த்தியும் சமதர்மமும்

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆனைமலை ஐரோப்பியர் சங்கத்தில் ஐரோப்பியர் முன்னிலையில் பேசும் போது

“காங்கிரஸ் சமதர்மத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் சமதர்மத்துக்கு விரோதமானது, ஜவஹர்லாலை காங்கிரஸ் தலைவராக ஏற்றுக் கொண்டதானது அவருடைய தனிப்பட்ட முறையிலேயே ஒழிய, அவருடைய கொள்கைகளுக்காக அல்ல, சமதர்மம் பணக்காரர்களைப் பாதிக்கும், சமதர்மம் சமூக வேறுபாடுகளை ஒழித்துவிடும், ஏழைகளுக்கு எஜமானர்களாய் எவரும் இருக்க முடியாது, ஆதலால் காங்கிரஸ் சமதர்மத்தை ஆதரிக்காது, காங்கிரஸ் செல்வவான்களைக் காப்பாற்றும், வெள்ளைக்காரரோடு ராஜி செய்து கொள்ளும்” என்பதாக பேசி இருக்கிறார்.

இதை 27-5-36ந் தேதி தாருல் இஸ்லாம் பத்திரிகை 2ம் பக்கம் 5, 6வது கலத்தில் காணலாம்.

ஆகவே தமிழ்நாட்டு வாலிபர்களில் சிலர் காங்கிரசானது சமதர்மக் கொள்கையுடையதென்றும், சமூக வேற்றுமையை ஒழிக்கக்கூடிய தென்றும், சமதர்மக்காரரும் சமூக வேற்றுமையை ஒழிக்க வேண்டுமென்பவர்களும் காங்கிரசில் வந்து சேர வேண்டும் என்றும் சொல்லுவார்களேயானால் அவர்களை அறிஞர்கள் என்றோ யோக்கியர்கள் என்றோ எப்படி சொல்ல முடியும். தோழர் ஜவஹர்லாலை காங்கிரஸ் பிரசிடெண்டாக தெரிந்தெடுத்த போதே நாம் ஜவஹர்லாலைக் காட்டி வாலிபர்களையும், தேச மக்களையும், ஏழைகளையும் ஏமாற்ற காங்கிரஸ்காரர்கள் காந்தியார் உள்பட சூழ்ச்சி செய்கிறார்கள் என்று சொன்னோம். அது இப்போது தோழர் சத்தியமூர்த்தியார் வாக்காகவே ருஜுவாகிவிட்டது.

நம்நாட்டு காங்கிரஸ் தலைவர் நம்மிடம் வந்து பூரண சுயராஜ்யம் என்பதும், வெள்ளைக்காரரிடம் சென்று நீங்களும் நாங்களும் ராஜி செய்து கொள்ளலாம் என்பதும், சமூக வேற்றுமைகளை ஒழிப்பதில்லை என்பதும், ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி அது பொதுவுடமை கட்சி என்பதும், சமூக வேற்றுமைகளை ஒழித்து எல்லா மக்களையும் சமமாக்க முயற்சிக்கிறது என்பதும் இப்படியாக பல திகுடுதத்த சூழ்ச்சிகள் செய்து வருவதைப் பொதுமக்கள் உணராமல் காங்கிரசு காங்கிரசு என்று கூப்பாடு போட்டால் இவர்களை என்ன என்று கூறுவது? செம்மறி ஆடுகள் என்றா அல்லது பார்ப்பனர்கள் கை கொழுக்கட்டைகள் என்றா? என்று நமக்கு விளங்கவில்லை.

உத்தியோகம் பதவி கூலி ஆகியவைகளுக்கு ஆசைப்பட்டு காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களின் கால்களுக்குள் நுழைபவர் களைப் பற்றி நாம் குறை கூறவில்லை.

ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தேசத் துரோகக் கட்சி யென்றோ, மக்களுக்கு விரோதமான கட்சியென்றோ, வெள்ளைக்காரர்களுக்கு உடந்தையான கட்சியென்றோ, உத்தியோக வேட்டைக் கட்சி யென்றோ யாராவது சொல்வார்களானால் அவர்களைத்தான் நாம் மடையர்கள் என்றோ, அல்லா விட்டால் அயோக்கியர்கள், கூட்டி கொடுத்து வயிறு வளர்ப்பவர்கள், சமூகத் துரோகிகள் என்றோ கூறாமல் இருக்க முடியவில்லை. காங்கிரஸ்காரர்களைவிட, காங்கிரஸ் தலைவர்களை விட எந்த விதத்திலாவது ஜஸ்டிஸ் கட்சியும், ஐஸ்டிஸ் தலைவர்களும் கொள்கையில் மோசமென்றோ ஒழுக்கத்தில் நாணயத்தில் மோசமானவர்கள் என்றோ யாராவது சொல்ல முடியுமா?

உத்தியோகம் ஒப்புக் கொள்வது சீர்திருத்தத்தை நடத்திக் கொடுப்பது, வெள்ளைக்காரருடன் ராஜி செய்து கொள்வது, பணக்காரர்களை காப்பாற்றுவது, சமூக வேற்றுமைகளை காப்பாற்றி நிலைக்கச் செய்வது ஆகிய காரியங்கள் இன்றைய காங்கிரசில் திடமாக இருக்கும்போது இந்திய அரசியல் கட்சிகளில் காங்கிரசைவிட மோசமான கட்சி வேறு எது என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ் சமதர்மக்காரர்கள் இருக்கிறதாகச் சொல்லுவதெல்லாம் புரட்டு அல்லாமல் வேறு உண்மையிருக்க முடியுமா? என்று யோசிக்கும்படி வேண்டுகிறோம்.

தோழர் ஜவஹர்லால் அவர்களும் பம்பாய் வர்த்தகரிடம் சென்று தன்னுடைய சமதர்மமானது பகல் கொள்ளையடிக்கும் வர்த்தகர்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்யாது என்று வாக்குக் கொடுத்து அவர்களை காங்கிரசை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தினம் ஒன்றுக்கு நல்ல வழியில் 2 அணா சம்பாதித்து வயிறு வளர்க்க முடியாத சோம்பேறிகளும், இழிமக்களும் மானம் வெட்கமில்லாமல் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி கூலி பெற்று பார்ப்பனரல்லாதார் இயக்கங்களையும், தலைவர்களையும், தோழர்களையும், இழிதனமாய் பேசுவதும், பலாத்காரம் செய்வதுமான காரியங்களில் ஈடுபடுவதானால் இவற்றை அடக்கவும், ஒழிக்கவும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள், பதவியிலிருப்பவர்கள் முயற்சி எடுத்துத் தக்கப் பிரசாரம் செய்ய வேண்டாமா என்று கேட்டு இதை முடிக்கின்றோம்.

குடி அரசு தலையங்கம் 31.05.1936

You may also like...