பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும் எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.

பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை, முதலிய காரியங்களும் பெயர்களும் சொல்லுவதுண்டு.

இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுவதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் அதாவது இம்மையில் இவ்வுலகில் யுக்தி, செல்வம், சுகம், இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவை களும், மறுமையில் மேல்லோகத்தில் பாவமன்னிப்பு, மோக்ஷம், நல்ல ஜன்மம் முதலியவைகளும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள் தான் பிரார்த்தனைக் காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்த பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவ பலிகொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும்.

ஆகவே இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்லவேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது.

படித்துப் பாஸ் செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டு மென்றால், “மோக்ஷத்துக்கு” போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோக்ஷத்துக்கு போக வேண்டும் என்றால், இவைகளுக்கெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு வேலை செய்யாமல் கூலிகேட்கும் பெரும் சோம்பேறித் தனமும் மோசடியும் என்றும் சொல்வதுதான் மிகப் பொருத்தமாகும்.

பேராசையும் சோம்பேறித்தனமும் ஏமாற்றும் தன்மையும் இல்லா விட்டால், பிரார்த்தனைக்கு இடமே இல்லை.

மற்றும் முன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஆக பிரார்த்தனை செய்வதும் பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும் முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி அதை ஏமாற்றச் செய்யும் சூக்ஷி என்று கூட சொல்லி ஆகவேண்டி இருக்கிறது.

எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம்.

அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனையடைய எதிர் பாராமல் காரியத்தை செய்யாது பிரார்த்தனையில் பலன் அனுபவிக்கவேண்டும் என்று கருதினால் கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு “அறிவாளி” என்றும் தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக் காரனென்றும் தானே சொல்லவேண்டும்.

தவிர இந்த பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனை சோம்பேறி யாக்குவதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசென்சு, அனுமதிச் சீட்டுக் கொடுப்பது போலாகிறது. விதை நட்டு தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க கத்தி எடுத்துக்கொண்டு போகிறவனுக்கும் யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

கடவுள் சகலத்தையுமுணர்ந்து அதற்கு தகுந்தபடி பலன் கொடுக்கக் கூடிய சர்வஞ்த்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதி இருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலையில் ஈடுபடவோ அதற்காக நேரத்தை செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணியமாட்டான்.

ஏனென்றால் சகல காரியமும் கடவுளால் தான் ஆகும் என்று நினைத்துக்கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும் எண்ணத்துக்கும் தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்து இருந்த ஒருவன் அந்த தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.

சாதாரணமாக மக்களில் 100க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான அறிவற்ற வியாபாரத் தனமான முறையில் இருந்து வருகிறது.

அதாவது எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன காரியம் செய்கிறேன். அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்கு பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது.

இவர்கள் எல்லோரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளை புத்திசாலி என்றோ சர்வ சக்தி உள்ளவன் என்றோ பெரிய மனிதத்தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி ஆகவேண்டும்.

சிலர் சொல்லுகிறார்கள். மனிதன் பாபி, அவன் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான். ஆதலால் மன்னிப்பு கேட்டுதான் தீரவேண்டும் என்கிறார்கள்.

நான் பாபம் செய்துதான் தீருவேன். நீ மன்னித்துதான் ஆகவேண்டும் என்று பிரார்த்திப்பதை கடவுள் ஏற்றுக்கொள்வதானால் மனிதன் எந்தப் பாவத்தை செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்கு புலப்பட வில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அருத்தம் தான் என்ன?

ஆகவே கடவுள் கற்பனையை விட இந்த பிரார்த்தனை கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்ல வேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் போய்விடும்.

மனிதன் பூஜையும் பிரார்த்தனையும் செய்வதற்கு தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய கடவுளுக்கு ஆக பூஜையும் பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை.

குரு (பாதிரி) புரோகிதன் (பார்ப்பனர்) ஆகியவர்கள் பிழைப்புக்கு ஆகவே பிரார்த்தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது.

இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப்பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி மனிதனுடைய செய்கையும் எண்ணமும் “சித்திரபுத்திரனுக்கோ கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது” இதற்கு ஆக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும் எமதர்ம ராஜாவும் இருந்தே இருக்கிறான்.

மத்தியில் பிரார்த்தனை பூசனை என்பது மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும் புரோகிதனும், பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப்போல் மனிதன் வீணாய்க்கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது? என்பவைகளை யெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ பயனற்ற காரியம் என்றோ அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை ஜனவரி 1936

~cstart

அப்போதே வாக்குக் கொடுத்திட்டேன்

– சித்திரபுத்தி�ரன்

~cmatter

தாய்: ஏண்டி சேஷû குட்டி அவன் சாயபு ஆச்சுதேடி அவன்கிட்டே என்னடி ரகசியம் பேசுறே.

மகள்: இல்லே அம்மா நான் சின்னக் குழந்தையா இருக்கச்சே வீதியிலே விளையாண்டிருந்தப்போ மணலிலே ஒரு வீடு கட்டினேன். அதை வந்து இந்த அடுத்த ஆத்து சுக்கூர் இடிக்க வந்தான். நான் இடிக்காதடா என்று சொன்னேன், அப்படியானால் என்னைக் கட்டிக்கிறாயா என்று கேட்டான், நானு வீடு இடிந்துபோமேன்னு ஆகட்டுமென்று சொல்லிட்டேன். அதை இத்தனை நாள் மனசிலே வெச்சிண்டிருந்து இப்ப வந்து கேக்கராண்டி.

தாய்: நீ என்னடி சொன்னாய்.

மகள்: நான் என்னம்மா சொல்லட்டும், ஆகட்டுமென்னுதான் சொல்லித் தொலைச்சேன்.

தாய்: அடிஅடி நாசமாப்போன முண்டே! துலுக்கனையா கட்டிக்கிரேண்ணு சொன்னே, நீ பேதியிலே போக, நீ பிளேக்கிலே போக, உனக்கு ஒரு உளமாந்தை வர.

மகள்: கோவிச்சுக்காதே அம்மா! அப்ப நான் ஆகட்டும் என்னு சொல்லியிருந்தேன் அல்லவா, அதை வச்சிண்டு வந்து கேட்டான். பின்னே நான் என்ன சொல்றது.

அப்ப நான் அப்படி சொல்லாதெ இருந்தா வீட்டை இடிச்சிருப்பானம்மா?

தாய்: உன் தலையிலே நெருப்பைக் கொட்ட, நான் 2, 3 வருஷத்திற்கு முன்னையே உன்னைக் கல்யாணம் பண்ணனும் என்னு உங்கப்பாஓடே சொன்னபோது, உங்கப்பா சாரதா சட்டமோ லக்ஷிமி சட்டமோ என்னமோ பேரெழவு சட்டம் குறுக்கிடறதடி என்று சொன்னார் அந்தப் பிராமணன். இப்போ நீ மண்ணுக் கொளிச்சிண்டு விளையாடற போதே அவனுக்கு வாக்குக்கொடுத்துட்டேன் என்கின்றாயே, இன்னம் கொஞ்ச நாள் போனா பறையனுக்கும் சக்கிலிக்கும் பால் குடிக்கிறபோதே வாக்குக்கொடுத்துட்டே னென்றல்லவாடி சொல்லுவாய். என் வயிறு பத்தி எறியரதேடி, நீ அந்த சுக்கூரோடு கொஞ்சினதைப் பார்த்து.

மகள்: இல்லே அம்மா உன்னெதிரிலே நான் கொஞ்சுவேனா அம்மா? 2, 3, வருஷத்திற்கு முன்னே கல்யாணம் ஆயிருந்தால் கூட அப்பவும் நான் வாக்குத் தவறமாட்டேனம்மா. இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லேன். இப்ப அவன் வந்து நீ சொன்ன வார்த்தை என்னடி சேஷû குட்டி என்றானே, அப்பவும் இப்படித்தானே கேட்பான்.

தாய்: அடி சண்டாளி சொன்ன வார்த்தையாவது மண்ணாங்கட்டியாவது அவன் இனிமே இங்கே வந்தா உன் மயிரை அறுத்துடுவேன் தெரியுமா?

சின்னக் குழந்தையாய் இருக்கும்போது என்னமோ சொன்னாளாம் அவன் வந்து இப்போ கேக்கறானாம் என்னடி அனியாயம் இது?

மகள்: நீ மயிரை அறுக்கவாண்டாம் அம்மா சுக்கூரே என் மயிரைக் கத்தரிச்சூடறேன் என்று சொல்லி இருக்கான். யாரோ சரோஜனி குட்டிகளாம் அதுகள் மயிரைக் கத்திரிச்சிண்டிருக்காம். அதுமாதிரி என்னையும் கத்தரிச்சு விட்றேன்னு சொன்னான்.

தாய்: அய்யய்யோ கெட்டுப்போச்சடி காரியம். நம்ம குடும்பத்தையே ஜாதியையே பாழாக்கீட்டாயே நான் காவேரியில் போய் வீழ்ந்துடறேண்டி உன்னாலே.

மகள்: அம்மாம்மா, வேண்டாம்மா பின்னெ நான் என்னாம்மா சொல்லட்டும் சுக்கூருக்கு?

தாய்: என்னடி சொல்லறது. நான் அப்போ கொழந்தையா இருக்கச்சே வேடிக்கையா சொன்னா இப்ப என்னமாடா வந்து இத்தனை தைரியமாக் கேக்கறாய் என்று அதட்டிச் சொல்லடி.

மகள்: இப்பவும் நான் கொழந்தை தாம்மா.

இப்ப யாரையாவது கட்டிண்டா கட்டின ஆம்படையானை இன்னும் 10 நாள் பொறுத்து நான் கொழந்தையா இருக்கும்போது கல்யாணம் செய்தூண்டேன் நீ வாண்டாம் போண்ணு சொன்னா போய்டுவானா? அப்படிதாம்மா சுக்கூரும் கேட்பான். ஒரு தடவை வாக்குத் தவறினால் என்ன? இரண்டு தடவை வாக்குத் தவறினால் என்ன? அப்புறம் தினம் தினம் வாக்குத் தவறினால் தான் என்னம்மா?

நான் சுக்கூர் கிட்ட சொல்லீட்டேன். கட்டினா அவனைக் கட்டிக்கிறேன். இல்லாவிட்டால் கன்னியா மடத்தில் சேர்ந்துக்கிறேன். எனக்குப் புருஷனே வாண்டாம், சுக்கூர் முகத்தில் மறுபடியும் நான் எப்படி விழிப்பேன்.

தாய்: உங்கப்பா வரட்டுமடி, நாளை காலையில் வரப்போரார். இதெல்லாம் அவரிடம் சொல்லி உன்னை இந்த வாரத்துக்குள்ளாகவே எவன் தலையிலாவது கட்டித்தொலைத்து விட்றேன்.

மகள்: அப்படியா என்னமோ செய்துக்கோ நான் என்னமோ சுக்கூருக்கு வார்த்தை கொடுத்திட்டேன்.

தாய்: உம், உம் கொடுப்பேடி ஆள் எளப்பாளியாய் இருந்தால் (என்று சொல்லி விட்டு பேச்சை முடித்து விட்டாள்.)

(இரவு 1 மணிக்கு சுக்கூரும் சேஷûக் குட்டியும் டப்பிள். தகப்பனார் வந்தார்.)

தாய்: ஏம் பேசலே கேட்டீளா சேஷû குட்டி அடுத்தாத்து சுக்கூருடன் ராத்திரி ஓடிட்டா.

தகப்பன்: அவனோடு தான் போனாள் என்று உனக்கு எப்படிடீ தெரியும்.

தாய்: நேற்று அவனோடு சிரிச்சிண்டு பேசிகிண்டிருந்தா. நான் கண்டிச்சேன். அவள் ஒரு தைரியம் சின்ன கொழந்தையாய் மண்ணுக் கொளிச்சிண்டு விளையாடும்போது அவனைக் கட்டிக்கிறேண்ணு வாக்குக் கொடுத்துட்டாளாம். அதுக்காக அவனை கட்டிக்கணுமாம். அப்படின்னு என்னிடம் சொல்றா, வஸ்சேன் அப்பா வந்த சொல்ரேண்ணே. பயந்துண்டு ஓடிட்டா முண்டை.

தகப்பன்: சனியன் தொலைந்தது போ. அவன் மேலே அவளுக்கு ஆசை வந்துட்டுது என்னமோ சொல்லிண்டு ஓடிட்டா. நல்லகாரியம் இந்த நம்ம அயோக்கிய ஜாதியிலேயே அவளுக்கு தகுந்த மாப்பிள்ளை வேணுமுண்ணா 5000 ரூ வரதக்ஷணை கல்யாணச் செலவு 2000 ரூ ஆக 7000 ரூபாயிக்கு எங்கே போரது யாரை விக்கிறது.

போகட்டும் போ அவனும் கு.கு.ஃ.இ. பாசுபண்ணி இருக்கான். நல்ல அசல் சாயபு. பிராமணனாட்டமா செக்கச்செவேரெண்ணு இருக்கான். பிராமணன் M.அ. படிக்கிறதும் சரி சாயபு கு.கு.ஃ.இ. படிக்கிறதும் சரி, சீக்கிரத்திலெ ஏதோ வேலைக்கு வந்துடுவன், நம்மை விட்டது சனியன்.

தாய்: ஐயய்யோ அசட்டு பிராமணா அப்படிதான் இருந்தாலும் ஒரு முதலி நாயக்கன் இல்லையா சாயப்போடவா ஓடரது.

தகப்பன்: என்னமோ அவ கண்ணுக்கு பிடிச்சவனோடு போய்ட்டா. நம்ம ஜாதியில் இல்லாவிட்டால் வேறு யாரோடு போனால்தான் என்ன? முதலிக்கும் சாயபுக்கும் என்னடி வித்தியாசம் மொட்டை ஒன்றுதானே, உனக்கு என்னத்துக்கடி இத்தனை ஆத்திரம்.

தாய்: சுக்கூர் அவாத்திலே பொண்ணை மூடி போட்டல்லவா வெச்சூடுவா. இனி அவளைப் பார்க்க முடியுமா.

தகப்பன்: நீ வேணுமன்னா அவாத்துக்கு போய் தினம் பாத்துட்டு வாடி யாரு வாண்டாமென்றா.

தாய்: சரி சரி அவாத்துக்கு போனா நாலுபேரு என்ன சொல்லுவா.

தகப்பன்: என்னமோ சொல்லுவா நான் சம்மதிச்சா அப்பரம் யார்டீ கேக்ரெவா இனி அப்படித்தாண்டி எல்லாம். ராஜகோபாலாச்சாரியார் சேட்டுக்கு பெண் கொடுக்கலையா?

சூரியராவ் நாயுடு ஒரு சாயபுக்கு பெண் கொடுக்கலையா? நீலகண்ட சாஸ்திரி வெள்ளைக்காரனுக்கு பெண் கொடுக்கலையா? சடோபாத்தியாயா நாயுடுக்கு பெண் கொடுக்கவில்லையா? நாம்தானா கெட்டுப்போயிட்டோம். அதுவும் நாமா கல்யாணம் செய்து கொடுத்தமா அவளே ஓடிட்டா.

நமக்கு என்னடி பயம் ரூ 7000 மிச்ச மாச்சடி சுக்கூர் அவப்பா சிபார்சிலே நம்ம மணிக்கி கூட ஒரு உத்தியோகம் வந்துடும். நீ ஒண்ணும் சத்தம் போடாதே. யாராவது கேட்டால் காங்கிரஸ்காரர் கேட்டா இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று சொல்லடி. ஜஸ்டிஸ்காரர் கேட்டா சுயமரியாதையில் சேர்ந்துட்டோம் என்று சொல்லடி, அப்பரம் யார் நம்மண்டை வருவா பார்ப்போம்.

தாய்: சரி பகவானே காலம் இப்படியா கெட்டுப்போகணும்?

தகப்பன்: என்னடி கெட்டுப்போச்சி? நாளவருஷத்துக்குப் பார்டீ சேஷûகுட்டி தங்க விக்கிரகமாட்டமா பிள்ளை பெத்துடப்போரா எங்கயோ அவா சௌக்கியமாய் இருந்தால் சரி, போய் வேலையைப் பார்.

பகுத்தறிவு (மா.இ.) உரையாடல் ஜனவரி 1936

 

You may also like...