தமிழ்த் திருநாள்

கடவுள் வணக்கம் இல்லை

மதத்தில் இருந்து தமிழ் விலகினாலொழிய தமிழுக்கும் தமிழருக்கும் சுயமரியாதை உண்டாகாது

புராணங்களில் இருந்து தமிழுக்கு இலக்கியம் எடுப்பது மலத்திலிருந்து அரிசி பொறுக்கும் மாதிரி

திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரும் கா.நமச்சிவாய முதலியாரும் தென்னாட்டின் இன்றைய தமிழ்ப் பெருமைக்குக் காரணஸ்தராவார்கள்

அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே! நீங்கள் இவ்வளவு பெரிய கரகோஷமும் ஆரவாரமும் செய்து என்னை இப்பொழுது வரவேற்ற மாதிரி எனது உபன்யாச முடிவில் எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்ய மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் தமிழ் பாஷைக்கு வாழ்த்துக்கூறும் வேலை இலேசானதல்ல. அதிலும் என்போன்ற அதாவது தமிழ் பாஷைக்கு வல்லின இடையின எழுத்து பேதமும், பிரயோகமும் பாஷையின் இலக்கண இலக்கியமும் அறியாதவனும், தமிழ் பாஷையையே கெடுத்து கொலை செய்து வருபவன் என்கின்ற பழியைப் பெற்றவனுமான நான் தமிழ் வாழ்த்துக்கு தகுதி உடையவனாவேனா என்று பாருங்கள்.

அன்றியும் தமிழைப்பற்றி அபிப்பிராயங்களிலும் பண்டிதர்களுக்கும் எனக்கும் எவ்வளவோ துறையில் நேர்மாறான கருத்துக்கள் இருந்து வருவதும் எவரும் அறியாததல்ல.

இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வாழ்த்துதல் என்பதையும் நான் இவ்வளவு சாதாரணமாய்க் கருதுபவனுமல்ல. வாழ்த்துதல் என்றால் பார்ப்பனர்கள் ஏதோ மஞ்சளையும் அரிசியையும் கலந்து பொறுப்பும் பொருளும் இல்லாத ஒன்றின் பெயரைச் சொல்லி வாழ்த்தி (ஆசீர்வாதம் செய்து) விட்டு ஏதோ பெற்று வயிறு வளர்ப்பது மாதிரி வாழ்த்தை அவ்வளவு ஏமாற்றமாக நினைப்பவன் அல்ல. ஆனால் வாழ்த்துதலின் அவசியத்தையும், அதன் பெருமையையும் நான் உணர்ந்தவனேயாவேன். தகுதியும் பொறுப்பும் உடையவர்களே வாழ்த்த வேண்டும். வாழ்த்துபவர்கள் தங்களுக்கு பொருப்பு இருப்பதை உணர்ந்தவர்களாயிருக்க வேண்டும். தமிழை வாழ்த்தி விட்டு தமிழுக்கு இடுக்கண் ஏற்படும்போது கவலை அற்றவரும் எவ்வித உதவியும், ஆதரவும் அளிக்கத் தகுதி அற்றவர்களும் வாழ்த்திப் பயன் என்ன? ஆகையால் இங்கு வாழ்த்துதலுக்கு தகுதியைக் கருதாமல் மூப்பையும் நரையையும் கருதியே கட்டளை இடப்பட்டு விட்டேன் என்பதாகக் கருதுகிறேன்.

தமிழில் எந்த அளவும் பள்ளியில் பயின்றவனல்ல. தமிழைப்பற்றி தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன் மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனுமல்ல. தமிழுக்கு ஆக என்று எவ்வித தொண்டு புரிந்தவனுமல்ல.

தமிழுக்கு வாழ்த்துக்கூற தலைவரும், எனது நண்பருமான தோழர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்களும், தமிழ்ச்சங்க அமைச்சர் தோழர் கா. நமச்சிவாய முதலியாரும் மற்றும் அவர்கள் போன்ற பெரியார்களே உண்மையில் தகுதி உள்ளவர்கள்.

தலைவர் கல்யாணசுந்திர முதலியார் அவர்களின் தமிழ்த் தொண்டை நானே நன்றாய் அறிந்தவன். அவரது தமிழ்த்தொண்டுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் நானேயாவேன். நான் தமிழ் பேசுவதும் எழுதுவதும் தமிழைக்கொலை புரியும் மாதிரியானாலும் நான் பல பத்திரிகைகள் நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் தமிழ் பாஷையில் தேசபக்தன், நவசக்தி முதலிய பத்திரிகைகளின் தொண்டேயாகும். திரு.வி.க. முதலியார் அவர்களது தேசபக்தன் பத்திரிகைக்குப் பிறகே தமிழ் அரசியல் மேடைகளைக் கைப்பற்றிற்று என்று சொல்லுவேன். அரசியல் தலைவர்களையும் தமிழ் அடிமை கொண்டதற்குக் காரணமும் அவர்களது பத்திரிக்கைகளேயாகும்.

அப்பத்திரிகைகள் என்னைவிட மோசமானவர்களையும், தமிழ் பாஷையில் அரசியலை உணரவும், தமிழ்பேசவும் செய்துவிட்டதால் தமிழ் பாஷையைக் காதில் கேட்டால் தோஷம் எனக்கருதும் ஜாதியாரும் தமிழில் கலந்து கொள்ளவும், தமிழை வேஷத்துக்காவது மதிக்கவும் செய்துவிட்டது.

பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களது உழைப்பும் தமிழுக்கு மிகப்பெரியதொன்றும் தமிழர் மறக்க முடியாததுமான தொண்டாகும். பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களின் துணிந்த முயற்சி இல்லா திருக்குமானால் இன்று தமிழ்ப்பாட புத்தகங்கள் பெரிதும் ஆரியமத உபாக்கியானங்களாகவும், ஆரியமும் தமிழும் விபசாரித்தனம் செய்து பெற்ற பிள்ளைகள் போலவும் காணப்படும். ஆதலால் தான் தமிழுக்கு வாழ்த்துக்கூற, அப் பெரியார்களும் அவர்கள் போன்றார்களுமே தக்கார் என்று உரைத்தேன்.

தோழர்களே! எனக்கிட்ட கட்டளையில் ஏதேனும் ஒரு சிறு பாகமாவது நிறைவேற்றப்பட வேண்டுமானால் தமிழைப்பற்றிய எனது உள்ளக் கிடக்கையை உண்மையாய் எடுத்துரைத்தாக வேண்டும். ஆதலால் ஏதோ நான் சொல்வது பற்றி நீங்கள் தவறாகக் கருதாமல் என் கபடமற்ற தன்மையை அங்கீகரித்து உங்களுக்கு சரி என்று பட்டதை மாத்திரம் ஏற்று மற்றதை தள்ளி விடுங்கள். அதற்கு ஆக என் மீது கோபமுறாதீர்கள்.

~subhead

தமிழும் மதமும்

~shend

முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்கவேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளிவைக்கவேண்டும்.

மதசம்மந்தமற்ற ஒருவனுக்கு தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப் பட்டே இருக்கிறது.

~subhead

மதமும் இலக்கணமும்

~shend

உதாரணமாக “மக்கள் தேவர் நரகர் உயர்திணை” என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்ப ராமாயணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய் மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானங்கள் தானே அதிகமாயிருக்கின்றன?

~subhead

மேல்நாட்டு இலக்கியம்

~shend

மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகனே ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது?

இந்தியா வேண்டுமா? கம்ப ராமாயணம் வேண்டுமா என்றால் உண்மைத்தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான்.

மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்மந்தமன்னியில் கடவுள் சம்மந்தமன்னியில் பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.

கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? டாக்கூர் அவர்கள் கவிக்கு ஆக போற்றப்படலாம். ஆகவே மதம் கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப்பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு பாஷையும் அதன் இலக்கியங்களும் மேன்மையும் முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.

~subhead

மலத்தில் அரிசி பொறுக்கலாமா?

~shend

கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லு கிறார்கள். இருந்து என்ன பயன். ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அது தமிழ் மக்களை எவ்வளவு இழிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்ப ராமாயண இலக்கியத்தை படிப்பான். இன்று கம்ப ராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா இழிவு பரவிற்றா என்று நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

~subhead

கடவுளால் பாஷை உயராது

~shend

தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய பாஷை என்றோ, சொல்லி விடுவதாலும் தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்ததாலும், எலும்பை பெண்ணாக்கினதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்குகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும் துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியை சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.

~subhead

இந்திப் புரட்டு

~shend

இன்று, தமிழ்நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்திய பாஷை ஆக வேண்டு மென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள். கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தி மயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப்பண்டிதர்கள் இந்த அரசியல்வாதி களின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

~subhead

செத்த பாம்பு

~shend

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப்பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றி கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் இரண்டு பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேப்னெட் மெம்பர்கள் ஐகோர்ட் ஜட்ஜிகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றி கவலையும் இல்லை; தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

~subhead

தமிழபிமானம் தேசத்துரோகம்

~shend

தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத் துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றெல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் மீட்டிங்கிக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள்.

தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். தமிழ்பாஷையில், எழுத்தில் ஒரு சிறு மாற்றமோ முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சௌகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்.

~subhead

மாறுதல் அவசியம்

~shend

மேல்நாட்டு பாஷைகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன. எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்து கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் (குணீஞுடூடூடிணஞ்) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி பாஷைக்கு உண்டான எழுத்துக்களையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துக்களை யேற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்கு ஆக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள். காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழமுடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப்போட்டிக்கு தகுதியுடையவனாவான்.

தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல் ஒருவராவது அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்ல.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆனால் தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என் செய்வது? என்னைக் குறைகூறவோ திருத்தவோ முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லக்ஷியம் செய்யவில்லை.

ஆனாலும் நான் அம்முறையிலேயே இரண்டு மூன்று பத்திரிக்கைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக் கிறேன். இன்னம் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.

~subhead

பார்ப்பன ஆதிக்கம்

~shend

இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவும் அளித்தார்கள். கடைசியில் டாக்டர் மாசிலாமணி முதலியார் போன்றவர்களே அம்முயற்சியைப் பாழாக்கி அதைக் காப்பாற்றினார்கள்.

தலைவர் திரு.வி.க. அவர்களும் சிறிது நமக்கு உதவி செய்தார்கள் என்றாலும் வெளியில் வந்து செய்திருந்தால் அதில் நாம் ஆதிக்கம்பெற்று இருக்கலாம்.

~subhead

எங்கும் திருநாள்

~shend

எப்படி ஆனாலும் தமிழ் பாஷை உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது. அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. தலைவர் திரு.வி.க. அவர்களும் அமைச்சர் கா. நமச்சிவாய முதலியார் அவர்களும், இத்திருநாளை இம்மாதிரி ஒழிந்த நேரத் திருநாளாக இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும், ஊக்கத்தையும், உண்டாக்கும் திருநாளாகச் செய்ய வேண்டும். வருஷம் ஒவ்வொரு ஊரில் தலைமைத் திருநாள் நடைபெறச் செய்ய வேண்டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படி தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களை பரப்பவேண்டும். நமது பெண்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியையும், மாரி பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்ய வேண்டுகிறேன்.

கடைசியாக தோழர்களே தமிழ் முன்னேறும் என்பது பற்றி எனக்கு அறிகுறிகள் தென்பட்டுவிட்டன அதென்ன வென்றால் என்னை இங்கு உள்ளே விட உங்களுக்கு தைரியம் ஏற்பட்டுவிட்டது ஒன்றே போதுமான ஆதாரமாகும்.

அன்றியும் இந்தப்பெருமை என்னையும் ஒருபடி உயர்த்திவிட்டது. என்னவென்றால் தமிழ்ப் பண்டிதர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் படியான பெருமை ஏற்பட்டுவிட்டதல்லவா? நான் எவ்வளவு தமிழ் அறியாதவனாய் இருந்தாலும் தமிழில் எனக்கு உள்ள ஆசை உங்கள் யாரையும்விட குறைந்ததல்ல என்பதை தெரிவித்துக் கொண்டு, அந்த ஆசையின் மயக்கத்தால் நான் பேசியவற்றுள் ஏதும் குற்றம் குறைகள் இருப்பின் அவற்றை மன்னித்துக் களைந்துவிட்டு சரி என்று பட்டவையை மாத்திரம் ஏற்று அதற்காவன செய்ய வேண்டிக்கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

குறிப்பு: 13011936 ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த்திருநாள் விழாவில் ஆற்றிய சொற்பொழிவு

குடி அரசு சொற்பொழிவு 26.01.1936

 

You may also like...