மதங்களின் சக்தி

 

இந்து இந்தியாவானது 33 கோடி தேவர்களைக் (33கோடி இந்துக்களைக்) கொண்டிருந்த காலத்திலும் இந்தியாவைக் காப்பாற்றிக் கொள்ள அதற்குச் சக்தி இல்லாமல் போனதோடு இந்து கோவில்கள், அதிலுள்ள இந்துக் கடவுள்கள் எல்லாம் அன்னிய மதக்காரர்களால் இடிக்கவும் உடைக்கவும் கொள்ளை இடவும் பட்டன.

அவ்வளவு மாத்திரம் தானா?

இந்து இந்தியா ஒழிந்த பிறகு இந்து முஸ்லீம் இந்தியாவாகி இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இந்தியா தாய்நாடாக ஆகி இந்துக்கள் கோவில்களும் முஸ்லீம்கள் கோவில்களும் பதினாயிரக்கணக்காக ஏற்பட்ட பிறகும் இந்தியாவைக் காப்பாற்ற இரண்டு மதத்திற்கும் சக்தியில்லாமல் போய், ஒரு சிறிய கிறிஸ்து மத சமூகத்தார் கைக்குப் போய்விட்டது.  இரு மத மக்களும் ஒரு சிறு மக்களைக்கொண்ட தேச மத கூட்டத்துக்கு “”அடிமைகளாய்” இருக்கிறார்கள்.

இது மாத்திரம் தானா?

மதத்தலைவர் போன்ற கிலாபத்துத் தலைவர் ஆட்சியில் இருந்த துருக்கி தேசமானது உயிருக்கு ஊஞ்சலாடி மதத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை;  மதம் அவரவர் இஷ்டத்தைப் பொறுத்தது என்ற பகுத்தறிவு வாதியின் ஆதிக்கத்தாலேயே காப்பாற்றப்பட்டது.

தோட்டத்தில் பகுதி கிணறு என்கின்றபடி, ஊரில் பகுதி கிறிஸ்தவர் கோவில்களாய் இருந்து ஜனங்களில் பகுதி பாதிரிகளாய் இருந்த ரஷியதேசம் இன்று நாஸ்திகர்கள் இடம் சிக்கிக் கொண்ட பிரகுதான் வெகு சுகப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

ஆகவே மதங்களின் வலிமைகளைப்பற்றி பரீக்ஷிப்பதற்கு வேறு ஏதோ பரீøக்ஷ இருக்கின்றதுபோல் காணப்படுகிறது. அது எதுவாய் இருக்கலாமென்றால்,

எந்த மதக்காரரும் இந்த உலகத்தில் இந்தச் சரீரத்தோடு ஒரு பலனும் அடையமுடியாமல் இந்த உலகத்தையும் இந்தச் சடலத்தையும் விட்ட பிறகு மற்றொரு உலகத்துக்குப் போய் சுதந்திரத்தோடு மோட்சத்தில் இருக்கலாம் என்பதாகும்.

ஆனால் அறிவில்லாத மக்கள் மதங்களைப்பற்றி இந்த உலகத்தில் பயனை எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் அதைவிட மூட மக்கள் இந்த உலகத்திலேயே மதத்துக்குப் பயன் உண்டு என்று சமாதானம் சொல்ல வருகிறார்களே அதுதான் அதிசயமாய் இருக்கிறது.

பகுத்தறிவு (மா.இ.)  கட்டுரை  அக்டோபர் 1935

 

திதி

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப்பற்றி 3 விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

  1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா மற்றொரு சரீரத்தைப் பற்றிக் கொண்டுதான் இந்த சரீரத்தை விடுவதாக.
  2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்த உடன் பிதிர்லோகத்தை அடைந்து அங்கு இருப்பதாக. (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ)
  3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோக்ஷத்திலோ, நரகத்திலோ பலன் அனுபவித்துக்கொண்டிருப்பதாக.

ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்?  எதை உத்தேசித்துத் திதி கொடுப்பது?

இது தவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும் சரீரம் உருவம் குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே. சரீரம் உருவம் குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்கமாறு ஆகியவை எப்படிப் போய்ச்சேரும். அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

பகுத்தறிவு (மா.இ.)  கட்டுரை  அக்டோபர் 1935

 

பெண்களுக்கு உரிமை

கொடுக்கலாமா?

தோழர்களே! இதுவரை பல தோழர்கள் பெண்ணுரிமையைப் பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் பேசியவைகளைக் கேட்டீர்கள். நான் தலைமை வகித்ததற்கு ஆக முடிவில் இதைப் பற்றி ஏதாவது இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.

நான் சொல்லுவது உங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறாய் இருந்தாலும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. இந்தக் கூட்டம் வாக்குவாதக் கூட்டமானதால் பலவித அபிப்பிராயங்களையும் தெரிய வேண்டிப் பேசுவதே ஒழிய வேறில்லை. யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு சுருதி, யுக்தி, அனுபவம் என்கின்ற மூன்று தன்மையிலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

தோழர்களே இன்று பெண்ணுரிமையைப் பற்றிப் பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்.

இதைப் பற்றி பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ முடிவோ நமக்கு ஆதாரமா? அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும்.

ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவு கட்டிவிட்டது. அம்முடிவுகள் வேத முடிவு,  கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது.

கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும் முகமதியர்களுடைய வேதத்திலும் இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்கு சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம்.

ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவுக்கு வருவோமானால் அம்முடிவு நமது மதவேத கட்டளைக்கு விரோதமாய் இருந்தால் நாம் அவ்வேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளை கைவிட்டு விடுவதா என்பதை முதலில் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இரங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய்விடாதா?

முன் பேசிய சிலர் பெண்கள் சுதந்திர விஷயம் முன்னமேயே முடிவு கட்டப்பட்டது என்று சொன்னார். மற்றொருவர் நம் பெரியோர்கள் நன்றாய் யோசித்துச் செய்திருக்கிறதாகச் சொன்னார்.

ஆகையால் இம்மாதிரியான பெரியதொரு சீர்திருத்தவாதிகள் உண்மை சீர்திருத்தவாதிகளானால் மேல்கண்ட பிரச்சினையை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

நிற்க, ஆணும் பெண்ணும் மனிதர்கள் தான். உருவு பேதம் மனிதத் தன்மையைப் பாதிக்கக்கூடியதல்ல.

மனித வர்க்கத்தில் புத்திக் குறைவு, பலக் குறைவு என்பது இயற்கையில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் ஒன்றுபோலவேதான் இருக்கிறது. அப்பியாசத்தால் இருபாலரும் ஒன்று போலவேதான் அடைகின்றார்கள்.

ஆண்களில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு பலவீனமானவர்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு கெட்ட குணமுடையவர்கள் இருக்கிறார்களோ? அதுபோல்தான் பெண்களிலும் இருக்கலாம்.

மேல் கொண்டு ஏதாவது இருந்தால் அது செயர்க்கையால் அதாவது ஆண்களாகிய நாம் அவர்களை குழந்தைப் பிராய முதல் அடிமைப்படுத்தி கல்வியில்லாமல் உலக ஞானம் அறிய இடம் இல்லாமல் அடக்கி வைத்துவிட்டதால் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை. தாசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வியாபாரத்தில் எவ்வளவு கெட்டிக்காரர்களாய் இருந்து எவ்வளவு ஆண்களை ஏமாற்றி எவ்வளவு பணம் சம்பாதித்து எப்படி நிர்வகித்து வருகிறார்கள் பாருங்கள்.

ஆண்களில் எழுத்து வாசனை அற்றவர்களுடையவும் சமத்துவ மில்லாமல் அடக்கி வைத்திருக்கும் மிருகங்களுக்கு ஒப்பான சில தாழ்த்தப்பட்ட மக்களுடையவும் அறிவு, வீரம், பராக்கிரமம் எல்லாம் எப்படி இருக்கிறது?

வியாபாரம் செய்யும் பெண்களும் உத்தியோகம் பார்க்கும் பெண்களும் இன்று அவரவர்கள் தொழில்களை சரியாய் செய்யவில்லையா? உபாத்தியாயர் பெண்கள் தங்கள் உத்தியோகத்தை சரியாய் செய்ய வில்லையா? எந்த விதத்தில் அவர்கள் தகுதி அற்றவர்கள் ஆவார்கள்?

ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஆண்களாக இருந்தும் ஜெயிலரையும் ஜெயில் சூப்ரண்டையும் கண்டால் நடுங்குகிறார்களே, அவர்களுக்கு ஆண்மை வீரம் பராக்கிரமம் சுயபுத்தி எல்லாம் எங்கு போய்விட்டது?

இந்தியாவில் கிறிஸ்தவப் பெண்கள் முக்காடிட்டு வைக்கப்பட்டிருக் கிறார்கள்  முஸ்லீம் பெண்கள் உறைபோட்டு மூடி வைத்திருக்கிறார்கள். இந்துப் பெண்கள் கல்வி இல்லாமல் சொத்து உரிமை இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு இன்று சுதந்திரம் கொடுத்தால் அதை வகிக்க அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டி வரும். அதுபோலவே இன்று எல்லா ஆண்களுக்கும் நிர்வாக சபை மெம்பர் பதவி, மந்திரி பதவி கொடுத்தால் ஆண்கள் அருகதை அற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டி வரும்  எல்லோருக்கும் படிப்பு கொடுக்க வேண்டும். உலக விஷயங்களைக் கற்கத் தாராளமாய் வசதி அளிக்க வேண்டும்  18 வயது 20 வயது ஆன பிறகே கல்யாணம் செய்து வாழ்க்கையில் ஈடுபடச் செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தான் சுகமாய் வாழத்தகுந்த ஒரு தொழில் அல்லது ஒரு மார்க்கத்துக்கு தயார் செய்யப்பட வேண்டும். தன் புருஷனை வயது வந்த பிறகு தானே தெரிந்தெடுத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

இவை செய்துவிட்டால் நீங்கள் எந்தப் பெண்ணையும் தேடிப் போய் சுதந்திரம் கொடுக்க அலைய வேண்டாம். பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கலாமா வேண்டாமா என்று இம் மாதிரிகூட்டம் போட்டு வாக்குவாதம் செய்ய வேண்டாம். தானாகவே பெற்று விடுவார்கள்.

பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் வீட்டு வேலை யார் பார்ப்பது என்று யாரும் கவலைப்படவேண்டியதில்லை.

இன்றைய வீட்டு வேலைகள் என்பது மக்களின் முட்டாள்தனத்தால் ஏற்பட்டதே ஒழிய அவை எல்லாம் இயற்கையாய் உள்ள வேலை அல்ல.

இன்றைய வீட்டு வேலை இனி 20 வருஷத்துக்குள் முக்கால்வாசி குறைந்து போகும்  உலக முற்போக்கு வீட்டு வேலைகளைக் குறைத்து வருகிறது.

நம்முடைய அருத்தமற்ற பேராசை சுயநலங்களே நமக்கு இவ்வளவு வீட்டு வேலைகளை ஏற்படுத்திக் கொண்டது.

கற்பு கெட்டுப் போகும் என்கின்ற கவலை எவரும் அடைய வேண்டியதில்லை. பெண்கள் கற்பு பெண்களுக்கே சேர்ந்ததே ஒழிய ஆண்களுக்கு அடமானம் வைக்கப்பட்டதல்ல  கற்பு என்பது எதுவானாலும் அது தனிப்பட்ட நபரைச் சேர்ந்ததாகும். கற்பு கெடுவதால் ஏற்பட்ட தெய்வத் தண்டனையை அவர்கள் அடைவார்கள். அதற்காக மற்றொருவர் அடையப் போவதில்லை. இது தானே மதவாதிகள் ஆஸ்திகர்கள் சித்தாந்தம்  ஆதலால் பெண் பாவத்துக்குப் போகிறாளே என்று ஆண் பரிதாபப்பட வேண்டாம். பெண் அடிமை அல்ல; அவளுக்கு நாம் எஜமானல்ல, கார்டியன் அல்ல என்று எண்ணிக் கொள்ள வேண்டும். பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ள தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய ஆண் காவல் கூடாது.  இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

கற்பு கெடுதலால் நோய் வரும் என்றால் இருவருக்குமே தான் வருமே ஒழிய ஒருவருக்கு மாத்திரம் வராது. ஆதலால் பெண்களைப் படிக்க வைத்து விட்டால் தங்கள் கற்பு மாத்திரம் அல்லாமல் ஆண்கள் கற்பையும் காப்பாற்றக்கூடிய தன்மை வந்துவிடும்.

ஆகவே தோழர்களான நீங்கள் நன்றாய் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்தப்படி உங்கள் தங்கை, குழந்தை ஆகியவர்கள் விஷயத்தில் நடவுங்கள்.

குறிப்பு:            18.10.1935  ஆம்  நாள்  ஈரோடு  லண்டன்  மிஷின்  கம்யூனிட்டி  டிரெய்னிங்  பள்ளிக்கூட  மாணவர்கள்  சங்கத்தின்  சார்பாக  பள்ளிக்கூட  வகுப்பு  மண்டபத்தில்  நடைபெற்ற  “”பெண்  உரிமை  அவசியமா?”  விவாதத்தில்  தலைமையேற்று  ஆற்றிய  உரை.

குடி அரசு  சொற்பொழிவு  03.11.1935

You may also like...