கு.ஐ.கீல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பாராட்டுகிறோம்

 

 

இன்றைய அரசியல் கிளர்ச்சியானது “”சுயராஜ்ஜியம் சம்பாதிக்க” என்று சொல்லிக் கொண்டு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஒழிக்கவே பாடுபடுகின்றது என்பதை, நாம் எவ்வளவோ தடவை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது.

அதி தீவிர காங்கிரஸ் வாதியாகவும், அதி தீவிர தேசீய வாதியாகவும் இருந்த டாக்டர் நாயர், சர்.பி. தியாகராயர் ஆகியவர்களின் முயற்சியே ஜஸ்டிஸ் கட்சி தோன்றலுக்குக் காரணமாகும்.

அக்கட்சி கல்வியில், அறிவில், உத்தியோகங்களில் பிரதிநிதித்துவத்தில் பிற்பட்டும், ஒதுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் கிடந்த மக்களுக்குப் பாடுபடுவதை முக்கிய கொள்கையாய்க் கொண்டதால், அதற்குப் பார்ப்பன ரல்லாதார்கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.

இந்தக் கட்சியின் முன்னேற்றமும், இம் முயற்சியின் வெற்றியும் வெகுகாலமாய்க் கல்வியிலும், உத்தியோகத்திலும், பிரதிநிதித்துவத்திலும் முன் அணியில் இருந்த பார்ப்பனர்களுக்கும், அவர்களது ஆதிக்கத்துக்கும் சிறிது தடையும், ஏமாற்றமும் செய்வதாக இருந்ததால், ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுடைய எதிர்ப்புக்கும், துவேஷத்துக்கும், விஷமப் பிரசாரத் துக்கும் ஆளாக வேண்டி இருந்ததோடு, பார்ப்பனர்களின் சூட்சியானது, பார்ப்பனரல்லாதாருக்குள்ளும் பிரிவினையையும், கட்சி பேதங்களையும் உண்டாக்கித் தொல்லைப்படுத்த வேண்டியதாகிவிட்டது.

எது எப்படி இருந்த போதிலும், பல காரணங்களால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இன்று சென்னை அரசாங்கத்தில் ஒரு அளவுக்காவது நிலைநிறுத்தப்பட்டு விட்டதுடன், அது இந்திய அரசாங்கத்தையும் எட்டிப் பார்க்கும்படி செய்துவிட்டது.

இந்த நிலையானது, இனி எப்போதாவது ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கம் (ஒழியாது) ஒழிந்து விட்டாலும்கூட, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அவசியம் என்பதை அரசாங்கத்தார் உணர்ந்து விட்டார்கள். ஆனதால் அக்கொள்கை இனி மாற்றப்படுவது என்பது சுலபத்தில் சிந்திக்க முடியாத காரியமாகிவிட்டது.

பிரதிநிதித்துவங்களிலும், உத்தியோகங்களிலும் இன்று இருந்து வரும் விகிதாச்சார எண்ணிக்கை பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மிகவும் போராததாய் இருக்கின்றது என்றாலும், அந்தக் கொள்கை பார்லிமெண்ட் வரை ஒப்புக் கொள்ளப்பட்டாய்விட்டது என்பது எவரும் மகிழ்ச்சியடையக் கூடிய செய்தியேயாகும்.

அந்த முறை இந்திய கவர்ன்மெண்டிலும், ஐ.சி.எஸ். முதலிய பெரிய இந்திய உத்தியோகத்திலும் கையாளப்பட வேண்டும் என்கின்ற கிளர்ச்சியும், இப்பொழுது வழுவடைந்து அது அரசாங்கத்தாரால் கவனிக்கப்படப் போகின்றது என்கின்ற சேதியும் மகிழ்ச்சியைத் தரத் தக்கதாகும்.

ஆனால் நமது மாகாணத்துக்குள்ளாகவே இருந்து வரும் ஜுடிஷியல் இலாக்கா அதாவது முனிசீப்பு, ஜட்ஜி முதலிய உத்தியோகங்களில் இந்த முறையானது சரியாய்க் கவனிக்கப்படாமலும் நமது மாகாணத்தில் உள்ள ரயில்வே இலாக்காக்களில் இதுவரை சிறிதும் கவனிக்கப்படாமலும் இருந்து வந்தது ஒரு பெருங் குறையாகவும், மிகுதியும் வருந்தத்தக்க விஷயமாகவும் இருந்து வந்தது.

ஹைகோர்ட்டு ஆட்சிக்குள்பட்ட இலாக்காக்களில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அனுஷ்டிக்கப்படாததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியின் பலமற்ற தன்மையேயாகும்.

ஜஸ்டிஸ் கட்சி பலமுள்ளதாக இருந்து அக்கட்சித் தலைவர்கள் பொது நலத்தைவிட, சுயநலத்தைப் பெரிதாக எண்ணாதவர்களாய் இருந்து, தங்களது சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்திருப்பார்களேயானால் 4, 5 வருஷங்களுக்கு முன்பாகவே, ஹைக்கோர்ட் இலாக்காவிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அமுலுக்கு வந்திருக்கும்.

கட்சிக்குப் பலமும், ஒற்றுமையும் இல்லாதிருந்ததால், ஹைகோர்ட்டாரை வகுப்புவாரி முறையைக் கையாளும்படி கட்டாயப்படுத்தத் தைரியமில்லாமல் போய்விட்டது.

என்றாலும் இப்போது பொது ஜனங்களுடைய உணர்ச்சியானது அது விஷயத்தில் பலப்பட்டுவிட்டதாலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இனி யாராலும் தடுக்க முடியாத மாதிரியில் செல்வாக்குப் பெற்றுவிட்டதாலும், இனி அது யாராலும் அசைக்க முடியாது என்கின்ற நிலைபெற்று விட்டதாலும், இப்போது ஹைகோர்ட்டாரையும் இந்த முறையைக் கைப்பற்றித் தீரவேண்டும் என்கின்ற நிலையில் கொண்டு வந்து விட்டுவிட்டது.

இவ்வளவோடு நின்றுவிடாமல், இப்போது தென்னிந்திய ரயில்வே கம்பெனியாரையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையைக் கையாண்டு தீரும்படியான நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டது.

இந்தக் காரியத்துக்கு ஜஸ்டிஸ் கட்சி உட்பட சுயமரியாதை இயக்கமும் அதன் தலைவர் சர்.ஆர்.கே. சண்முகம், ஓ.இ.ஐ.உ., போன்றவர்களும் எவ்வளவு தூரம் பொருப்பாளிகள் என்பதை பொது ஜனங்களில் அனேகர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.

தென் இந்தியப் பார்ப்பனர்கள், தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் உள்பட ஒவ்வொருவருக்கும் சர். ஷண்முகத்தின் மீதும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும், ஜஸ்டிஸ் கட்சி மீதும் இவ்வளவு ஆத்திரமும், துவேஷமும் வரக் காரணம் என்ன என்பதைக் கூர்மையாகப் பார்த்தால், அவை செய்துள்ள காரியம் எவ்வளவு என்பது விளங்காமல் போகாது.

ஆகவே இன்று கு.ஐ.கீ. ரயில்வே கம்பெனியார், தங்கள் கம்பெனி உத்தியோகத்துக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை முறையை அனுஷ்டித்து, அந்தப்படி உத்தியோகம் வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

இரண்டொரு மாதத்துக்குமுன் எஸ்.ஐ.ஆர். கம்பெனிக்குச் சுமார் 250 உத்தியோகம் தேவை இருந்ததில், சுமார் 150 உத்தியோகம் வரை பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கும், மற்றவை பெரிதும் முகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் ஆகியவர்களுக்கும் வழங்கிவிட்டு சுமார்  20 உத்தியோகங்களுக்கும் குறைவாகவே பார்ப்பனர்களுக்கும் வழங்கி இருக்கிறார்கள்.

இதன் பயனாய் பார்ப்பனர் பெரியதொரு கிளர்ச்சியையும், சூட்சியையும் செய்து, இந்த முறையை ஒழிக்கும்படியும், இதற்கு ஆக அதாவது உத்தியோகம் தெரிந்தெடுப்பதற்கு ஆக, ரயில்வே கம்பெனி டைரக்டர்களால் ஏற்படுத்தி இருக்கும் ஸ்டாப் செலக்ஷன் போர்ட் என்பதை கலைத்து விடும் படிக்கும் பெரியதொரு முயற்சி செய்தார்கள். பெரிய அதிகாரிகளை பல வழிகளில் சுவாதினப்படுத்தி வெற்றி பெறப் பார்த்தார்கள்.

அதற்கு எதிர்ப்பாக திருச்சி தோழர்கள் டி.எம். நாராயணசாமி பிள்ளை, கலிப்புல்லா சாயபு, பள்ளத்தூர் அருணாச்சலம், டி.பி. வேதாச்சலம் முதலியவர்கள் அம்முயற்சியைக் கண்டித்து கண்டனக் கூட்டம் போட்டு தீர்மானங்கள் அனுப்பி கிளர்ச்சி செய்ததும் பத்திரிகையில் பார்த்திருக்கலாம். இதன் பயனாய் பார்ப்பன முயற்சி வெற்றி பெறாமல் போய்,  கடைசியாக ஒன்றும் முடியாமல் நாம் விரும்பும் வகுப்புவாரி முறை நிலைத்துவிட்டதோடு மாத்திரமல்லாமல், இனவாரியாக இன்ன இன்ன வகுப்பில், இவ்வளவு இவ்வளவு எண்ணிக்கை வேண்டும் என்பதாக, ரயில்வே மேல் அதிகாரிகள் விளம்பரமும் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

அதாவது “”தென் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு 84 கிளார்க்குகள் வேண்டியிருக்கிறது.

அவற்றுள் பார்ப்பனரல்லாதார் 42

முகமதியர்  17

இந்திய கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்,

ஐரோப்பியர் ஆகியவர்கள்             17

தீண்டப்படாத வகுப்பார் உள்பட மற்ற வகுப்பார்      8

84

ஆக 84 பேர்களுக்கு விண்ணப்பங்கள் வேண்டியிருக்கிறது” என்று விளம்பரம் செய்திருக்கிறாõகள். (இது 11.06.35ந் தேதி ஜஸ்டிஸ் பத்திரிகையில் இருக்கிறது)

“”ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது? சுமயரியாதை இயக்கம் என்ன செய்தது” என்று கேட்பவர்கள், இதைச் சிறிது கவனித்துப் பார்த்துவிட்டு அப்புறம் கேட்கட்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

இந்த நாட்டில் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி தங்களது சகல சவுகரியத்தையும் தியாகம் செய்து, தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவழித்தும் படிக்க வைத்த பிள்ளைகள், பார்ப்பனரல்லாதார், முகமதியர், கிறிஸ்தவர் முதலிய வகுப்புகளில் எத்தனை பிள்ளைகள் இன்று வேலை இல்லாமல், குடும்பத்தோடு சோற்றுக்குத் திண்டாடும் நிலையில் இருந்து வருகிறார்கள் என்பதும், அவர்கள் வாசல்படிகள் தோறும் வீடு தவறாமல் நுழைந்து தங்கள் கால÷க்ஷபத்துக்கு வேலை வேண்டுமென்று எந்தெந்த மாதிரியில் யார் யாரை, எப்படி எப்படிப் பல்லைக் கெஞ்சுகிறார்கள் என்பதும், யாராவது உணர்ந்தால், அவர்கள் அத்தனை பேர்களையும் இந்த மாதிரியான ஏற்பாடுகளை நன்றி அறிதலோடு வரவேற்கச் சொல்லுமே தவிர நன்றி விசுவாசம் யோக்கியப் பொருப்பு இல்லாமல் அதற்கு ஆக வேலை செய்யும் தலைவர்களை இழித்தன்மையாய்க் கருதாமலும், பேசாமலும் இருக்கும்படியும் செய்யும்.

அதில்லாமல், தேசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பனர் களுக்கு அடிமையாகி, அயோக்கியத்தனமான தேசாபிமானப் பட்டம் பெற்று மானத்தையும், தங்கள் சமூகத்தையும் விற்று, சமூக இளைஞர்களை பலி கொடுத்து வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்டங்களுக்கு இதன் அருமை தெரியாது என்பதோடு, தெரிந்திருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பயந்து அவர்களோடு சேர்ந்து கொண்டே “”தேசம் பெரிதா, உத்தியோகம் பெரிதா?” என்று அர்த்தமற்றதும், முட்டாள்தனமானதும், சூட்சியும், விஷமமும் நிறைந்ததுமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு திரியத்தான் முடியும் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ஆகவே எஸ்.ஐ.ஆர். ரயில்வே உத்தியோகத்தில், இவ்வித வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மேற்பட்டதை நாம் மகிழ்ச்சியோடு பாராட்டுவதோடு, அதற்கு ஆதரவாய் இருந்த பிரமுகர்களையும் ரயில்வே இலாக்காவிலேயே இருந்து கொண்டு இதற்காகப் பெரிதும் பாடுபட்டு எவ்வளவோ தொல்லைகளைச் சமாளித்துக் கொண்டு இந்த வெற்றியை உண்டாக்கிய பெரியார்களையும், சிறப்பாகவும், குறிப்பாகவும் ஸ்டாப் செலக்ஷன் போர்டு செக்ரட்டரி தோழர் பி.கோவிந்தராஜ் அவர்களையும் ரயில்வே கம்பெனி ஏஜெண்டையும், டைரக்டர்களையும், மனமார  வாயார  கையார ஏற்றிப் போற்றி வாழ்த்துகின்றோம்.

குடி அரசு  தலையங்கம்  23.06.1935

You may also like...