ஜாதியை ஒழிப்பதால் மதம் அழிந்து விடுமா?

 

ஓர் சமதர்மி

இந்துக்களுக்குள் இன்றைய பழக்கங்களில் உள்ள ஜாதிப் பிரிவுகளுக்கு இந்து மதத்தில் ஏதாவது ஆதாரமிருக்கின்றதா என்று பார்ப்போமானால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்து வேதத்தில் பிராம்மணன் பிராமணரல்லாதார் என்கின்ற ஜாதிகள் தான் காணப்படுகின்றது. ருக் வேதத்தில் ஓரிடத்தில் நான்கு சாதிகள் கூறப்பட்டிருப்பதாகவும், அதுவும் இடையே பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

அந்த இரண்டு ஜாதியும் எப்படித் தெரிகின்றது என்று பார்ப்போமே யானால் பிராமணர்கள் இந்திரன் முதலிய தேவர்களைச் செய்யும் பிரார்த்தனைகளில் தஸ்யுகள் என்ற ஒரு சமூகம் அந்த பிராமணர்களுக்கு விரோதமாய் இருந்து அவர்களைத் துன்பப்படுத்துவதாகவும் அவர்கள் பிராமணர்களுடைய சுகபோகங்களுக்கு விரோதமாய் இருப்பதாகவும், ஆதலால் அந்த தஸ்யூகளை அழிக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதே பெரிதும் அந்தப் பிரார்த்தனையில் இருந்து வருவதால் அப்பிரார்த்தனைகளே வேதத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதால் வேத காலத்திலும் வேத ஆதாரத்திலும் இந்தியாவில் ஆரியர், ஆரியர் அல்லாதார் என்கின்ற இரண்டு ஜாதிகள் மாத்திரமே இருந்ததாக விளங்குகின்றது.

ஆகவே ஜாதிப் பிரிவுகளுக்கு ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமானால் அவை மனுதர்ம சாஸ்திரம் பராசர் ஸ்மிருதி ஆகிய பார்ப்பனர்களால் செய்யப்பட்ட ஆதாரங்களே முற்பட்டவை என்னலாம்.

அவற்றிலும்கூட பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் அதாவது குரு, அரசன், முதலாளி, தொழிலாளி என்னப்பட்ட நான்கு ஜாதிகள்தான் காணப்படுகின்றனவே தவிர இன்றுள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகளுக்கு மனு தர்ம சாஸ்திரத்திலும் ஸ்மிருதியிலும் ஆதாரங்கள் காணக்கிடைப்பதில்லை.

அவைகளில் வேறு சில ஜாதிப் பிரிவுகளும் காணப்படுகின்றனவே என்று சொல்லப்படுமானால் அவை முற்கூறிய பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்கின்றதான 4 பிரிவுகளும் கலந்து போகாமல் இருப்பதற்கும் கட்டுப்பாடாக இருப்பதற்கும், கலப்படம் ஏற்படுத்துவதையும், ஏற்படுவதையும் மக்கள் வெறுக்கவும் ஆன பந்தோபஸ்துக்காக கலப்படத்தினால் பிறந்த மக்களுக்கு பலவகை இழிவான பெயர்கள் கற்பிக்க ஏற்படுத்தின முறையில் வேறு சில ஜாதிப் பெயர்கள் காணப்படலாம்.

ஆனால், அவற்றிற்கும் இன்றுள்ள ஜாதிப் பிரிவுகளுக்கும் சம்மந்த மில்லை. இது தவிர வேறு ஜாதிகள் இருப்பதாகக் காணப்படுமானால் அவை தேசம் நிலம் பாஷை ஆகியவைகளைக் குறிக்கும் முறையில் இருக்கலாமே ஒழிய பிறவியைக் குறிக்கும் முறையில் காணப்படுவது அதிசயமாகவே இருக்கும்.

மற்றப்படி இன்று பிரத்தியட்சத்தில் பழக்கத்தில் உள்ள ஜாதி பாகுபாடுகளுக்கு எங்காவது ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்போமானால் அவை புராணங்களில் தான் காணப்படுகின்றன.

புராணங்கள் என்று சொல்லப்பட்டவைகள் பெரிதும் கற்பனைகள் என்பதும் அவை ஏற்படுத்தப்பட்டதின் கருத்தெல்லாம் பார்ப்பனர்களுக்கு உயர்வைக் கற்பிக்கவும் அவர்களுக்கு மற்ற மக்கள் மீது எப்பொழுதும் ஆதிக்கம் இருந்து வரவும் பொருளாதாரத் துறையில் பார்ப்பனர்களுக்கு பாடுபடாமல் செல்வம் வந்து சேரவுமான மார்க்கம் ஏற்படவும் கருத்துக் கொண்டேயாகும்.

இந்தக் கருத்துக்கள் புராணக் கற்பனையில் மாத்திரமல்லாமல் ஸ்மிருதிகள் ஏற்படுத்துவதிலும் இருந்திருக்கின்றன என்பதற்கு மனு நூலில் ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன.

உதாரணமாக “”பிராமணன் கொலைக் குற்றம் செய்தால் அவன் தலை மயிரை மாத்திரம் சிரைத்து விட வேண்டுமே ஒழிய வேறு தண்டனை எதுவும் விதிக்கக் கூடாது. ஒரு பிராமணன் ஒரு சூத்திரனைக் கொன்று விட்டால் அதற்கு ஒரு தவளையையோ ஒரு காகத்தையோ கொன்று விட்டதற்குச் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் செய்தால் போதும்.”

“”பிராமணன் ஞானியாய் இருந்தாலும் மூடனாய் இருந்தாலும் அவன் மேலான தெய்வத்திற் கொப்பாவான். பிராமணன் அயோக்கியனாய் இருந்தாலும் அவன் பூஜிக்கப்பட வேண்டியவன்.”

“”எவ்வளவு துராசாரமுள்ள பிராமணனாய் இருந்தாலும் அவன் அரசனுக்குச் சமமானவனுடன் அரசன் செய்ய வேண்டிய தீர்ப்புகளை யெல்லாம் செய்யலாம்.”

“”சூத்திரன் விலை கொடுத்து வாங்கப்பட்டவனாகையாலும் அவன் எப்பொழுதும் பிராமணனுக்கு அடிமையாகையால் அவர்களிடம் பிராமணர் கூலி கொடாமலே வேலை வாங்கலாம்.”

“”ஏனெனில் கடவுள் பிராமணனுக்கு வேலை செய்வதற்காகவே சூத்திரனை படைத்திருக்கிறார்.”

“”சூத்திரனுடைய பொருள்களை பிராமணன் தைரியமாகப் பற்றிக் கொள்ளலாம். சூத்திரன் அடிமையாதலால் அடிமைக்கு சொத்து வைத்திருக்க பாத்தியமில்லை.”

“”சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை துண்டித்துவிட வேண்டும்.”

“”சூத்திரன் பிராமணனுடைய பெயரையாவது ஜாதியையாவது குற்றம் சொன்னால் அவன் வாயில் 10 விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை செலுத்த வேண்டும். சூத்திரன் பிராமணனை அடிக்க கை தூக்கினால் கையை வெட்டிவிட வேண்டும்.”

“”கால் தூக்கினால் காலை வெட்டிவிட வேண்டும்.”

“”சூத்திரன் பிராமணர்களுக்கு அவர்களுடைய கடமையை போதிக்க வந்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணையைக் காய்ச்சி ஊற்றி விட வேண்டும்.”

“”சூத்திரன் பிராமணனோடு சமமாக உட்கார எத்தனித்தால் இடுப்புக்கு கீழ் சூடு போட்டு தேசத்தை விட்டுத்  துரத்திவிட வேண்டும். அல்லது அவனுடைய பின் பாகத்தை வெட்டி விட வேண்டும்.”

இந்தப்படியான விதிகளும், இன்னும் இது போன்ற ஆயிரக் கணக்கான விதிகளும் பிராமணனுக்கு உயர்வைக் கொடுத்தும் மற்ற ஜாதிக்கு தாழ்மையுடன் இழிவையும் கொடுத்து விதிகள் உண்டாக்கி “”தர்மநூல்” எழுதப்பட்டிருக்கின்றன.

புராணங்களில் இதைவிட மோசமாக பறையன், சக்கிலியன், பள்ளன் முதலிய ஜாதிகளை கற்பித்தும் அவர்களைத் தொடக் கூடாது என்றும், பார்க்கக்கூடாது என்றும், நிழல் படக் கூடாது என்றும் வரிசைக் கிரமமாக ஒன்றுக்கொன்று மேல் கீழ் என்கின்ற முறையில் பல ஜாதிகளைக் கற்பித்தும் மற்றும் திருடுவதற்கு ஒரு ஜாதியும் விவசாரிதனத்துக்கு ஒரு ஜாதியும், கொலைத் தொழில் செய்ய ஒரு ஜாதியும் இப்படியாக பல ஜாதிகளும் இன்னும் அனேக ஜாதிகளையும் கற்பிக்க ஆதாரமாய் இருந்தது புராணங்களேயாகும்.

இன்றைய நிலையில் மக்கள் பெரும் பகுதியோர் புராணங்களை கற்பனை என்றும் அவைகளை நம்பக் கூடாது என்றும் சொல்லி வருவதும், அந்தப் பிடிகளினின்றும் விடுபட்டு வருவதும் வெகு சாதாரணமான காலமாகவும் ஆகிவிட்டது. இதை இனி யாராலும் தடுக்க முடியாதென்பதும் நிரூபிக்கப்பட்டும் வருகின்றது. ஆகவே இந்தக் கற்பனையான இடைக்காலத்தில் தோன்றிய ஜாதி அழிந்து போவதனால் உண்மையான மதத்திற்கு எந்த ஆபத்தும் வந்துவிடப் போவதில்லை என்று துணிந்து சொல்லலாம்.

ஆனால் பார்ப்பனர்கள் சனாதனிகள், ஜாதி வகுப்புக் கிரமங்களில் கை வைத்தால் மதம் அடியோடு ஒழிந்துவிடும் என்றும் ஜாதியில் கை வைப்பது மதத்தில் கை வைப்பதாகும் என்றும், மகாராணியார் அளித்த வாக்குத் தத்தத்தை மீறியதாகும் என்றும் கூப்பாடு போடுவதெல்லாம் தங்களுடைய சோம்பேறி வாழ்க்கைக்கும் ஊரார் உழைப்பில் உண்டுகளிக்கும் மானங்கெட்ட வாழ்க்கைக்கும் ஆபத்து வந்துவிடுமே என்கின்ற பேராசைச் சுயநலம் காரணமே அல்லாமல் மற்றபடி மதத்துக்கும் ஜாதிக்கும் சம்பந்தம் இல்லை என்பது நமது அபிப்பிராயமாகும்.

ஜாதிப் பாகுபாடுகள் இந்திய நாட்டின் மேன்மைக்கும் சுயமரியாதைக்கும் மாத்திரம் கேடாயிருப்பதல்லாமல் மனித சமூகத்தின் சமாதானத்துக்கும் சாந்திக்குமே விரோதமாய் இருக்கிறது. ஜாதிக் கொடுமையானது இந்த நாட்டிலுள்ள பார்ப்பானைத் தவிர மற்ற ஒவ்வொரு மனிதனையும் கவலைக்கும் இழிவுக்கும் உள்ளாக்கி இம்சித்து வருகிறது.

கிறிஸ்தவர்களும், துருக்கர்களும் இந்துக்கள் அல்லவானாலும் அவர்களும் தீண்டத்தகாதவர்களாகவே அநேக இந்துக்களால் சிறப்பாக சனாதனிகளால் மதிக்கப்படுகிறார்கள்.

ஆதலால் இந்த மாதிரியான கொடுமையும் அறிவீனமும் ஆபாசமுமான ஜாதி பாகுபாட்டை அழித்தெறிய வேண்டியது சமதர்மவாதிகளின் முதற் கடமையாகும்.

குடி அரசு  கட்டுரை  21.04.1935

You may also like...