20 தமிழர்கள் கொடூரக் கொலை: தமிழக அரசு அலட்சியம் தலைமைச் செயலகம் முற்றுகை: கைது

20 தமிழர்கள் கொடூரக் கொலையில் தமிழக அரசின் அலட்சியத்தைக் கண்டித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஏப்.16 அன்று பகல் 11 மணியளவில் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மீ.த. பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), வே.பாரதி (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), செந்தில் (இளந்தமிழகம்), கோ. பாவேந்தன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), சதிஷ் (சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை), மா.சேகர் (தொழிலாளர் சீரமைப்பு), தெய்வமணி (அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்) ஆகியோர் தலைமையில் அந்தந்த அமைப்புகளைச் சார்ந்த 300 தோழர்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
தமிழக அரசே!
• தமிழர் இருபது பேர் படுகொலையில், ஏழு பேர் தமிழக எல்லைக்குள்ளிருந்துதான் ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் ஆள்கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்க. மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றத்தில் உடனடியாக முறையிடுக.
• இது குறித்து இந்திய அரசிடம் சி.பி.ஐ. விசாரணை கோருக.
• தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர்கள், உயரதிகாரிகள் கொண்ட குழு ஆந்திரச் சிறைகளில் அடைபட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலையையும், அவர்கள் பற்றிய முழு விவரங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை ஒன்றை வெளியிடுக. இது தொடர்பாக சிறைகளில் வாடும் தமிழர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய ஆந்திர அரசை வலியுறுத்துக.
• செம்மரம் வெட்டுவதற்கென்று அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து மேல்நடவடிக்கை எடுத்திடுக.
• இருபது தமிழர் படுகொலை தொடர்பாக ஆந்திர அரசைக் கண்டித்தும், இது தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக.
• தமிழகத்தில் வாழ வழியற்று கூலிக்கு மரம் வெட்ட மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் நிலைக்குத் தள்ளப்படாதவாறு வடதமிழ்நாட்டுப் பழங்குடியினர் உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வைச் சீர்செய்ய சிறப்புத் திட்டங்கள் வகுத்து உடனடியாக நடைமுறைப்படுத்துக.
இந்திய அரசே!
• இருபது தமிழர் படுகொலை தொடர்பாக ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இக்கொலை குறித்து சி.பி.ஐ. புலனாய்வுக்கு உடனே ஆணையிடுக.
• செம்மரக் கடத்தல் குறித்தும் இது தொடர்பாக நடந்துள்ள மோதல் கொலைகள் குறித்தும் பொறுப்பில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு முழுமையான நீதி விசாரணை நடத்துக.
• இந்திய அளவில் மோதல் கொலைகள் தொடர்பான தன் நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடுக.
• உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவைப் பிறப்பித்துள்ள ஆணைகளுக்கு இணங்க மோதல் கொலைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் ஒரு தனிச் சட்டமியற்றுக.

என்ற கோரிக்கைகள் போராட்டக் குழு சார்பில் வலியுறுத்தப்பட்டன.

பெரியார் முழக்கம் 23042015 இதழ்

You may also like...

Leave a Reply