தலையங்கம் – ஜாதி வெறி சக்திகளின்கொலை வெறி

தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஜாதிவெறி சக்திகளின் ஜாதிவெறி நடவடிக்கை களையும், இதனை கண்டு கொள்ளாத தமிழக அரசையும் திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சமீப காலமாக தமிழ் நாட்டில் ஜாதிவெறியர்களின் நடவடிக்கைகள் நவீன ஊடகங்கள் வழியாகவும் மிகவும் வெளிப்படையாக நடந்தேறிக் கொண்டிருக் கிறது. ஏற்கனவே ‘வாட்ஸ் அப்’ எனும் நவீன தொடர்பு ஊடகம் மூலம்பொறியாளர் கோகுல் ராஜ் கொலையில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவன தலைவர் யுவராஜ் எனும் ஜாதிவெறியர், ஜாதி வெறியூட்டும் வகையிலும், காவல்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் விடுத்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் பேசி அதனை அனைவரும் கேட்கும் வகையில் பரப்பினர்.

தற்பொழுது முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பின் நிறுவனர், தலைவர் செங்குட்டுவன் வாண்டையார் எனும் ஜாதி வெறியர் மிகவும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தும், காவல்துறைக்கு சவால் விடுத்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலிலும் இறங்கி அதனை வாட்ஸ் அப் உரையாடல் மூலம் அனைவருக்கும் பரப்பி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது வடசேரி எனும் ஊர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடந்த 20.08.2015 அன்று பட்டுக்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்று விட்டு, மன்னார்குடிக்கு சென்றார். அப்போது வழியில், வடசேரி என்னும் ஊரில் கொடியேற்றி விட்டு செல்ல திட்டமிட்டு, காவல்துறையிடம் ஏற்கனவே அனுமதி வாங்கி இருந்தனர். ஆனால், அன்று பகல், 2 மணிக்கு, திருமாவளவன் வடசேரிக்கு புறப்பட்ட போது, அவர் வடசேரியில் கொடியேற்றுவதை கண்டித்து வடசேரி ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்த, 40க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்துள்ளனர்.

மேலும் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில் ஒரு கும்பல், பயங்கரப் பெட்ரோல் குண்டுகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செல்லும் போது, அவர் மீது அந்தக் குண்டுகளை வீச திட்டமிட்டதாக காவல்துறை தெரிவித்து திருமாவளவன் அவர்களை வடசேரி வருவதை காவல்துறையே தடுத்துள்ளனர். அவரை வேறு வழியில் மன்னார் குடிக்கு காவல்துறை அழைத்து சென்றுள்ளது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், அனைத்து உரிமைகளும் சமமாக அனைவருக்கும் உள்ளது எனவும் இந்நாட்டில் யாரும் எங்கும் செல்ல அனைவருக்குமான உரிமை உண்டு என சொல்லப்படுகிறது. ஆனால் தோழர் திருமாவளவனை ஒரு ஊருக்கு செல்ல விடாமல் தமிழக காவல்துறையே தடுத்திருப்பது ஜாதிவெறியர்களுக்கு துணை போகும் செயலே.

ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி பெற்ற வடசேரி எனும் ஊரில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை முழு பாதுகாப்பு வழங்கி அந்நிகழ்சியை நடத்த துணைபுரிவதுதான் காவல்துறையின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் கடமையும், இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை உறுதிப்படுத்தும் செயலும் ஆகும். மாறாக காவல்துறை இவ்வாறு நடந்திருப்பது தமிழ்நாட்டில் காவல்துறை செயலிழந்திருப்பதையும், ஜாதிவெறியர்கள் சர்வ சுதந்திரமாக செயல்படுவதையும் காட்டுகிறது.

இவ்வளவுக்கும் நடந்த பிறகும் தமிழக காவல் துறை செங்குட்டுவன் வாண்டையார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஜாதி வெறியர்களுக்கு மீண்டும் மீண்டும் துணைபோகும் செயலாகும்.

தோழர் திருமாவளவன் மீது நடந்த கொலை முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இத்தகைய ஜாதி வெறி சக்திகளின் செயல் பாடுகளை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதிவெறி சக்திகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அவர்களின் உரிமைப் போராட்டத்தில் தொடர்ந்து களத்தில் நிற்கும்.

தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் ஜாதிவெறி சக்திகளுக்கு எதிராக ஜனநாயக, இடதுசாரி சக்திகள் ஒன்றிணைந்து போராட முன் வரவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் அறைகூவி அழைக்கிறது.

கொளத்தூர் மணி

தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 27082015 இதழ்

You may also like...

Leave a Reply