ஆர்.எஸ்.எஸ் கல்வி மாநாடு நடத்துவது ஏன்?
கேரள மாநிலம் காலடியில் நான்கு நாள் கல்வி மாநாடு ஜூலை 25 முதல் 28 வரை நிகழப்போகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், ஒன்றிய ஆட்சியின் உயர்கல்வி நிறுவனத் தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், இவர்களோடு ஆன்மீகம் பேசும் மதத் தலைவர்கள் இதில் பங்கேற்கப் போகிறார்கள்.
மாநாட்டைக் கூட்டி இருப்பது ஒன்றிய ஆட்சியா? கல்வியாளர்களா? கேரள மாநில அரசா? இல்லை. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூட்டி இருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையைத் தீவிரமாக செயல்படுத்துதல், பாரம்பரிய கல்வி முறையை முன்னெடுத்தல் என்பது பற்றி இவர்கள் ஆராயப் போகிறார்களாம். ஒன்றிய கல்வி அமைச்சகம் இந்த பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஒப்படைத்து விட்டது போலும்.
நாட்டை ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றுவதற்கு அடிப்படையாக கல்வியை காவிமயமாக்க வேண்டும் என்ற உறுதியான முடிவோடு முயற்சிகள் நடக்கின்றன. காந்தி கொலையில் தொடர்புடைய அமைப்பு, கலவரங்களை உருவாக்கிய அமைப்பு என்று பல விசாரணை ஆணையங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இதுவரை சட்டப்படி எந்த பதிவும் செய்யப்படாத ஒரு அமைப்பு. பல கோடி ரூபாய் செலவில் கட்டிடங்களை கட்டி வருகிறது. டெல்லியில் அண்மையில் 12 மாடி கட்டிடங்களை தனது தலைமைச் செயலகமாக கட்டி முடித்துள்ளது. வருமான வரி உள்ளிட்ட எந்த வரிவிதிப்பும் இவர்களுக்கு கிடையாது. ஆனால் பாஜக பிரதமர்களை தேர்வு செய்யக்கூடிய உரிமையை தன்னிடம் வைத்துள்ளது. 75 வயதுக்கு மேல் இருப்பவர்கள் பிரதமராக வர முடியாது என்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்களை ஒதுக்கியது. இப்போது மோடிஅடுத்த பிரதமர் ஆக முடியாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் குறிப்பால் உணர்த்தி இருக்கிறார். பெண்களை தங்கள் அமைப்பில் சேர தடைவிதித்துள்ளார்.
ஒன்றிய ஆட்சி திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது. இதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை, பள்ளிப் படிப்பை தொடர விடாது, இடைநிற்றலை ஊக்குவித்தல், 3,5,8 வகுப்புகளில் விளிம்பு நிலை குழந்தைகளை வடிகட்டுதல் போன்ற ஆபத்தான திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன. இதை ஏற்க மறுத்து தமிழ்நாடு, தனக்கான ஒரு கல்விக் கொள்கையை அறிவித்து இருக்கிறது.
இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான(SSA) நிதியை வழங்குவோம் என்று மிரட்டி ரூ.2172 கோடி நிறுத்தி வைத்து விட்டார்கள். இந்த நிதி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியே மும்மொழித் திட்டத்தை செயல்படுத்தாமல் நிறுத்திவிட்டது. ஆனால் அந்த ஆட்சிக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை நிறுத்தாமல் வழங்கி வருகிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாக்கியது தான். ஆர்.எஸ்.எஸ் கல்வி அமைப்பான பாரதிய சிக்க்ஷா மண்டல், “எங்களது 60 விழுக்காடு ஆலோசனைகளை இந்த கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது” என்று வெளிப்படையாகவே அறிவித்தது. கஸ்தூரி ரங்கன் ஒரு கல்வியாளர் அல்ல, அவரது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை மதிப்பீடு செய்தவர் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பில் முக்கிய உறுப்பினரான ஜே.எஸ் ராஜ்புத் பள்ளிகளுக்கான பாடத்திட்ட குழுவிலும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் ஊடுருவி இருந்தனர்.
மாநில கல்வித் துறையின் கருத்தைக் கூட கேட்கத் தயாராக இல்லை. கருத்துக்களை கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியும் அதை புறந்தள்ளி விட்டது.
1953-ல் இராஜாஜி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் தமிழ்நாட்டில் அரசியல் போக்கையே திருப்பி விட்டது. காமராஜரின் சமூக நீதி சகாப்தம் தொடங்கியது. கடந்த 2023 ஆம் ஆண்டு மோடி தொடங்கி வைத்த பி.எம் விஸ்வகர்மா என்ற திட்டமும் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் போன்றதுதான். 18 பரம்பரை தொழில் செய்த சமூகத்தினரை மீண்டும் குலத் தொழிலுக்கு திருப்பும் திட்டமாக இது வந்தது. இதை ஏற்க மறுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இதற்கு மாற்றாக எந்த ஜாதியினரும் எந்த தொழிலையும் செய்யலாம் என்ற சமூகநீதி தொழில் திட்டத்தை அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
மும்மொழித் திட்டத்தில் இந்தி கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தி தவிர வேறு மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கவில்லை. அதற்கான் ஆசிரியர்கள் நியமனமும் இல்லை. அதே நேரத்தில் கணிதம், வானியல், தத்துவம், மொழியியல், நாடகம், யோகா போன்ற சமகால பாடத்திட்டங்களுடன் சமஸ்கிருதம் இணைக்கப்படும் என்று அழுத்தமாக கூறுகிறது. இந்த கல்விக் கொள்கை சமகால அறிவியல் வளர்ச்சியில் சமஸ்கிருதத்தை இவர்கள் எப்படி இணைக்கப் போகிறார்கள்?. சமூக அறிவியல் வளர்ச்சியால் சமஸ்கிருதம் என்ற பார்ப்பனியப் பண்பாடு அழிந்து போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள்.
தேசிய மொழியாக சமஸ்கிருதமே இருக்க வேண்டும், அந்த காலம் வரும் வரை இந்தி தேசிய மொழியாக இருக்கலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு கொள்கையை உருவாக்கி தந்த கோல்வாக்கர் கருத்து. இப்போது ஆர்எஸ்எஸ் தனது காய்களை அதை நோக்கியே நகர்த்த தொடங்கியிருக்கிறது. பாரம்பரிய கல்வி,பாரம்பரிய அறிவு என்று இவர்கள் பேசுவது பார்ப்பனிய சமஸ்கிருத பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சிதான். இதை முறியடிப்பதற்கு சமூகநீதி பண்பாட்டை நாம் உயர்த்திப் பிடித்தாக வேண்டும்.
பெரியார்முழக்கம்இதழ்24072025
