நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் 2024 தேர்வு முடிவுகள், இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கடந்த வரு டங்களில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே 720/720 மதிப்பெண் பெற்று வந்த நிலை யில், இந்த வருடம் 67 பேர் 720/720 மதிப்பெண் பெற்றுள் ளனர். தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட ‘இறுதி விடைகளுடன்’ மாணவர்கள் தனது OMR (Optical Mark Recognition Sheet) நகலை ஒப்பிட்டுப் பார்த்த போது கிடைத்த மதிப்பெண்ணுக்கும், அறிவிக்கப்பட்ட மதிப்பெண்ணுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்ததால், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனையடுத்து உச்சநீதி மன்றத்திலும், பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்க ளிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில், ‘நீட் தேர்வு மைய’ அதிகாரிகளே பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று கேள்வித்தாளைக் கசியவிட்டது, ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் தொடர்ச்சியான தேர்வு எண் கொண்ட 6 பேர் 720/720 பெற்றது, 1563 மாணவர்களுக்கு விதி முறைகளை மீறி சட்ட விரோதமாக “கருணை மதிப்பெண்” அளித்தது போன்ற பல முறைகேடுகள் நடந்தேறியுள்ளன. தேர்வு நடத்தும் நிறு வனம், தேர்வுகள் நடைபெறும் முன்னரே அதன் விதிமுறைகளையும், மதிப்பெண் குறித்த விளக்கங்க ளையும் வெளியிடவேண்டும். தேர்வு முடிந்த பின் எந்த ஒரு விதியையும் தளர்த்தவோ, நீக்கவோ, சேர்க்கவோ முடியாது. ஆனால் அதற்கு மாறான தேசிய மருத்துவ முகமையின் (NTA) இந்தச் செயலை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தகுதியும், திறமையும்
நீட் தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பார்கள் என்று சொல்லப் பட்டது. கடந்த 8 வருடங்களாக நீட் தேர்வு அடிப்படை யில் நடத்தப்பட்ட சேர்க்கையின் புள்ளிவிவரங்கள் அதைத் தவறு என்று நிரூபித்துள்ளன. 2016-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்தப் பட்டது. (85% இடங்கள்) மருத்துவப் படிப்பில் சேர உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்க ளில் 50%-க்கு குறைவாக எடுத்த மாணவர்கள் எம்பிபி எஸ் சேரமுடியாது. மேலும் 2016 வரை +2 மதிப் பெண்களின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றவர்களின் குறைந்தபட்ச மதிப் பெண்கள் (cut off marks) சராசரியாக 200-க்கு 180-க்கு மேல் இருந்திருக்கிறது. எனவே குறிப்பிட்ட 3 பாடங்களிலும் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) 180 மதிப்பெண்களுக்கு மேல் (அதாவது 90%) எடுப்பவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றனர். ஆனால் ‘நீட் தேர்வில்’ ‘Precentile’ (பெர்சன் டைல்) முறையில் குறைந்தபட்சம் 40 முதல் 50 மதிப் பெண் எடுப்பவர்கள் கூட எம்பிபிஎஸ் சேரமுடியும்.
இதனால் பணம் இருந்தால் நீட் தேர்வில் 16% முதல் 25% மதிப்பெண் பெற்றவர்கள்கூட தனியார் மருத்து வக்கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேரமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. 350 மதிப்பெண் பெற்ற ஏழை மாணவனுக்கு பணமில்லையென்றால் ‘மெடிக்கல் சீட்’ மறுக்கப்படும். ஆனால் 250 மதிப்பெண் வாங்கிய பணக்கார மாணவன் மருத்துவராக முடியும். மருத்து வம் படிக்கத் தேவையான மூன்று பாடப்பிரிவுகளில், ஒன்று அல்லது இரண்டு பாடப்பிரிவுகளில் ‘0’ (பூஜ்யம்) மதிப்பெண் பெறுபவர் கூட நீட் தேர்வு முறையில், எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு தகுதி பெற முடியும். உதாரணமாக உயிரியல் பாடத்தில் ‘0’ மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவர், இயற்பியல் மற்றும் வேதியி யல் பாடங்கள் சேர்த்து கட் ஆஃப் (CUT OFF) மதிப் பெண்ணிற்கு மேல் எடுத்தால், ஒரு மருத்துவ சீட்டை விலைக்கு வாங்கமுடியும். இதில் தகுதி மற்றும் திறமை எங்கே இருக்கிறது? “தகுதியுள்ள மாணவர்களுக்கு பண வசதி இல்லை யென்றாலும்கூட மருத்துவ சீட் கிடைக்கவேண்டும். வணிகமயமாக்கப்பட்ட மருத்துவக் கல்விச் சூழலில் இத்தகைய மாணவர்களுக்கு இடம் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும்” என்று தான் டாக்டர் ரஞ்சித் ராய் சௌத்திரி கமிட்டியும், சுகாதாரம் குறித்த 92வது நாடாளுமன்ற நிலைக்குழுவும், உச்ச நீதிமன்றமும், நுழைவுத் தேர்வைத் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவச் சேர்க்கைக்கு வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கு மாறாக நீட் தேர்வில் மாநில அரசு மருத்துவக்கல்லூரிகளையும் இணைத்ததன் மூலம் மருத்துவத்தில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்ப தை மோடி அரசு தடுத்து வருகிறது.
“கருணை மதிப்பெண்” ஊழலின் ஓர் அவதாரம்
நீட் தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்கள் (180 கேள்விகள் – ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப் பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 1 மதிப் பெண்ணுடன் சேர்ந்து 5 மதிப்பெண்கள் கழியும்); எனவே ஒரு தவறான விடைக்கு 5 மதிப்பெண்கள் கழித்து 720க்கு 715 என்று தான் வர முடியும். ஆனால் சில மாணவர்கள் 717, 719 போன்ற மதிப்பெண்கள் பெற்ற தாக அறிவித்ததன் பின்னணியில் 1563 மாணவர்களு க்கு மட்டும் “கருணை” மதிப்பெண் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டது தெரியவந்தது. 24லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 1563 பேருக்கு மட்டும் “கருணை மதிப்பெண்” அளிப்பது மோடி அரசின் கல்வித் துறையில் நடக்கும் ஊழல் இல்லையா?
‘தேர்ச்சி’ – ஓர் ஏமாற்று வேலை
‘நீட் தேர்வில்’ சுமார் 12.5 லட்சம் பேர் ‘தேர்ச்சி’ பெற்ற தாக அறிவித்துள்ளனர். சுமார் 1லட்சம் மருத்துவ இடங்களே உள்ள நிலையில், கட் ஆஃப் மார்க் வாங்கினாலே ‘தேர்ச்சி’ என்று கூறுவதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் எல்லோருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனால் கிராமப்புற, ஏழை எளிய மற்றும் நடுத்தரவர்க்க மாணவர்கள் கட் ஆஃப் மார்க்கி ற்கு மேல் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ‘அரசு மருத் துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு’ கிடைக்காதபோது தனி யார் கட்டணக் கொள்ளைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஏமாறும் நிலை உள்ளது.
டம்மி (DUMMY) பள்ளிகள்
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது முதல், +1, +2 மாணவர்கள் (மெட்ரிக்குலேசன் மற்றும் சிபிஎஸ்இ), வழக்கமான பள்ளிக்குச் சென்று அனைத்துப் பாடங்க ளையும் படிப்பது என்ற நிலை மாறி, “ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி முறையில்” (Intergrated Schooling System)குறிப்பிட்ட 3 பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது வலியுறுத்தப்படு கிறது. பள்ளிகளில் கற்பிக்கப்படும் நேரம் முடிந்து தனி யாக, பயிற்சி (கோச்சிங்)மையங்களுக்கு செல்வதற்கு பதிலாக, ‘கோச்சிங் நிறுவனங்கள் தனியார் பள்ளிகளுடன் கைகோர்த்து “கோச்சிங் மையங்களையே” பள்ளிகளாக மாற்றி நடத்தி வருகின்றனர். இதன் மூலம் “பள்ளிகளில் இருக்கவேண்டிய கல்விச் சூழல் மற்றும் கற்றல் சூழலும்” புறக்கணிக்கப்படுகின்றன. இத்த கைய டம்மி (DUMMY) அல்லது போலியான பள்ளிகள் தமிழ்நாட்டிலும் உருவாகிவிட்டன.
‘நீட் கோச்சிங்’ ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின் தனியார் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் தோன்றியுள்ளன. பல லட்சங்களைச் செலவு செய்து பயிற்சி எடுத்தால் மட்டுமே ‘நீட்’ தேர்வில் நல்ல மதிபெண்கள் கிடைக்கும் என்ற நிலையில், ஆயிரக்கணக்கான பெற்றோர் தங்கள் ‘குழந்தைகள்’ மீது, ‘முதலீடு’ செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல் முறைத் தேர்வு பெறவில்லையென்றால், அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் முயற்சி செய்கிறார்கள். கடந்த சில வருடங்க ளில் தேர்ச்சி பெற்றவர்களில் 50% – 70% மாணவர்கள் ‘மீண்டும்’ (Repeaters) தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர் கள்தான். எனவே, நீட் பயிற்சிக்கு பிளஸ் 1-ல் தொடங்கி, மொத்தம் 2 முதல் 5 வருடங்களுக்குப் பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.

பி.ஜி. (PG) – நீட் தேர்வின் பாதிப்பு (PG NEET)
1500-க்கும் மேற்பட்ட முதுகலை மருத்துவ இடங்க ளுடன் (MD.,M.S.,) தமிழ்நாடு அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. 2012-க்கு முன்பு வரை, தமிழ் நாட்டில் இருந்த 15% இடங்களை மட்டுமே அகில இந்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கி வந்தனர். 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வி னால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 50 சதவீத இடங்க ளும், அகில இந்தியத் தொகுப்பிற்கு 50 சதவீத இடங்க ளும் ஒதுக்கப்படுகின்றன. உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் (SUPER SPECIALITY COURSES) 100 சதவீத இடங்களும் அகில இந்தியத் தொகுப்பிற்கே ஒதுக்கப்படுகிறது. இதனால் தமிழக அரசு, தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டி எழுப்பிய சுகாதாரக் கட்டமைப்பைப் பயன்படுத்தி மற்ற மாநிலங்களி லிருந்து வரும் மருத்துவர்கள் பயன்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஓர் இடம்கூடக் கிடைக்காமல் போகும் அபாயம் எழுந்துள்ளது. கடந்த காலங்க ளில் 50% அரசுப்பணிக்கான உள் ஒதுக்கீடு இருந்த காரணத்தால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்வேறு சிறப்பு மருத்துவர்களும், மருத்துவ ஆசிரி யர்களும் (Super Specialists & Medical Teach ers) கிடைத்து வந்தார்கள். தமிழகத்தில் தற்போது 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் ‘நீட் தேர்வு முறையில்’ முது கலை படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டதன் விளைவாக மருத்துவ ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, அரசு மருத்துவக் கல்லூரி / மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சுகாதாரப் பணிகளைப் பெருமளவு பாதிக்கிறது. நாளடைவில் போதிய மருத்து வர்கள் இல்லை என்று காரணம்கூறி, அரசு மற்றும் பொது சுகாதாரக் கட்டமைப்புகளும் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும்.
‘நீட்’ தேர்வுகளின் அடிப்படை நோக்கமே பொது சுகாதாரக் கட்டமைப்பைத் தகர்த்து தனியார்ம யத்தைப் புகுத்துவதுதான். ஏழை எளிய மாணவருக்கு எதிரான, மாநில உரிமையைப் பறிக்கிற, முறைகேடு களின் முழு வடிவமாகிவிட்ட நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டுமென்பதே நம் கோரிக்கை.
நன்றி: தீக்கதிர்

பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

You may also like...