தமிழ்நாடு வெற்றிக்கு கழகத் தோழர்களின் பங்களிப்பு!

பாஜகவுக்கும் அதற்கு பல்லக்கு தூக்கி வந்த அதிமுகவுக்கும் சரியான பாடத்தை தமிழ்நாடு தந்துள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் வென்று இந்தியா கூட்டணியில் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்து நிற்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த வெற்றிகளுக்கு பின்னால் பல இயக்கங்களின் கடும் உழைப்பு இருந்திருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே களமிறங்கியது. பாஜக – மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு இழைத்த துரோகங்களையும், தமிழக அரசின் சாதனைகளையும் தெருமுனைக் கூட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களை எந்த பொருளாதார வசதியும் இல்லாத கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் நடத்திக் காட்டினார்கள். குறிப்பாக சென்னையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள் இடைவிடாமல் நடத்தப்பட்டன. கழகத் தோழர்களின் இந்த உழைப்பு இந்த வெற்றிக்கு பங்களித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு மாதத்துக்கு மேல் சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து இந்தக் கொள்கைப் பணியை செய்த தோழர்களின் உழைப்பு வீணாகி விடவில்லை. பெரியார் மண்ணில் பார்ப்பனிய மத வெறி சக்திகள் முழுமையாக வீழ்த்தப்படும் வரை கழகத் தோழர்களின் இந்த பணி தொடரும்! தொடரும்! தொடர்ந்து கொண்டே இருக்கும்!!

கழகப் பொதுச்செயலாளரின் முகநூல் பதிவு (06.06.2024)

பெரியார் முழக்கம் 05.06.2024 இதழ்

You may also like...