‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ முடிவு இரத யாத்திரையை எதிர்த்து செங்கோட்டையில் மறியல்!

நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் காவி பயங்கரவாத நடவடிக்கைகள் பரவலாகி  வருகின்றன. தமிழ்நாட்டை தங்களது பிடியில் கொண்டு வரச் செய்யும் முயற்சியாக ஆர்.எஸ்.எஸ். பேரணிகளை நடத்தினார்கள். இச் செயலுக்கு ஒத்துப்போன தமிழ்நாடு அரசு, மோடியின் பொம்மை அரசாகவே இருந்துவருகிறது.

நிவேதிதா நூற்றைம்பதாவது ஆண்டு நினைவு இரதயாத்திரை மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் தொடங்கி வைக்க கோவையிலிருந்து சனவரி 22 முதல், பிப்ரவரி 22 சென்னை வரைநடந்து முடிந்துள்ளது.     27 மாவட்டங் களினூடாக 35 கல்லூரிகளுக்குள் நுழைந்து இரண்டு இலட்சம் மாணவர்களைச் சந்தித்து, 3000 கி.மீ பயணத்தை முடித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்னே மட்டும் வளர்மதி மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவை கல்வி நிறுவனங்களைக் காவி மயமாக்கும் முயற்சியின் பகுதியாகும்.

விஸ்வ ஹிந்து பரிசத்தின் ஏற்பாட்டில் அயோத்தி முதல் இராமேஸ்வரம் வரை “இராமராஜ்ய இரதயாத்திரை” என்ற பெயரில் கீழ்வரும் முழக்கங்களை முன்வைத்து பிப்ரவரி 13 அன்று  அயோத்தி யிலிருந்து புறப்பட்டிருக்கிறது.

உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்ட்ரம், கர்னாடகா, கேரளம் வழியாக தமிழ்நாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மார்ச் 20 அன்று செங்கோட்டை நுழைந்து, இராஜ பாளையம் வழி மதுரை வருகிறது. மதுரை – இராமேஸ்வரம் – திருநெல் வேலி – கன்னியாகுமரி, நாகர்கோவில் என மார்ச் 23 அன்று திருவனந்தபுரம் சென்று முடிகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நாடு முழுவதும் கலவரச் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த இரத யாத்திரை கட்டமைக்கப்பட்டுள்ளது. நாடெங்கிலும் பெரும் கலவரங் களிலும், மசூதி இடிப்பிலும் போய் முடிந்ததை நாடே அறியும். தமிழகத் தில் எதிர்ப்பியக்கம் கட்டமைக்க வேண்டிய தேவை கருதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் 06.03.2018 அன்று சென்னை பத்திரிகை யாளர் மன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக எல்லையில் ரதயாத்திரையை எதிர்த்து மறியல் நடத்த முடிவு செய்யப் பட்டது. கூட்டத்தின் முடிவுகள்:

  1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரதயாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குனரிடம் மனு அளிப்பது.
  2. இரத யாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே தடுப்பு மறியல் நடத்துவது என்றும் தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது என்றும்
  3. நெல்லை, மதுரை, விருதுநகர், தென்காசி, இராஜபாளையம் ஆகிய இடங்களில் போராட்டத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது என்றும்,
  4. காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு எனும் பெயரில் அனைத்து அமைப்பு களையும் ஒருங்கிணைப்பது. தொடர் செயல்பாடுகளை முன்னெடுப்பது என்றும்,
  5. மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப் பாளராக செயல்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  6. தொடர் செயல்பாடுகளில் சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்), சி.பி.ஐ (எம்-எல்), ம.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களைச் சந்திப்பது, மார்ச் 20 தடுப்பு மறியலில் பங்கேற்க அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்ட ஒருங்கிணைப்பு – தலைமை மீ.த.பாண்டியன் (தலைவர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி)

பங்கேற்ற தலைவர்கள்: கொளத்தூர் மணி (தலைவர்,  திராவிடர் விடுதலைக்கழகம்),  தி.வேல் முருகன் (தலைவர், தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சி), வன்னியரசு (துணைப் பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்கட்சி), தெகலான்பாகவி (தலைவர், எஸ்.டி.பி.ஐ.), ஜைனுலாபுதீன் (வழக்கறிஞர்அணிச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), முகம்மது சேக் அன்சாரி (துணைத் தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா), ஆதிதிராவிடன் (பொதுச்செயலாளர், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி), பொழிலன் (பொதுச்செயலாளர், தமிழக மக்கள் முன்னணி), தமிழ் நேயன் (தலைவர், தமிழ் தேச மக்கள் கட்சி), பாலன் (பொதுச்செயலாளர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி), தி.கார்ல்மார்க்ஸ் (ஆதித் தமிழர் கட்சி)

கூட்டமைப்பு முடிவின்படி 08-03-2018 அன்று தமிழகக் காவல் துறை தலைமை இயக்குனரைச் சந்திக்க தலைவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் – தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,  மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா  மற்றும்  எஸ்.டி.பி.ஐ. தலைவர் தெகலான்பாகவி,   விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துணைத் தலைவர் முகமது ஷேக் அன்சாரி,  திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் சென்றனர்.

தமிழகக் காவல்துறை தலைமை இயக்குனர் இராஜேந்திரனிடம் இராமராஜ்ய ரதயாத்திரையை தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று மனு அளித்தனர். அலுவலக வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தி யுள்ளதையும் மார்ச் 20 அன்று தமிழக எல்லை செங்கோட்டையில் இராம ராஜ்ஜிய இரதயாத்திரையை எதிர்த்து தடுப்பு மறியல் நடத்தும் திட்டத்தையும் அறிவித்தனர்.

பெரியார் முழக்கம் 15032018 இதழ்

You may also like...