நீதிமன்றத்திலும் தமிழ்’ வேண்டும் – பெரியார்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடக்கும் சூழலில் இந்த கருத்தை ஆதரித்து பெரியார் 1956இல் எழுதிய தலையங்கம்.

முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள் நேற்று மாலை சட்டக் கல்லூரித் தமிழ் இலக்கிய சங்கத்தை திறந்து வைத்துப் பேசுகையில், தமிழ்நாட்டின் நீதி மன்றங்களிலும் தமிழிலேயே நடவடிக்கை நடக்கப் போகிறது, இக்கல்லூரி மாணவர்கள் இப்போதே தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வைத்தியம், எஞ்சினியரிங் போன்ற விஞ்ஞானத் துறைகளில் தமிழ் உடனடியாக நுழைய முடியாவிட்டாலும் சட்டத்துறையிலாவது நுழைவது எளிதும், அவசரமும் ஆகும். ஏனெனில், சட்டமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடக்குமானால், ஏழை எளியவர்களில் பலர் இன்றைய பட்டதாரி வக்கீல்களைக் காட்டிலும் பல மடங்கு திறமையாக சட்ட நுணுக்கங்களை எடுத்துக்காட்டி வாதிடுவர் என்பதில் அய்யமில்லை. இன்றைய வக்கீல் உலகம் கொழுத்த பணம் சம்பாதிப்பதற்குக் காரணம், சட்டப் புத்தகங்கள் இங்கிலீஷில் இருக்கின்ற ஒரே காரணம் தவிர வேறல்ல. இவைகளைத் தமிழில் மொழி பெயர்த்துவிட்டால் நீதியின் விலை இவ்வளவு அதிகமாயிருக்காது.

மற்ற விஞ்ஞான நூல்களைப் போன்ற மொழிபெயர்ப்புத் தொல்லை சட்டப் புத்தகங்களின் மொழிபெயர்ப்பில் இல்லை. சிறப்பான ஒரு சில சொற் களை இங்கிலீஷிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு தனிநாடாகப் போகிறது. அது முதலே மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டு களிலாவது தமிழில் நடவடிக்கைகளும், தீர்ப்பு களும் இருக்க வேண்டு மென்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

பிறகு 1957 ஜனவரி முதல் உயர்நீதி மன்றத்திலும் தமிழில் நடக்க வேண்டுமென்று உத்தர விடலாம். தன்னைப் பற்றி நீதிமன்றத்தில் என்ன பேசப் படுகிறது என்பதைக் குற்றவாளி உணர்ந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கூறுகிறார்.

ஆம்! இதுதான் உண்மையான ஜனநாயகம் ஆகும். இன்று நீதிமன்றமும், கோவிலும் ஒன்றாகவே இருக்கின்றன. ஒன்றில் இங்கிலீஷில் பேசும் வக்கீல் இன்னொன்றில் சமஸ்கிருதத்தில் பேசும் அர்ச்சக வக்கீல்! வக்கீல் கூட்டமும், அர்ச்சகக் கூட்டமும், வயிற்றுப் பிழைப்பு நடத்துவது, மற்றவர்களின் மடமையை மூலதனமாக வைத்துதான். ஆகவே நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடப்பதை விரைவுபடுத்த வேண்டியது ஆட்சியாளர் கடமையாகும். இதற்கு முன்னணி வேலையாக ஒவ்வொரு சட்டப் புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பொறுப்பையும் ஆட்சியாளரே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களாகியுள்ள சட்ட நிபுணர்கள் தமிழ்நாட்டில் பலரிருக்கின்றனர். இவர்களைக் கொண்டு ஆட்சியாளர் இக்காரியத்தை சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடிக்கலாம்.

இதேபோல் ஆட்சி நிருவாகத்துறையிலும், இங்கிலீஷ் படித்த தமிழ்ப் புலமைப் பட்டதாரிகளையெல்லாம் சர்க்கார் பணிமனைகளில் ஏராளமாக நியமிக்க வேண்டும். இவர்களுக்குக் கொடுத்தவை போக மீதியிடங்களைத் தான் மற்ற பட்டதாரிகளுக்குக் கொடுக்க வேண்டும். நல்ல இங்கிலீஷ் படிப்புள்ள தமிழாசிரியர்களையும் சர்க்கார் பணிமனைகளில் பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்த வேண்டும். இதுமட்டுமல்ல, தமிழில் சுருக்கெழுத்தும், டைப்ரைட்டிங்கும் கற்றுத் தேர்ச்சி பெறக் கூடியவர்கள் ஏராளமாகத் தேவை. இத்தேர்வுகளுக்குச் செல்வோரில் 100க்கு ஒருவர், இருவருக்குத்தான் இன்று வெற்றி கிடைக்கிறது. இந்தக் கடுமையைத் தளர்த்த வேண்டும்.

அச்சுப்பொறியிலும் அவசர மாற்றம் ஏற்பட வேண்டும். தானே உருக்கி வார்க்கும் தமிழ் மானோடைப் (அடிnடிவலயீந) இயந்திரங்கள் பெருக வேண்டும். இம்முயற்சியில் கோவை நவ இந்தியா உரிமையாளர் தீவிரமாக ஈடுபட்டு வெற்றி கண்டிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். இத்தொழிற் சாலையில் உருவாக்கப்படுகின்ற ரோட்டரி அச்சு இயந்திரத்தையும் தமிழில் ஆக்கி மலை மலையாக குவிக்க வேண்டும். கல்லூரிகளிலும் தமிழிலேயே பாடங் கற்பிக்கப்பட வேண்டும் என்ற கல்வியமைச்சரின் ஆசை உண்மையா யிருக்குமானால் தமிழ் மொழிபெயர்ப்புப் படை (கூசயளேடயவiடிn யசஅல) ஒன்று தயாராக வேண்டாமா? இந்தப் பொறுப்பு யாருடையது? இதற்காக இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் பெருந்தொகை ஒதுக்கினால் தான் முடியும்.

இவற்றையெல்லாம் செய்யாவிடில் சில தமிழ்ப் புலவர்கள் தமிழ், தமிழ் என்று கூறுவது போல், மந்திரிகளும் பேச்சளவில் பேசி வருகிறார்கள் என்றுதான் கருத வேண்டி யிருக்கும். தமிழ் வளர வேண்டுமானால் இவ்வளவு துறைகளிலும் ஆக்க வேலைகள் நடக்க வேண்டும். இவைகளுக்கெல்லாம் இடுக்கண்ணாக உள்ள இன்றையத் தமிழ் நெடுங்கணக்கு சுருங்க வேண்டும். தேவையற்ற எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும். குறைந்த பட்சம் “விடுதலை”யின் எழுத்து மாற்றங்களை யாவது ஏற்றுக் கொள்ள வேண்டும். திரு.ஓமாந்தூர் ரெட்டியார் அவர்களின் ஆட்சியில் திரு.அவிநாசிலிங்கம் அவர்களது முயற்சியினால் முடிவு செய்யப்பட்ட தமிழ் எழுத்து மாற்ற உத்தரவைக் குப்பைத் தொட்டியில் போட்டார் திரு.ஆச்சாரியார் அவர்கள். இல்லையேல், இன்று எல்லாப் பாடப் புத்தகங்களும் அறிவுக்கேற்ற முறையில் திருந்திய எழுத்துக்களுடன் அச்சிடப்பட்டவைகளா யிருக்கும்.

தமிழில் ஆட்சி நடப்பதென்றால் சுளுவல்ல.  பல அவசர மாற்றங்கள், திருத்தங்கள், ஆக்கவேலைகள் செய்ய வேண்டும். ஆட்சி யாளரிடம் அகம்பாவ உணர்ச்சிகள் இருக்கக் கூடாது. மாற்றார் கூற்றிலும் உண்மையிருக்கும் என்ற பரந்த உணர்ச்சி வேண்டும்.

– ‘விடுதலை’ 01.09.1956

நிமிர்வோம் செப்டம்பர் 2017 இதழ்

You may also like...