சென்னை பல்கலையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

சென்னை பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத் துறையில் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சார்பில் 7.3.2012 அன்று பிற்பகல் 3 மணியளவில் பவள விழாக் கலையரங்கில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியாரின் மனித நேயம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவரும், பெரியார் நாத்திகக் கருத்துகளில் தீவிர ஈடுபாடு கொண்டு   பணி ஓய்வு பெற்ற பிறகு தனது இல்லத்தில் மாதம் தோறும் மனித நேய பகுத்தறிவுக் கூட்டங்களை நடத்தியவருமான மருத்துவர் பேராசிரியர் கே. நடராசன், தனது துணைவி யார் நினைவாக நிறுவிய அறக்கட்டளையே அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை யாகும்.

தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் அரசு வரவேற்புரையைத் தொடர்ந்து, விடுதலை இராசேந்திரன் ஒரு மணி நேரம் உரை யாற்றினார். ஆன்மீகவாதிகள், அறநெறி யாளர்கள், சான்றோர்கள் என்று எல்லோரும் மனித நேயத்தை வலியுறுத்தினாலும், பெரியாரின் மனித நேயம் உள்ளடக்கத்திலும் பண்புகளிலும் முற்றிலும் மாறுபட்டதையும், மனித நேயத்தின் உச்சமாக சுயமரியாதையை முன்னிறுத்தியும் பெரியாரின் கருத்துகளி லிருந்தே எடுத்துக்காட்டி உரையாற்றினார். மாணவ மாணவியர்கள் கழகத் தோழர்கள் ஏராளமாக குழுமியிருந்தனர். மருத்துவர் நடராசன் – சரோஜினி குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 15032012 இதழ்

You may also like...