அய்.நா. அலுவலகம் முன் தமிழர்களைத் தாக்கிய சிங்கள குண்டர்கள்

ஜெனிவாவில் நடக்கும் அய்.நா. கூட்டத்தில் பங்கேற்று வரும் மக்கள் உரிமை கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி டிஃபேன் ஜூனியர் விகடன் ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:

“இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனி அமர்வு இருந்தது. இலங்கையில் இருந்து வந்திருந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள். அமர்வுக்கு நேரில் வர முடியாத சரவணமுத்து என்பவர் ‘ஸ்கைப்’ மூலமாகப் பேசினார். அதே சமயம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி ஐரோப்பாவைச் சார்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 5000 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இலங்கை அரசும் அங்கே தனியாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக, இலங்கையில் இருந்து 126 பேரை அவர்களே அழைத்து வந்து இருந்தார்கள். இவர்கள் தவிர, அடியாட்களையும் அனுப்பி இருந்தது இலங்கை அரசு. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள், அந்த அடியாட்களால் தடுத்து விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன. இலங்கைக்கான ஜெனீவா தூதர் தலையிட்ட பிறகே தாக்குதல் நிறுத்தப்பட்டது. அமர்வு தொடங்கியதுமே ஐ.நா.வுக்கான மனித உரிமை கவுன்சிலின் தலைவர், ‘நேற்று நடந்த சம்பவங்கள் ஐ.நா. மன்றத்தையே அவமதிக்கக் கூடியது. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். இனிமேல், இதுபோன்று நடக்காது’ என்று வருத்தம் தெரிவித்தார்.

– ஜீனியர் விகடன் 21.3.2012

பெரியார் முழக்கம் 22032012 இதழ்

You may also like...