‘திராவிடர் விடுதலைக் கழகம்’ நடத்திய செங்கொடி நினைவு நாள்

தலைநகர் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் செங்கொடி நினைவேந்தல் பொதுக் கூட்டம் ஆக.26 அன்று மாலை சேத்துப்பட்டு வைத்தியநாதன் வீதியில் எழுச்சியுடன் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெறும் முதல் பொதுக் கூட்டமும் இதுவேயாகும். கூட்ட மேடைக்கு அருகே செங்கொடி நினைவுத் தூண் ஏற்கனவே கழக சார்பில் நிறுவப்பட்டிருந்தது.

சென்னை மாவட்டக் கழகத் துணை செயலாளர்  ஆ.வ. வேலு தலைமையில் கு. வெங்கடேசன் வரவேற்புரையுடன் கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தமிழக மக்கள் உரிமைக் கழக வழக்கறிஞர் பா. புகழேந்தி, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தியும், தூக்குத் தண்டனையை ஒழிக்குமாறு வலியுறுத்தியும் பேசினர்.

நிகழ்வில் தோழர் செங்கொடிக்கு கூட்டத்தினர் அகவணக்கம் செலுத்தினர். தோழர் இளஞ்சித்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார். எழும்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் மிகச் சிறப்பாக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பெரியார் முழக்கம் 30082012 இதழ்

You may also like...