“அன்னையர்களை” நெருப்பில் கொளுத்திய பார்ப்பனியம்

மே 8 – உலக அன்னையர் நாள். 1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெர்ஜினியாவில் உள்ள கிராம்டன் நகரில்தான் இது முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. இப்போது இந்தியா உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 2ஆவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

சமூக வரலாற்றில் பெண்களே சமூகத்துக்குத் தலைமை தாங்கினார்கள். தனிமனித சொத்துடைமை உருவான பிறகு தாய்வழிச் சமூகம், தந்தை வழிச் சமூகமாகியது. தனது வாரிசுகளுக்கே சொத்துகள் போய்ச் சேர வேண்டும் என்ற சமூக வேட்கை, பெண்களை ஆண்களுக்கு  அடிமைப்படுத்தியது.

இந்து பார்ப்பனிய மதம், அன்னையர்களை கொடுமைப் படுத்தியே வந்திருக்கிறது. வர்ணக் கலப்பைத் தடுப்பதற்கு கணவன் இறந்தவுடன் அவனை எரியூட்டும் நெருப்பில் அவனது மனைவியையும் உயிருடன் எரிக்கும் சமூகக் கொடுமைகளை பார்ப்பனர்கள் திணித்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள், இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடியதால், பிரிட்டிஷ் ஆட்சி உடன்கட்டை ஏறும் கொடுமைக்கு சட்டப்படி முற்றுப்புள்ளி வைத்தது. தடைச் சட்டத்தையும் மீறி பார்ப்பனர்கள் அன்னையர்களை ‘உடன்கட்டை’ ஏற்றி வந்திருக்கிறார்கள்.

இது குறித்து தஞ்சையில் நடந்த ஒரு கொடூர சம்பவம் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

“18ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் மராட்டிய பார்ப்பன இளைஞன் அரசுப் பதவியில் இருந்தான். அவன் மனைவி கோகிலா. பார்ப்பன இளைஞன் திடீரென மரண மடைந்தான். பார்ப்பனர்கள் கோகிலாவை அலங்கரித்து, சவத்துக்குப் பின்னால் சுடுகாட்டுக்கு உடன்கட்டை ஏற்ற ஊர்வலமாக அழைத்துப் போனார்கள். இதை வேடிக்கைப் பார்த்த ஆங்கிலேய இராணுவத்தினர், எப்படியாவது காப்பாற்ற நினைத்து கூட்டத்திடையே புகுந்து பெண்ணை மீட்டனர். பார்ப்பனர்கள் ஆத்திரமடைந்தனர். கணவர் உடலை மட்டும் சுடுகாட்டில் எரித்தவுடன், தப்பிச் சென்ற அந்தப் பெண்ணை வீடு திரும்ப விடாமல் பார்ப்பனர்கள் தடுத்தார்கள். “வீட்டுக்கு அழைத்து வந்தால் ‘ஜாதிப் பிரஷ்டம்’ செய்து விடுவோம்” என்று மிரட்டினர். அனாதையான அந்தப் பெண்ணை இராணுவத்தினரே வளர்த்து வரலாயினர். அந்தப் பெண்ணை தனது சொந்தப் பொறுப்பில் வளர்த்தவர் இராணுவத் தலைவர் கர்னல் லிட்டன். அவரது பங்களாவில் தங்கி ஆங்கிலம் கற்று தேர்ச்சிப் பெற்றாள். இவரே பிறகு, ‘ஸ்வாட்ஸ்’ பாதிரியாரால் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டு, ‘இராயல் குளோரித்தாள்’ எனும் பெயரையேற்றார். நெல்லை மாவட்டத்தில் சுவிசேஷ ஊழியத்தை முதலில் துவக்கி வைத்தப் பெண் இவர்தான்.” இது வரலாறு.

முன்னாள் பிரதமர் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் தூதுவராக பணியாற்றிய காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் தங்கள் நாட்டை பிரிட்டிஷார் அடிமைப் படுத்தி ஆட்சி செய்ததைக் கண்டித்து குறிப்பிட்டபோது அந்த அதிகாரி அளித்த பதில் மிகவும் முக்கியமானது. ‘நாங்கள் உங்கள் நாட்டில் ஆட்சி செலுத்தியதால்தான் இப்போது நீங்களே என்னுடன் உயிருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் இல்லாவிட்டால் உங்கள் கணவன் இறந்தபோதே உங்களையும் சேர்த்து நெருப்பில் போட்டு கொளுத்தியிருப்பார்கள். நாங்கள்தான் தடை சட்டம் போட்டு காப்பாற்றினோம்” என்று பதிலளித்தார். உடன்கட்டை ஏறல் முறையை ஒழித்தவுடன் பெண்களை, ‘விதவை’களாக்கியது பார்ப்பனியம். உயிருடன் அவர்களை மெல்ல மெல்ல சாகடித்தது. பார்த்தாலே ‘கெட்ட சகுனம்’ என்றார்கள். மொட்டை அடித்து, காவி புடவையும், வெள்ளை புடவையும் கட்ட வைத்து, மேலாடை அணிய தடை விதித்து, வீட்டின் மூலையில் ஒதுக்கித் தள்ளினார்கள். இன்று பார்ப்பன வீட்டு ‘விதவை’களே மொட்டை அடித்துக் கொள்வதில்லை. இளமையில் கணவனை இழந்தவர்கள், ‘மறுமணம்’ செய்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் வெட்டி கொலை செய்யப்பட்ட ஆச்சாரமிக்க பார்ப்பனர் சங்கர் இராமனின் மனைவியே மொட்டை அடித்துக் கொள்ள வில்லை. காவிப் புடைவை கட்டவில்லை.

பார்ப்பனியம் திணித்த சமூகக் கொடுமைகளை ஒவ்வொன்றாக ஒழித்ததால்தான் ‘அன்னையர்கள்’ சமூகத்தில் கவுரவம் மற்றும் சமத்துவத்துக்கான அடையாளங்களை வென்றெடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது என்றால், அதற்குள் பார்ப்பன மத ஆச்சாரங்கள், சம்பிரதாயங்களின் ஒழிப்பும் உள்ளடங்கியிருக்கிறது என்பதே வரலாற்று உண்மை.

பெரியார் முழக்கம் 12052016 இதழ்

You may also like...