மக்களுக்காக உண்டியலை திறந்து விட்ட பாதிரியார்!

நாடு இப்போது இருக்கும்  இக்கட்டான இந்த  சூழலில் … இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை , ஒரு சர்ச் பாதிரியார் வெளியிடுவார் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது!

கொச்சி அருகே காக்கநாடு பூக்காடுபடியில் உள்ள மார்ட்டின் டி போரஸ் கிறிஸ்தவ  தேவாலயத்தில் நடந்த சம்பவம் இது. அந்த சர்ச்சின்  பாதிரியார்தான், இந்த  அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த ஞாயிறு காலை பிரார்த்தனை முடிந்த  பின்,  சற்று நேரம் அமைதியாக இருந்த  அந்த சர்ச் பாதிரியார், சர்ச்சில் கூடி இருந்த மக்களை உற்று நோக்கினார். அவர்கள் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த கவலையை அவர் கண்கள் கண்டு கொண்டன.

“அன்பானவர்களே…  நமது தேவாலயத்தின் உண்டியல் இன்று பிற்பகலுக்கு பின் திறக்கப்படும்.” பாதிரியார் இப்படி சொன்னவுடன், மக்கள் கொஞ்சம் திகைத்துப் போனார்கள். தொடர்ந்தார் பாதிரியார் :

“பணம் தேவைப்படுபவர்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப உண்டியலில்  இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.. நீங்கள் எடுத்த பணத்தை உங்களுக்கு எப்போது  பணம் கிடைக்கிறதோ, அப்போது  உண்டியலில் போட்டால் போதும்..”

அவ்வளவுதான் …! அறிவிப்பைக் கேட்ட அனைத்து மக்களும் ஒன்று திரண்டனர் .

உண்டியல் திறக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குள், உண்டியலில் இருந்த ரூ.500, 1000 தவிர மீதி இருந்த  அத்தனைபணமும் காலியாகிவிட்டது.

“ஏன் பாதர் இப்படி செய்தீர்கள் …?” என்று கேட்டதற்கு , அந்த பாதிரியார் கண்கலங்க  சொன்ன பதில் :

“என்ன செய்வது…? இந்த பகுதியில் உள்ள சாதாரண  மக்கள்அரிசி வாங்ககூட சில்லறை இல்லாமல் மிகவும்  கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அரிசி இல்லாமல் சிரமப்படும்போது, ஆண்டவருக்காக உண்டியலில் இலட்சக்கணக்கான பணம் இருந்து என்ன பயன் ?”

“சரி பாதர்… யார் யார் எவ்வளவு எடுத்துச் சென்று இருக்கிறார்கள் என்பது…?”

“தெரியாது. அதற்கான கணக்கையும் நான் வைத்து கொள்ளவில்லை. இறை நம்பிக்கை உள்ள எல்லோரும்,  தாங்கள் எடுத்த பணத்தை உண்டியலில் திரும்பவும் கொண்டு வந்து  போடுவார்கள் என்ற நம்பிக்கை  எனக்கு இருக்கிறது” – என்றார் அந்த பாதிரியார்.                                    ( நன்றி : தினகரன் )

பெரியார் முழக்கம் 24112016 இதழ்

You may also like...